ஊட்டி போல் சென்னையிலும்.. கருணாநிதி பிறந்தநாளில் மலர் கண்காட்சி! வரலாற்றில் முதன்முறையாம்
சென்னை: தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.கருணாநிதியின் பிறந்தநாளன்று மலர் கண்காட்சி நடத்த தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.
வருகிற ஜூன் 3 ஆம் தேதி கருணாநிதியின் பிறந்தநாளுக்கு 20 நாட்கள் மீதமுள்ள நிலையில் தற்போதே அவரது சாதனைகளை சமூக வலைதளங்களில் திமுகவினர் பட்டியலிட்டு வருகின்றனர்.
கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு ஆளும் திமுக அரசும், திமுக கட்சியினரும் பல்வேறு ஏற்பாடுகளை செய்யத் தொடங்கி இருக்கின்றனர்.

அரசு விழா
கடந்த மாதம் தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டில் கருணாநிதி பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் என அறிவித்தார். போட்டியிட்ட தேர்தல்களில் எல்லாம் வெற்றிபெற்றவர் கலைஞர் எனப் புகழாரம் சூட்டிய அவர், தமிழ்நாட்டிற்காக கருணாநிதி கொண்டு வந்த திட்டங்களை பட்டியலிட்டார்.

கருணாநிதி சிலை
ஜூன் 3 ஆம் தேதி கருணாநிதி பிறந்தநாளன்று சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் அவரது கம்பீரமான சிலை நிறுவப்படும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இந்த நிலையில் கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு ஜூன் 3 ஆம் தேதி சென்னையில் மலர் கண்காட்சி நடைபெறும் என தமிழ்நாடு அரசு அறிவித்து இருக்கிறது.

சென்னை வரலாற்றில் முதல் முறை
சென்னை வாலாஜா சாலையில் அமைந்துள்ள கலைவாணர் அரங்கத்தில் ஜூன் 3 ஆம் தேதி தொடங்கும் இந்த மலர் கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க இருக்கிறார். ஜூன் 5 ஆம் தேதி வரை 2 நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சிதான் சென்னை வரலாற்றில் நடைபெறும் முதல் மலர் கண்காட்சி என்று கூறப்படுகிறது.

கருணாநிதி உருவ மலர் அலங்காரம்
இந்த கண்காட்சியில் பெங்களூரு, உதகை, ஓசூர், புனே, திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 200-க்கும் மேற்பட்ட மலர் வகைகள் கொண்டு வரப்பட்டு காட்சிபடுத்தப்பட உள்ளன. அதில் கலைஞரின் உருவ வடிவிலான மலர் அலங்காரமும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் ஓராண்டு சாதனைகளை விளக்கும் வகையிலும் மலர் அலங்காரம் இடம்பெற இருக்கிறது.












Click it and Unblock the Notifications