ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் துறை மாற்றம்? பெரிய அளவில் அதிகாரிகள் டிரான்ஸ்ஃபர் லிஸ்ட் ரெடி!
சென்னை: அரசுத்துறைச் செயலாளர்கள், உயரதிகாரிகள், மாற்றம் தொடர்பான லிஸ்டை முதலமைச்சரே நேரடியாக பார்த்து பார்த்து தயாரித்து இறுதி செய்து வைத்துள்ளதாக தகவல் கசிந்துள்ளது.
சுகாதாரத்துறையில் நீண்ட காலமாக கோலோச்சிக் கொண்டிருக்கும் ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ். வேறு முக்கியப் பதவிக்கு புரோமோஷன் ஆகலாம் எனத் தெரிகிறது.
ஏற்கனவே மூன்று முறை அதிகாரிகளை மாற்றுவது தொடர்பாக முடிவெடுக்கப்பட்டு அது கிடப்பில் போடப்பட்ட நிலையில், 4-வது முறையாக இப்போது எடுக்கப்பட்ட முடிவில் எந்த மாற்றமும் இருக்காதாம்.

அதிகாரிகள் மாற்றம்
முதலமைச்சர் ஸ்டாலினை பொறுத்தவரை அமைச்சர்களின் நடவடிக்கைகளை எந்தளவுக்கு நாள்தோறும் உன்னிப்பாக கவனித்து வருகிறாரோ, அதைவிட ஒரு படி மேலாகவே அதிகாரிகளின் செயல்பாடுகளை கவனித்து வருகிறார். துறைச் செயலாளர்களுடன் அவ்வப்போது ஆலோசனை கூட்டங்களை நடத்தும் முதல்வர் ஸ்டாலின், அரசின் அறிவிப்புகளையும், திட்டங்களையும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் சுணக்கம் காட்டும் அதிகாரிகள் யார் என்பதை அடையாளம் கண்டறிந்துள்ளாராம்.

நடவடிக்கை உறுதி
இதேபோல் சில ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அமைச்சர்களுடன் பனிப்போர் நடத்தும் தகவலும் முதல்வர் காதை எட்டியிருக்கிறது. இவற்றையெல்லாம் விட பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு இன்புட்ஸ்கள் கொடுக்கும் அதிகாரிகள் யார் என்பதையும் முதல்வர் முகாம் ஸ்மெல் செய்துவிட்டதாம். இதனால் தான் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மாற்றத்தை இனியும் தள்ளிப்போட வேண்டாம் என ஆட்சி மேலிடம் கருதுகிறதாம்.

4-வது முறை
ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை மாற்றுவது தொடர்பாக ஏற்கனவே மூன்று முறை லிஸ்ட் ரெடியாகியும் சில காரணங்களால் அது அப்படியே கிடப்பில் போடப்பட்டது. 4-வது முறையாக இப்போது ரெடியாகியுள்ள இந்த லிஸ்ட் விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அநேகமாக முதலமைச்சர் ஸ்டாலின் வேலூர், திருவண்ணாமலை என அடுத்த வாரம் வெளிமாவட்ட சுற்றுப்பயணம் செல்லும் போதும் அதிரடி மாற்றங்கள் அரங்கேறலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்.
ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மாற்றத்தின் போது சுகாதாரத்துறையில் இருந்து வேறு முக்கியப் பொறுப்புக்கு ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ். புரோமோஷன் செய்யப்பட வாய்ப்புள்ளதாம். ஆனால் அவர் அவ்வாறு முக்கிய இடத்திற்கு வந்துவிடக் கூடாது என்பதில் குறியாக உள்ள சிலர், அதற்கு எதிராக காய் நகர்த்தத் தொடங்கியிருக்கிறார்களாம். மொத்தத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் வட்டத்தில் அரசியல்வாதிகளை மிஞ்சிய அரசியல் நடந்து வருவதை மட்டும் நன்கு உணர முடிகிறது.

நேரடி கவனம்
ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மாற்றம் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் நேரடியாக கவனம் செலுத்தி லிஸ்டை பைனல் செய்திருக்கிறாராம். தன்னுடைய வேகத்துக்கு ஈடுகொடுக்கும் வகையில், அரசின் நலத்திட்டங்கள் கடைக்கோடி மக்களுக்கும் சென்றடையும் வகையில் அர்ப்பணிப்போடு மக்கள் பணியாற்றக் கூடிய அதிகாரிகளுக்கு சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்க தயாராகிவிட்டார் முதல்வர்.












Click it and Unblock the Notifications