நடிகர் அஜித்தை அரசியலுக்கு வரவேற்கும் அதிமுக.. கவனம் பெற்ற ஜெயக்குமார் வார்த்தை! கவனிச்சீங்களா?
சென்னை: நடிகர் விஜய் அரசியல் கட்சியை தொடங்கி உள்ளார். இந்நிலையில் தான் நடிகர் அஜித் குமாரை அரசியலுடன் தொடர்புப்படுத்தி கேட்கப்பட்ட கேள்விக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்த பதில் கவனம் ஈர்த்துள்ளது.
தமிழ்நாட்டில் நடிகர், நடிகைகள் அரசியல் ‛என்ட்ரி' கொடுப்பது ஒன்றும் புதிது அல்ல. எம்ஜிஆர், ஜெயலலிதா, சரத்குமார், விஜயகாந்த், கமல்ஹாசன் வரிசையில் கடைசியாக அரசியலுக்குள் நுழைந்துள்ளார் நடிகர் விஜய். இவர் தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கி உள்ளார்.

நடிகர் விஜயின் கட்சி லோக்சபா தேர்தலில் போட்டியிடவில்லை. அதேவேளையில் 2026ல் நடக்கும் தமிழக சட்டசபை தேர்தலில் அவரது கட்சி போட்டியிட உள்ளது. இதற்கான பணிகளை நடிகர் விஜய் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக விஜய் உச்சத்தில் உள்ளார். இந்நிலையில் தான் அவர் சினிமாவுக்கு முழுக்கு போட்டுவிட்டு தீவிர அரசியலில் ஈடுபட முடிவு எடுத்து இருக்கிறார். நடிகர் விஜயின் இந்த அரசியல் பயணத்தால் அனைவரின் பார்வையும் நடிகர் அஜித் குமார் மீது திரும்பி உள்ளது. அதாவது தமிழ் திரையுலகில் விஜய் - அஜித் ஆகியோர் முன்னணி நடிகர்களாக வலம் வருகின்றனர். நடிகர் விஜய் அரசியல் ‛என்ட்ரி' கொடுத்துள்ள நிலையில் நடிகர் அஜித்தும் அதுபோன்ற முடிவு எடுப்பாரா? என அவரது ரசிகர்களின் ஒரு தரப்பினர் எதிர்பார்க்கின்றனர்.
இந்நிலையில் தான் சென்னை திருவிக நகர் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட ஓட்டேரி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நீர் மோர் பந்தலை அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நேற்று திறந்து வைத்தார். உழைப்பாளர் தினமான மே 1ம் நாளான நேற்று நடிகர் அஜித்தின் பிறந்தநாளாகும். இந்நிலையில் தான் ஜெயக்குமார், நடிகர் அஜித்குமாருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர், ‛‛தொழிலாளர் தினத்தில் பிறந்த சகோதரர் அஜித்குமாருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம். பொதுவாக அஜித்துக்கு எப்போதும் ஒரு சிறப்பான நன்றியை நான் சொல்வேன். அவர் ஒரு தைரியசாலி. கோழைகளை எனக்கு பிடிக்காது. தைரியசாலியை தான் பிடிக்கும். எதையும் எதிர்கொள்ளும் எந்த சூழ்நிலையையும் எதிர்கொண்டு இடம் பொருளை எதிர்பார்க்காமல் தன் கருத்துக்களை எடுத்து வைக்க வேண்டும்.
அந்த வகையில் எனக்கும், அஜித்துக்கும் Wavelength உள்ளது. கருணாநிதி பாராட்டு விழாவில் திரைத்துறையினர் கட்டாயமாக அழைக்கப்பட்டதற்கு நடிகர் அஜித் நேரடியாக சென்று மேடையில் பேசும்பாது, ‛அழைத்து வரப்படவில்லை, இழுத்து வரப்பட்டேன்' என்றார். அஜித்தின் தைரியத்தை போற்றுகின்ற வகையில் தான் அவருக்கு வாழ்த்து கூறினேன். விடாமுயற்சியுடன் வெற்றி பெறுவதற்கு என்னுடைய நல்வாழ்த்துக்கள் மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்'' என்றார்.
இந்த வேளையில் பத்திரிகையாளர் ஒருவர், ‛‛நடிகர் அஜித் அரசியலுக்கு வந்தால் அதை விரும்புவீர்களா?'' என்று கேள்வி கேட்டார். அதற்கு ஜெயக்குமார், ‛‛நல்லது செய்வதற்கான பரந்த களம் என்பது அரசியல் தான். அப்படி அஜித் வந்தால் நாங்கள் வரவேற்போம்'' என்றார்.
அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இப்படி கூறியிருந்தாலும் கூட நடிகர் அஜித் அரசியல் விருப்பம் இன்றி உள்ளார். ஏற்கனவே அவர் தனது முடிவை வெளிப்படையாக தெரிவித்து விட்டார். கடந்த 2019லேயே, ‛‛அரசியலுக்கு வர விருப்பம் இல்லை. அரசியலில் நேரடியாகவோ, மறைமுகமாக வரும் எண்ணமில்லை'' என நடிகர் அஜித் குமார் தெளிவுப்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications