‛‛ஸ்டாலினுக்கு பஸ் டிக்கெட் முன்பதிவு’’.. கள்ளக்குறிச்சி செல்ல ஏற்பாடு செய்த சமூக செயற்பாட்டாளர்கள்
சென்னை: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 55 பேர் வரை பலியாகி உள்ளனர். இன்னும் முதல்வர் ஸ்டாலின் கள்ளக்குறிச்சி செல்லாத நிலையில் எதிர்க்கட்சியினர் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் தான் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க செல்லாத முதல்வர் ஸ்டாலினுக்கு அவரது பெயரில் கள்ளக்குறிச்சி செல்ல டிக்கெட் முன்பதிவு செய்து அனுப்பி வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து 150க்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, விழுப்புரம் அரசு மருத்துவமனை, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர்.

இருப்பினும் கூட துரதிர்ஷ்டவசமாக சிகிச்சை பலனின்றி 55 பேர் வரை பலியாகி உள்ளனர். பலரும் உடல்நலம் தேறி வரும் நிலையில் 10க்கும் அதிகமானவர்கள் அபாய நிலையில் தான் உள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை உயரலாம் என அஞ்சப்படுகிறது. இந்த சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.
இத்தகைய சூழலில் தான் அரசியல் கட்சி தலைவர்கள் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு நேரில் சென்று சிகிச்சையில் இருப்பவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களை சந்தித்து ஆறுதல் கூறினர். அந்த வகையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி முதல் ஆளாக சென்றார். அதன்பிறகு பிற கட்சிகளை சேர்ந்தவர்கள் சென்றனர்.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா, வைகோ மகன் துரை வைகோ, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர், நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள், கம்யூனிஸ்ட் தலைவர்கள் உள்பட பலரும் சென்றனர். திமுக சார்பில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்றார். அதேவேளையில் சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன், பொதுப்பணித்துறை அமைச்சர் எவ வேலு கள்ளக்குறிச்சியில் முகாமிட்டுள்ளனர்.
ஆனால் முதல்வர் ஸ்டாலின் இதுவரை செல்லவில்லை. கடந்த 3 நாட்களாக சட்டசபை கூட்டத்தில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின் எக்ஸ் பக்கத்திலும், சட்டசபையிலும் மட்டுமே உயிரிழந்தவர்களுக்கு இரங்கல், சிகிச்சையில் இருப்போருக்கு ஆறுதல் கூறியுள்ளார். மேலும் இறந்தவர்களுக்கு தலா ரூ.10 லட்சம், சிகிச்சையில் இருப்போருக்கு தலா ரூ.50 ஆயிரம் வழங்குவதாக அறிவித்துள்ளார்.
இருப்பினும் கூட ஸ்டாலின் கள்ளக்குறிச்சிக்கு நேரில் செல்லாததை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றன. அதோடு திமுகவினருக்கு இந்த சம்பவத்தில் தொடர்பு உள்ளது. இதனால் வழக்கு விசாரணையை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகின்றனர். இது ஒருபுறம் இருக்க முதல்வர் ஸ்டாலின் சென்னையில் இருந்து கள்ளக்குறிச்சி செல்லும் வகையில் சமூக செயற்பாட்டாளர்களின் கூட்டமைப்பு சார்பில் டிக்கெட் முன்பதிவு செய்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அதன்படி படுக்கை வசதி கொண்ட சொகுசு பஸ்சில் முதல்வர் ஸ்டாலினுக்கு ரூ.1,442 செலவில் அவரது பெயரில் டிக்கெட் முன்பதிவு செய்து அனுப்பி வைக்கப்பட்டது. இந்த பஸ் நேற்று இரவு 9.05மணிக்கு சென்னையில் இருந்து கிளம்பும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த டிக்கெட் முன்பதிவு தொடர்பான விபரம் தற்போது இணையதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.












Click it and Unblock the Notifications