கர்ஜித்த சிங்கம் எங்கே? 2 ஆண்டில் 25க்கும் கீழ் குறைந்த சராசரி.. தொடரும் விராட் கோலியின் தடுமாற்றம்!
கடந்த 2 ஆண்டுகளாக விராட் கோலியின் டெஸ்ட் சராசரி 25க்கும் கீழ் குறைந்துள்ளது.
சென்னை: கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட் கோலி இழந்த ஃபார்மை மீட்டெடுக்க முடியாமல் திணறி வருகிறார். வெளிநாடு மைதானங்களிலேயே சிங்கமாக கர்ஜித்த விராட் கோலி, தற்போது சொந்த மண்ணிலேயே திணறுவது அணியில் அவரது இடத்தையே கேள்விக்குறியதாக மாற்றியுள்ளது.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் நடந்து வரும் பார்டர் - கவாஸ்கர் டிராபி தொடர் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இந்த அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி இன்று இந்தூர் மைதானத்தில் தொடங்கியது.
இதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார். கடந்த இரு போட்டிகளில் ஆஸ்திரேலிய அணியே முதலில் பேட்டிங் ஆடிய நிலையில், முதல்முறையாக இந்தத் தொடரில் முதலில் பேட்டிங் செய்தது.

இந்திய அணி பேட்டிங்
அதில் யாரும் எதிர்பார்க்காதவாறு இந்திய அணி 109 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. இந்திய மைதானங்களில் இந்திய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களின் சொதப்பலான ஆட்டம் ரசிகர்களிடையே விரக்தியடைய செய்தது. சுழலை எளிதாக சமாளிக்கக் கூடிய இந்திய பேட்ஸ்மேன்கள் விளையாடிய காலம் மாறி, சுழலுக்கு திணறும் இந்திய பேட்ஸ்மேன்கள் அணியில் இருப்பது விமர்சனங்களை ஏற்படுத்தியது.

கடைசி சதம் எப்போது?
குறிப்பாக விராட் கோலியின் ஆட்டம் ரசிகர்களிடையே அதிக விமர்சனங்களை பெற்று வருகிறது. கடைசியாக விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் 2019ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் வங்கதேச அணிக்கு எதிராக சதம் விளாசியுள்ளார். அதன்பின்னர் அவ்வப்போது சில அரைசதங்கள் விளாசி இருந்தாலும், இந்திய அணி காப்பாற்றக் கூடிய ஆட்டமாக இருக்கவில்லை. தென்னாப்பிரிக்காவில் ஆடிய ஒரே ஒரு இன்னிங்ஸ் மட்டுமே விராட் கோலியின் தரத்தை நிரூபிக்கும் வகையிலான இன்னிங்ஸாக அமைந்துள்ளது.

குறைந்த சராசரி
எந்த மைதானத்திலும் அசாத்தியமாக விளையாடக் கூடிய திறன் உள்ள விராட் கோலி, தற்போது சொந்த மண்ணிலேயே சுழலுக்கு திணறுவது ரசிகர்களிடையே ஏற்றுக் கொள்ள முடியாத காரியமாக இருக்கிறது. கிட்டத்தட்ட கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக ஃபார்மை மீட்டெடுக்க முடியாமல் தடுமாறியே வருகிறார். அதுமட்டுமல்லாமல் கடந்த 2 ஆண்டுகளில் விராட் கோலியின் சராசரி 25க்கும் குறைவாகவே இருக்கிறது.

ஸ்பின்னர்களுக்கு எதிராக கோலி
சாதாரண பந்துவீச்சாளர்களுக்கு எதிராகவும் விராட் கோலி அதிக கவனம் கொடுத்து விளையாடுவதே பிரச்சினையாக மாறி வருகிறது. ஸ்பின்னர்களை எதிர்கொள்ள ஸ்வீப் ஷாட் ஆடாமல், ஸ்பெட் அவுட் செய்யும் யுக்தியை மட்டுமே விராட் கோலி செய்து வருகிறார். இதனை ஒவ்வொரு போட்டியிலும் கணித்து, ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள் அதற்கேற்ப பந்துவீசி வருகின்றனர்.

வாய்ப்பு கொடுக்கப்படுமா?
அதேபோல் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி வரை மட்டுமே விராட் கோலிக்கு வாய்ப்பாக வழங்க வேண்டும். அதற்குள் விராட் கோலி தனது ஃபார்மை மீட்டெடுக்கவில்லை என்றால், ரஹானேவை போல் விராட் கோலியையும் அணியில் இருந்து நீக்கும் காலம் வெகு தொலைவில் இருக்காது. அதற்கு விராட் கோலியின் ரசிகர்களே முதல் குரலையும் கொடுக்க தயாராக இருப்பார்கள். டெஸ்ட் கிரிக்கெட்டின் தூதுவன் என்று அழைக்கப்பட்ட விராட் கோலி, அதே ஃபார்மெட்டில் சொதப்புவது சோகத்தை ஏற்படுத்துகிறது.












Click it and Unblock the Notifications