செம! ஒரு இ-மெயில் தான்! வீட்டுக்கே போய் தம்பதியின் பிரச்சனையை தீர்த்த துணை ஆணையர்! நெகிழ்ந்த சென்னை
சென்னை: 81 வயதான தந்தையை மிரட்டி, தாயை கொடுமை செய்த மகன் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் அளிக்கப்பட்ட நிலையில், துணை ஆணையர் சம்பந்தப்பட்டவரின் வீட்டிற்கே சென்று நடவடிக்கை எடுத்துள்ள சம்பவம் சென்னையில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கோயம்பேடை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். 81 வயதான இவர் தனது மனைவியுடன் கோயம்பேட்டில் பழக்கடை ஒன்றை நடத்தி வருகிறார். இருவரும் சேர்ந்து இக்கடையை நடத்தி வந்த நிலையில், இவர்களது மகன் சதீஷ் தான் பிசினஸ் தொடங்க உள்ளதாகவும், எனவே அதற்காக பணம் வேண்டும் என்றும் இவர்களை வற்புறுத்தி வந்திருக்கிறார். ராதாகிருஷ்ணனும் தன்னுடைய சேமிப்பில் இருந்த பணத்தை கொடுத்து உதவியுள்ளார். ஆனால், சதீஷ் மீண்டும் மீண்டும் அதிக அளவில் பணத்தை கேட்டிருக்கிறார்.

ஒரு கட்டத்தில் சேமிப்பில் இருந்த அத்தனை பணமும் காலியான நிலையில், ராதாகிருஷ்ணன் நிலைமையை விளக்கியுள்ளார். ஆனால், சதீஷ் அதை புரிந்துக்கொள்ளவில்லை. எனவே தனது தாயையும், தந்தை ராதாகிருஷ்ணனனையும் கொடுமைப்படுத்த தொடங்கியுள்ளார். ராதாகிருஷ்ணன் பழக்கடையை கவனிக்க வந்துவிடுவதால், தாய் மட்டும் தனியே சதீஷிடம் மாட்டிக்கொண்டு அல்லபட்டிருக்கிறார். நிலைமை நாளுக்கு நாள் மோசமடைய தொடங்கியுள்ளது.
ஒரு கட்டத்தில் சதீஷ் தனது தந்தை ராதாகிருஷ்ணனனின் பழக்கடையின் ஆவணங்களை நிதி நிறுவனத்தில் கொடுத்து ரூ.25 லட்சம் வரை கடன் பெற்றிருக்கிறார். பெற்ற கடனை கொண்டு சதீஷ் தொடங்கிய பிசினஸ் நினைத்த மாதிரி கைக்கொடுக்கவில்லை. எனவே கடனை கட்ட முடியாமல் நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. நிதி நிறுவனத்தை சேர்ந்தவர்க்ள வீட்டில் வந்து விசாரித்தபோதுதான் இந்த விஷயம் தந்தை ராதாகிருஷ்ணனனுக்கு தெரிய வந்துள்ளது.
இதன் பின்னர் சண்டை முற்றவே, பெற்றோரை வீட்டை விட்டு வெளியே போகுமாறு சதீஷ் மிரட்ட தொடங்கியுள்ளார். தாய் மீதான கொடுமை அதிகரித்திருக்கிறது. இதனையடுத்து ராதாகிருஷ்ணன் பெருநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோருக்கு ஈமெயில் மூலம் புகார் அனுப்பியுள்ளார். புகாரை கவனித்த ஆணையர், அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். இதன் பின்னர் ராதாகிருஷ்ணனின் வீட்டிற்கு வந்த துணை ஆணையர் குமார் பிரச்னை குறித்து விசாரணை நடத்தியுள்ளார்.
விசாரணையில் மகன் வாங்கிய கடன் தந்தை ராதாகிருஷ்ணனனே முழுவதுமாக அடைத்திருக்கிறார். இதனையடுத்து நிதி நிறுவனத்திடம் பேசி பழக்கடையின் ஆவணங்கள் பெறப்பட்டு முதியவர் ராதாகிருஷ்ணனனிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து பிரச்னை முடிவுக்கு வந்திருக்கிறது. முதியவர் அனுப்பிய ஈமெயில் புகாருக்கு, துணை ஆணையரே நேரில் வந்து விசாரணை நடத்தி வழக்கை முடித்து வைத்துள்ள சம்பவம் சென்னையில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications