"ரூ. 29 ஆயிரம் கோடி.." தற்கொலைகளால் இப்படியொரு இழப்பா.. இந்தியாவில் மிக மோசமான நிலையில் தமிழ்நாடு
தற்கொலை சம்பவங்கள் தமிழ்நாட்டில் பெரிய இழப்பை ஏற்படுத்துகிறது.
சென்னை: இந்தியாவிலேயே தற்கொலை சம்பவங்கள் அதிகம் நடக்கும் மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் உள்ளது. இதனிடையே தற்கொலை சம்பவங்களால் ஏற்படும் சமூக பொருளாதார பாதிப்புகள் குறித்த ஆய்வு முடிவு வெளியாகியுள்ளது.
சமீப காலமாக அனைத்து மாநிலங்களிலும் தற்கொலை நிகழ்வுகள் அதிகரித்துள்ளது. மன அழுத்தம், நிதானம் தவறி எடுக்கும் முடிவு உள்ளிட்ட காரணங்களால் இதுபோன்ற மோசமான சம்பவங்கள் நடக்கிறது.
உலகில் நாம் எந்தவொரு பிரச்சினையைச் சந்தித்தாலும் அதற்கு நிச்சயம் தற்கொலை தீர்வு இல்லை. தற்கொலை எண்ணம் வந்தால் உடனே நண்பர்களுடன் பேச வேண்டும் என்று வல்லுநர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

ரூ.29,167.90 கோடி இழப்பு
தற்கொலை செய்து கொள்வதால் ஒருவரைச் சுற்றியிருக்கும் குடும்பம் மிக மோசமாகப் பாதிக்கப்படுகிறது. இக்கட்டான சூழலுக்கும் தள்ளப்படுகிறது. கடந்த 2021இல் மட்டும் தமிழ்நாட்டில் மொத்தம் 18,925 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதனிடையே இந்த தற்கொலை சம்பவங்களால் ஒட்டுமொத்தமாக ரூ.29,167.90 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகச் சென்னை ஐஐடி நடத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் தற்கொலையால் ஏற்படும் சமூக பொருளாதார பாதிப்பு என்று தலைப்பில் நடத்தப்பட்ட ஆய்வில் இது தெரிய வந்துள்ளது.

தற்கொலை சம்பவங்கள்
தற்கொலை சம்பவங்களால் கடந்த 2021ஆம் ஆண்டு மட்டும், மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியில் 1.3% செலவாகியுள்ளது தெரிய வந்துள்ளது.. இந்த ஆய்வில் தற்கொலை சம்பவங்களால் நேரடியாக அரசுக்கு ரூ.18,314.57 கோடி செலவாகியுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. மேலும், தற்கொலை தொடர்பான உடனடி ரெஸ்பான்சுகளுக்கு அதாவது அவசர சிகிச்சை, மருத்துவமனை உள்ளிட்ட இதர துறைகளுக்கு ரூ.4,048.31 கோடி செலவாகியுள்ளது. இந்த விரிவான ஆய்வு முடிவுகளை சுகாதாரத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் வெளியிட்டார்.

முக்கியம்
தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் தகவல்படி இந்தியாவிலேயே அதிக தற்கொலை சம்பவங்கள் நடக்கும் மாநிலங்களில் தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் இருக்கும் நிலையில், இது முக்கியமாகப் பார்க்கப்படுகிறது. சென்னை ஐஐடியில் மட்டும் கடந்த ஒரு மாதத்தில் இரண்டு தற்கொலை சம்பவங்கள் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 2021இல் பதிவான தற்கொலை சம்பவங்களை ஆய்வு செய்து இந்த அறிக்கையை நிஜினா எம் நாசர் மற்றும் வெங்கடேஷ் பாலசுப்ரமணியன் ஆகியோர் உருவாக்கியுள்ளனர்.

காப்பாற்ற முடியும்
இது குறித்து நாசர் கூறுகையில், "இந்த அறிக்கையின் முதன்மை நோக்கமே தமிழ்நாட்டில் தற்கொலை மற்றும் தற்கொலை முயற்சியால் எந்தளவு செலவாகிறது என்பதை கணக்கிடுவது ஆகும். இது நமக்குத் தெரிந்தால் தான் அதற்கேற்ப கொள்கைகளை உருவாக்க முடியும். தற்கொலைகள் குறைப்பதற்கான கொள்கைகளை உருவாக்குவது, விலைமதிப்பற்ற உயிர்களைக் காப்பாற்ற மட்டுமின்றி, இந்தியாவின் பொருளாதார நலனையும் வலுப்படுத்தவும் கூடும்" என்று அவர் தெரிவித்தார்.

அமைச்சர் மா சுப்பிரமணியன்
தற்கொலை செய்து கொண்டவரின் இழப்பால் ஏற்படும் உற்பத்தி இழப்பு, சிகிச்சைக்கான செலவு, உயிர் பிழைத்தவர்கள் மீதான உளவியல் தாக்கம், அதன் பிறகு அவருக்கு ஏற்படும் செலவுகள் என்று அனைத்தையும் கணக்கிட்டே இந்த தற்கொலையால் ஏற்படும் பொருளாதார தாக்கத்தைக் கணக்கிட்டுள்ளனர். இதுபோன்ற ஆய்வுகள் அதிகரிக்கும் இந்த பிரச்சினையைச் சமாளிக்க உதவும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். கொரோனாவால் ஏற்படும் சமூக பொருளாதார தாக்கம் குறித்து எந்தவொரு தரவுகளும் இல்லாத நிலையில், இது முக்கியமானதாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

சென்னை ஐஐடி வளாகம்
இதற்கிடையே சென்னை ஐஐடி வளாகத்தில் தற்கொலைகள் குறித்து கவலை தெரிவித்த சென்னை ஐஐடி இயக்குநர் வி காமகோடி, "கொரோனா காலத்தில் வீடுகளிலேயே நாம் முடங்கினோம். இதனால் சமூகத்தில் அனைவரும் தனித்து இருப்பது போன்ற சூழல் உருவானது. இதுவே முக்கிய காரணம். எங்கள் கேம்பசிஸில் நடக்கும் இதுபோன்ற சம்பவங்கள் வேதனை தருகிறது.. செப்டம்பர் முதல், ஐஐடி-மெட்ராஸில் மூன்று தற்கொலைகள் பதிவாகியுள்ளன. சுகாதாரப் பிரச்சினைகள், கல்வி அழுத்தம், நிதி சிக்கல்கள், தனிப்பட்ட பிரச்சினைகளால் இந்த தற்கொலை சம்பவங்கள் நடந்துள்ளன" என்றார்.

உதவி எண்கள்
எந்தவொரு பிரச்சினைக்கும் தற்கொலை செய்து கொள்வது தீர்வு இல்லை. தற்கொலை தொடர்பான எண்ணங்கள் எழுந்தால் கீழ்க்கண்ட எண்களைத் தொடர்பு கொள்ளலாம்
மாநிலத்தின் சுகாதார உதவி எண் 104
சினேகா தற்கொலை தடுப்பு உதவி எண் 044-24640050
ஆகிய எண்களைத் தொடர்பு கொண்டு உதவிகளைப் பெறலாம்.












Click it and Unblock the Notifications