உச்சம் தொடும் தக்காளி விலை.. கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ ரூ.160க்கு விற்பனை! அதிர்ச்சியில் மக்கள்
சென்னை: மழை உள்ளிட்ட பல காரணங்களால் தக்காளி வரத்து குறைந்த நிலையில், இன்றைய தினம் தக்காளி விலை கோயம்பேடு சந்தையில் ரூ. 160ஐ எட்டியுள்ளது.
நாட்டின் பல்வேறு இடங்களில் மழை பெய்து வரும் நிலையில், தக்காளி உள்ளிட்ட காய்கறி வரத்து தொடர்ந்து குறைந்து வருகிறது. அண்டை மாநிலங்களான தெலுங்கனா, ஆந்திரா இடங்களிலும் கூட கனமழை காரணமாக இயல்பு கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் காய்கறி வரத்தும் குறைந்துள்ளது.

கனமழையால் செடிகளில் காய்கறி உற்பத்தி குறைந்துள்ள நிலையில், வரத்து தொடர்ந்து குறைந்து வருகிறது. தேவையைப் பூர்த்தி செய்யும் அளவுக்குத் தக்காளி வரத்து இல்லை என்பதால் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
இடையில் சில நாட்கள் தக்காளி விலை குறைந்து ரூ. 70 வரை கூட சென்றது. இருப்பினும், கடந்த 3,4 நாட்களாகத் தக்காளி விலை மீண்டும் உயர ஆரம்பித்துள்ளது. சென்னை கோயம்பேடு சந்தையில் இரு நாட்களுக்கு முன்பு ஒரு கிலோ தக்காளி 140க்கு விற்பனையானது. அதற்கு முந்தைய நாள் ஒரே நாளில் ஒரு கிலோ தக்காளி விலை ரூ.30 உயர்ந்தது.
இதற்கிடையே நேற்றைய தினம் தக்காளி விலை ரூ.10 உயர்ந்து ரூ.150ஐ எட்டியது. இன்று தக்காளி விலை மீண்டும் ரூ.10ஐ உயர்ந்து ரூ.160ஐ தொட்டுள்ளது. கோயம்பேடு சந்தையிலேயே தக்காளி விலை ரூ.160ஐ எட்டியுள்ள நிலையில், சில்லறை விலையில் தக்காளி விலை மேலும் உயரும் என்று அஞ்சப்படுகிறது.
சென்னையில் தேவைக்கு ஏற்ப தக்காளி வரத்து இல்லாமல் போனதே விலை அதிகரிக்கக் காரணம் எனச் சொல்லப்படுகிறது. இன்று கோயம்பேடு சந்தைக்கு 400 டன் தக்காளி மட்டுமே வந்த நிலையில், அதன் விலை கணிசமாக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications