Ilayaraja: "இசை கடவுள்" இளையராஜாவுக்கு இன்று பிறந்தநாள்! "நலம் வாழ எந்நாளும் நம் வாழ்த்துகள்"
சென்னை: இசைஞானி இளையராஜாவின் 82 ஆவது பிறந்தநாளையொட்டி அவருக்கு வாழ்த்துகளை சொல்ல, ரசிகர்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கிறார்கள். இளையராஜாவுடன் ரசிகர்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
முன்னதாக மகன் கார்த்திக் ராஜாவுக்கும் பேர பிள்ளைகளுக்கும் கேக் ஊட்டி பிறந்தநாளை இளையராஜா கொண்டாடினார். கடந்த ஆண்டு மகள் பவதாரணி புற்றுநோயால் இறந்ததால் அப்போது பிறந்தநாள் கொண்டாட்டம் இல்லை என இளையராஜா அறிவித்திருந்தார்.

இளையராஜாவின் உண்மையான பிறந்தநாள் ஜூன் 3ஆம் தேதிதான். ஆனால் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாள் ஜூன் 3 என்பதால் அவரை மதிக்கும் வகையில் தனது பிறந்தநாளை 2ஆம் தேதியே இளையராஜா கொண்டாடி வருகிறார்.
இளையராஜா
இளையராஜா என்றால் இசை, இசை என்றால் இளையராஜா என சொல்லும் அளவுக்கு அவர் அளப்பரிய சாதனைகளை இந்த சினிமா துறைக்குச் செய்துள்ளார். இவர் இசையமைத்த பாடல்கள் இன்றும் பலருக்கு இரவு தூக்கத்தை கொடுக்கும் தாலாட்டாகவும் காயப்பட்ட மனதிற்கு மருந்தாகவும் தனிமையை போக்குவதாகவும் அமைந்துள்ளது.
இளையராஜா இசை
இளையராஜாவின் இசையால் பலர் கோபத்தை அடக்கி கொலைக்காரர்களாக மாறாமல் இருக்கிறார்கள். இன்னும் பலர் தற்கொலை எனும் முடிவுக்கு செல்லாமல் தங்கள் சோகங்களை கடந்து செல்கிறார்கள் என சொல்லலாம். அவருடைய இசை தமிழ் ரசிகர்களின் நெஞ்சை வருடி விடுவது போல் அத்தனை மென்மையாக இருக்கிறது.
45 ஆண்டுகள்
சுமார் 45 ஆண்டுகளாக தமிழர்களின் வாழ்வில் ஊறிய இளைஞராஜா, தனது அண்ணனிடம் இசையை கற்றுக் கொண்டாலும் தன்ராஜ் மாஸ்டர்தான், இளையராஜாவுக்கு இசை நுணுக்கங்களை கற்றுக் கொடுத்துள்ளார்.
எம்.எஸ்.விஸ்வநாதன்
எம்.எஸ்.விஸ்வநாதன் இசைக்குழுவில் இணைய வேண்டும் என இளையராஜா ஆசைப்பட்ட நிலையில் அவருக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. "அன்னக்கிளி"யில் இவர் இசையமைத்த பாடல்கள் பட்டிதொட்டி எங்கும் பிரபலமடைந்தது.
25 ஆண்டு மேஜிக்
இதையடுத்து மௌனராகம் படத்தின் பின்னணி இசை மூலம் காலம் கடந்த காதலை இன்றளவும் அந்த பாடல்கள் கடத்திக் கொண்டுதான் இருக்கின்றன. இளையராஜா- எஸ்.பி. பாலசுப்பிரமணியன் இருவரும் இணைந்து 25 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு மேஜிக்கை நடத்தியுள்ளனர்.
பாரதிராஜா
மண் வாசம் மாறாத பாரதிராஜாவின் படங்களுக்கு இளையராஜா இசையமைத்துள்ளார். தொடர்ந்து நடிகர்கள் கமல், ரஜினி தொடங்கி இன்றைய சூரி வரை இசையமைத்துள்ளார். அவர்களின் அடுத்தகட்ட சினிமா வாழ்க்கைக்கும் இளையராஜாவின் பாடல்கள் வித்திட்டன என சொல்லலாம்.
மகள் பவதாரணி மறைவு
இசைஞானி இளையராஜாவின் பிறந்த நாளான ஜூன் 2 ஆம் தேதி ஒவ்வொரு ஆண்டும் அவர் தனது வீட்டில் வைத்து ரசிகர்களை சந்திப்பார். அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்வார். அந்த வகையில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் இளையராஜாவின் மகள் பவதாரணி புற்றுநோயால் மரணமடைந்தார்.
கொண்டாட்டம் இல்லை
இதனால் அந்த ஆண்டு தனது பிறந்தநாளை இளையராஜா கொண்டாடவில்லை. அப்போது செய்தியாளர்களை சந்தித்த இளையராஜா, இந்த ஆண்டு பிறந்த நாள் எனக்கு சோகமாக அமைந்திருக்கிறது. நான் என் மகளை பறிகொடுத்தத காரணத்தால் எனக்கு இந்தப் பிறந்த நாள் கொண்டாட்டமெல்லாம் இல்லை. உங்களுக்காகத் தான் இந்த பிறந்த நாள் கொண்டாட்டமெல்லாம் என தெரிவித்திருந்தார்.
82 ஆவது பிறந்தநாள்
இந்த நிலையில் இன்றைய தினம் அவர் 82 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவரது வீட்டு வாசலில் ஏராளமான ரசிகர்கள் வரிசையில் நின்று இளையராஜாவுக்கு பொன்னாடை போர்த்தியும் பூங்கொத்து வழங்கியும் பிறந்தநாளை கொண்டாடுகிறார்கள். இளையராஜாவுடன் புகைப்படம் எடுத்து மகிழ்கிறார்கள். அவர்களுடன் சேர்ந்து நாமும் இளையராஜாவை வாழ்த்துவோம்!












Click it and Unblock the Notifications