சென்னையில் ஓஎம்ஆர், தி நகரில் மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி.. தேடி வந்து விதிக்கப்படும் அபராதம்
சென்னை: சென்னையில் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த விளம்பர பலகைகளின் உரிமையாளர்களுக்கு ரூ.1.25 லட்சம் அபராதம் விதித்து சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. பலகைகளை அகற்றுவதற்கான செலவும் சம்பந்தப்பட்ட உரிமையாளரிடமிருந்தே வசூலிக்கப்படும் என்றும் பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் விதிகளை மீறி வைக்கப்பட்டுள்ள விளம்பர பலகைகள் குறித்து 1913 என்ற எண்ணிற்கு புகார் தெரிவிக்கலாம் என்றும் சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
சென்னையில் அனுமதி மற்றும் உரிமம் இன்றி பொது இடங்கள், தனியார் கட்டிடங்களில் வைக்கப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான சட்டவிரோத விளம்பரப் பலகைகளை மாநகராட்சி அதிகாரிகள் அவ்வப்போது அகற்றுவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். மற்ற நகரங்களை போல் சென்னையில் போஸ்டர், பேனர் கலாச்சாரம் வருவதை மாநகராட்சி விரும்புவது இல்லை... மற்ற ஊர்களில் ஆள் உயர பேனர் வைப்பது, கல்யாணத்திற்கு பிளக்ஸ் வைப்பது போன்ற கலாச்சாரங்கள் இல்லை..

எனினும் இங்கு வணிக நிறுவனங்கள் அதிகமாக உள்ளன. எனவே வணிக நிறுவனங்கள் அதிக அளவில் விளம்பர பேனர்களை வைக்கின்றன. அதேபோல் அரசியல் கூடடம் நடைபெறும் பகுதிகளிலும் விளம்பர பேனர்கள் சிறிய அளவில் வைப்பார்கள். அப்படி வைக்கப்படுவதை கண்டுபிடித்து சென்னை மாநகராட்சி கடும் நடவடிக்கை எடுப்பது உண்டு. அந்த வகையில் சென்னையில் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த விளம்பர பலகைகளின் உரிமையாளர்களுக்கு ரூ.1.25 லட்சம் அபராதம் விதித்து சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறுகையில், "சென்னையில் விளம்பர பலகைகள் அமைக்க மாநகராட்சி கமிஷனரிடம் உரிய அனுமதி பெற வேண்டும். இதற்காக பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ள குழு விண்ணப்பங்களை பரிசீலித்து உரிமம் வழங்கி வருகிறது. பல்வேறு கட்டுப்பாடுகளும் விளம்பர பலகைகள் அமைப்பதில் உள்ளது.
இந்த நிலையில், சென்னை மாநகராட்சி அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில், சோழிங்கநல்லூர் செம்மஞ்சேரி ராஜீவ்காந்தி சாலை, கோடம்பாக்கம் தியாகராய நகர் சீனிவாசன் தெரு, காசி திரையரங்க சந்திப்பு, அடையாறு திருவான்மியூர் தெற்கு மாதா தெரு - ஈ.சி.ஆர் சந்திப்பு மற்றும் தேனாம்பேட்டை கோபதி நாராயண தெரு ஆகிய 5 இடங்களில் அனுமதியின்றி வைக்கப்பட்ட விளம்பர பலகைகள் கண்டறியப்பட்டன. அந்தப் பலகைகள் உடனடியாக அகற்றப்பட்டு, அதன் உரிமையாளர்களுக்கு தலா ரூ.25 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், பலகைகளை அகற்றுவதற்கான செலவும் சம்பந்தப்பட்ட உரிமையாளரிடமிருந்தே வசூலிக்கப்படும். பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் விதிகளை மீறி வைக்கப்பட்டுள்ள விளம்பர பலகைகள் குறித்து 1913 என்ற எண்ணிற்கு புகார் தெரிவிக்கலாம்" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications