‘தமிழ் ஆட்சி மொழி’ முதல் ‘மோடிக்கு நன்றி வரை’.. முக்கிய பொதுக்குழு தீர்மானங்களை வெட்டிவீசிய எடப்பாடி
சென்னை: அதிமுகவின் அடுத்த பொதுக்குழு கூட்டம் ஜூலை 11 ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் கடந்த பொதுக்குழு கூட்டத்தில் இடம்பெற்ற முக்கிய தீர்மானங்களை இந்த முறை எடப்பாடி பழனிசாமி தரப்பு சேர்க்கவில்லை.
புதிய தீர்மானங்களை நிறைவேற்றக் கூடாது என ஓ.பி.எஸ். தரப்புக்கு ஆதரவான தீர்ப்பு வெளியானதால் கடந்த பொதுக்குழுவில் கொண்டு வரப்பட்ட 23 தீர்மானங்களையும் தள்ளுபடி செய்வதாக அறிவித்தார் அவைத் தலைவர்.

புதிய பொதுக்குழு
அத்துடன் ஜூலை 11-ஆம் தேதி நிச்சயமாக பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்த பொதுக்குழுக் கூட்டத்துக்கு தடைகோரி ஓபிஎஸ் தரப்பு தொடர்ந்த மனு விசாரணையில் உள்ள நிலையில், அடுத்த பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட இருக்கும் 16 தீர்மானங்களின் பட்டியல் வெளியாகி இருக்கின்றன.

முக்கிய தீர்மானங்கள் எங்கே?
இதில் கடந்த பொதுக்குழுவுக்காக தயாரிக்கப்பட்டிருந்த தீர்மானங்களில் முக்கியமானவை இடம்பெறவில்லை. குறிப்பாக "மத்திய ஆட்சி மொழிகளில் ஒன்றாக தமிழை அமர்த்தவும், உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்கவும், திருக்குறளை தேசிய நூலாக்கவும் மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்ற தீர்மானமும் கிறிஸ்தவ மதத்தை தழுவிய பட்டியலின மக்களுக்கு சலுகைகளை தொடர வலியுறுத்தியும் தேவசகாயத்துக்கு புனிதர் பட்டம் வழங்கிய போப் ஆண்டவருக்கு நன்றி தெரிவித்தும் இடம்பெற்ற தீர்மானமும் தவிர்க்கப்பட்டு இருக்கிறது.

மோடியை பாராட்டும் தீர்மானம் நீக்கம்
"கொரோனா காலத்தில் நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்தப்பட்டு உலகில் அளவில் இந்தியாவை பிரதமர் நரேந்திர மோடி தலைநிமிர வைத்திருக்கிறார் என்றும், 2 ஆண்டு காலத்தில் பிரதமர் மோடியின் சிறப்பான ஆட்சியின் காரணமாக இந்தியாவில் பொருளாதார வீழ்ச்சி ஏற்படவில்லை என்றும், இதை அமெரிக்காவே பாராட்டி இருக்கிறது." என்று கடந்த பொதுக்குழுவில் இடம்பெற்ற தீர்மானம் இம்முறை தவிர்க்கப்பட்டுள்ளது.

தவிர்க்கப்பட்டவை தீர்மானங்கள்
இவை அல்லாமல், "மின்வெட்டு பிரச்சனை தொடர்பாகவும், திராவிட மாடல் என்ற பெயரில் கபட நாடகம் என்றும், பெட்ரோல், டீசல் மீதான மதிப்புக்கூட்டு வரை குறைக்காததற்காகவும், அதிமுகவினர் மீது பொய் வழக்கு போடுவதை கண்டித்தும், வெளிநாட்டு முதலீடுகள் என்ற பெயரில் குடும்ப முதலீடுகளை செய்வதாகவும், பத்திரிகை, வலைதள, சமூக செயற்பாட்டாளர்கள் மீது வழக்கு தொடர்வது தொடர்பாகவும் திமுக அரசுக்கு எதிராக இடம்பெற்றிருந்த தீர்மானங்கள் நீக்கப்பட்டுள்ளன. அதேபோல், அதிமுகவின் வளர்சிக்காக பாடுபட்டவர்களின் நினைவுகளை நெஞ்சில் நிலைநிறுத்தி அதற்காக உழைக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்த தீர்மானமும் தவிர்க்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications