‛‛நெகட்டிவ் லிஸ்ட்டில் விஜய் இல்லை’’.. 2026ல் கூட்டணி வைக்கும் நாம் தமிழர்? கவனிக்க வைத்த சீமான்!
சென்னை: 2026 தமிழக சட்டசபை தேர்தலில் விஜயுடன் கூட்டணி வைப்பீர்களா? என்ற கேள்விக்கு திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ் போன்று நடிகர் விஜயை நான் நெகட்டிவ் லிஸ்ட்டில் வைக்கவில்லை என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பரபரப்பாக பேசியுள்ளார்.
நாடாளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இந்நிலையில் தான் வழக்கம்போல் தமிழ்நாட்டில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளிலும் கூட்டணியின்றி தனித்த போட்டியிட உள்ளதாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார்.

திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வரும் சூழலில் நாம் தமிழர் கட்சி தமிழகத்தில் சில நாடாளுமன்ற தொகுதிகளுக்கான வேட்பாளர்களையே அறிவித்துவிட்டது. இதன்மூலம் நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகளை நாம் தமிழர் கட்சி தொடங்கிவிட்டது.
இந்நிலையில் தான் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ‛தந்தி டிவியின் கேள்விக்கென்ன பதில்' நிகழ்ச்சியில் சிறப்பு பேட்டி அளித்தார். அப்போது நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் துவங்கியது பற்றி பல்வேறு கேள்விகள் முன்வைக்கப்பட்டது. அதற்கு சீமான் பதிலளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
‛‛கடந்த முறை இதே சமயத்தில் பேட்டி எடுத்தோம். அப்போது விஜய் அரசியலுக்கு வருகிறார். 2024ல் இல்லை. 2026ல் வருகிறார் என்று கூறினீர்கள். அப்படி நடிகர் விஜய் அரசியலுக்குள் வந்துவிட்டார். உண்மையை சொல்லுங்கள். உங்களுக்கும் விஜய்க்கும் என்ன தொடர்பு?'' என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு சீமான் அளித்த பதில் வருமாறு:
எங்கள் 2 பேருக்கும் ஒரு தொடர்பும் இல்லை. நான் அண்ணன். அவர் தம்பி. நாங்கள் 2 பேரும் ஒரே மண்ணின் பிள்ளைகள். இருவருக்கும் ஒரே ரத்தம். தமிழ் ரத்தம். இதனால் இனம் தெரியாத பாசம் உள்ளது. தொலைதூரத்தில் இருந்தாலும் கூட ஒருவருக்கொருவர் அக்கறையில் செய்திகளை பரிமாறிக்கொள்கிறோம். இந்த படத்துடன் நிறுத்த வேண்டும் என்று கூறினார். நான் வேண்டாம் இன்னொரு படம் நடியுங்கள் என சொல்லி அனுப்பினேன். அவ்வளவு இடைவெளி வேண்டாம் என்று கூறினேன்'' என்றார்.
இந்த வேளையில் சினிமாவில் விஜய் உச்சத்தில் உள்ளார். இத்தகைய சூழலில் அவர் அரசியலுக்கு வருகிறாரே? என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு சீமான், ‛‛ஒன்றை இழக்காமல் இன்னொன்றை பெற முடியாது. தன்னை தாழ்த்தி கொள்ள இயலாதவன் தலைநிமிர்ந்து நிற்கமாட்டான். தலைவனாக வருபவன் அவமானத்தை தாங்க வேண்டும். தூக்கத்தை துறக்க வேண்டும். பசியோடு இருக்க வேண்டும். அதனால் அவர் சினிமாவை விட்டு வருகிறார்'' என்றார்.
இதையடுத்து இருவரும் ‛‛ஒரே நோக்கத்தில் இருக்கிறீர்களா?'' என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு சீமான், ‛‛நான் வந்து என் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று இருக்கிறேன். நான் சொன்னதை போல் தான் விஜயும் கூறியுள்ளோம். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்பதை நான் கூறி வருகிறேன். அவர் தனது கட்சி அறிவிப்புகளில் அதனை குறிப்பிட்டுள்ளார்'' என்றார்.
அதன்பிறகு ‛‛விஜயுடன் இணைந்து செயல்பட வாய்ப்புள்ளதா?'' என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு சீமான், ‛‛எங்கள் கோட்பாட்டை ஏற்று வருவோரை நாங்கள் ஏற்ப்போம். ஆனால் இப்போது வரை அதற்கு சாத்தியமில்லாத நிலை உள்ளது. இதனால் தனித்து செல்கிறேன். ஆனால் அவர் வைக்கும் கோட்பாட்டில் பெரிய முரண்பாடு இல்லை. நோக்கம் ஒன்றாக இருக்கிறது என்றால் விஜய் தான் முடிவு செய்ய வேண்டும். ஏனென்றால் அவர் களத்துக்கு இன்னும் வரவில்லை. அவர் களத்துக்கு வரும்போது நான் களத்தில் 15 ஆண்டுகளை தொட்டு இருப்பேன். 2026ல் தனித்து பயணிக்க நான் தயாராக இருக்கிறேன். கூட்டணி என்பது பற்றி அவரிடம் (விஜயிடம்) தான் கேட்க வேண்டும். காலம் தான் தீர்மானிக்கும்'' என்றார்.
இதையடுத்து திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ் உள்ளிட்டோருடன் கூட்டணி வைக்க மாட்டேன் என சொல்லும் நீங்கள், விஜயை அந்த லிஸ்ட்டில் வைக்கவில்லையா? என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு சீமான், ‛‛விஜயை நான் நெகட்டிவ் லிஸ்ட்டில் வைக்கவில்லை. கமல்ஹாசனையும் நான் அப்படி வைக்கவில்லை. ரஜினி அரசியலில் இருந்து விலகிவிட்டார். கமல் ஹாசனுக்கும் இது தேவையில்லை'' என்றார்.












Click it and Unblock the Notifications