தலைவி படத்தில் ஜெயலலிதாவை, எம்ஜிஆரை அவமானப்படுத்துவதுபோல் காட்சி உள்ளது... ஜெயக்குமார் விமர்சனம்
சென்னை: தலைவி படத்தில் ஜெயலலிதாவின் கதாப்பாத்திரம் எடுக்கப்பட்டவிதம், காட்சிப்படுத்தப்பட்டவிதம் சரியாக இருந்தாலும் காட்சிகளில் நடக்காத சம்பவங்களை பதிவு செய்துள்ளதாக படத்தை பார்த்த அதிமுக மூத்த தலைவர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். இந்தப்படத்தில் பல காட்சிகளில் ஜெயலலிதா வாழ்க்கையில் நடக்காதது உள்ளது. ஜெயலலிதாவை, எம்ஜிஆரை அவமதிப்பதுபோல் உள்ளது என விமர்சித்துள்ளார்.
Recommended Video
அதிமுகவில் எம்ஜிஆருக்கு அடுத்து தலைமைப் பொறுப்பேற்று எம்ஜிஆர் காலத்தில்கூட பெறாத வெற்றியை பெறக்காரணமாக இருந்தவர் ஜெயலலிதா.1991, 2001, 2006, 2011, 2016 என 5 முறை ஆட்சிப்பொறுப்பேற்ற ஜெயலலிதா முதல்வராக இருக்கும்போதே காலமானார். ஜெயலலிதாவின் மறைவுக்குப்பிறகு அவரது வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்க பலரும் முயன்றனர்.
இதில் கங்கனா ரனாவத்தை வைத்து ஏ.எல்.விஜய் இயக்கிய தலைவி படம் பலத்த எதிர்ப்பார்ப்புக்கிடையே வெளி வந்துள்ளது. படத்தில் அரசியல் காட்சிகள் குறைவு, எம்ஜிஆர், ஜெயலலிதா தனிப்பட்ட வாழ்க்கையை சொல்வதுபோல் படம் உள்ளதாக பலரும் விமர்சித்து வருகின்றனர். படத்தில் வரும் பல காட்சிகள் உண்மைக்கு புறம்பாக உள்ளதாக விமர்சனமும் எழுந்துள்ளது.

இந்நிலையில் எம்ஜிஆர் காலத்தில் அதிமுகவில் இணைந்து ஜெயலலிதா அமைச்சரவையில் அமைச்சராகவும், சபாநாயகராகவும் பணியாற்றிய மூத்த தலைவர் ஜெயக்குமார் படத்தை பார்த்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் படத்தில் சில காட்சிகள் ஜெயலலிதா, எம்ஜிஆரை அவமானப்படுத்துவதுபோல் அமைந்துள்ளதாக தெரிவித்தார்.
அவரது பேட்டியில் தெரிவித்ததாவது..
'படத்தை பார்க்கும் ஒவ்வொரு பெண்களும் உணரும் வகையில் படமாக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதாவின் வரலாறும் அதுதான். துணிச்சலாக, ஆற்றல், பன்முகத்தன்மைக்கொண்ட அறிவாற்றல் மிக்கவர். அதை ஃபோகஸ் செய்து எடுத்துள்ளனர். அதை காட்சிப்படுத்தியவிதத்தை நல்ல விஷயமாக நாங்கள் எடுத்துக்கொள்கிறோம்.
ஜெயலலிதா , எம்ஜிஆருக்கு அவமானம்
ஆனால் ஒரு சில விஷயங்கள் நெருடுகிறது. எம்ஜிஆர் என்றைக்குமே பதவிக்கு ஆசைப்பட்டவர் கிடையாது. 1967-ல் தேர்தல் பிரச்சாரத்தில் குண்டடிப்பட்ட எம்ஜிஆரின் போஸ்டர்கள் பட்டிதொட்டியெங்கும் ஒட்டப்பட்டு திமுக மிகப்பெரிய வெற்றியைப்பெற எம்ஜிஆர் காரணமாக இருந்தார்.அப்போது அண்ணா அவருக்கு அமைச்சர் பதவி கொடுக்க முன்வந்தபோது எம்ஜிஆர் மறுத்து நான் நடிகராகவே இருக்கிறேன் என்று ஒதுங்கிக் கொண்டார். அவரை மரியாதை செய்யும் விதமாக சிறுசேமிப்புத் திட்ட தலைவர் பதவியை உருவாக்கி அண்ணாவே கொடுத்தார். எம்ஜிஆர் கேட்கவில்லை, அண்ணாவே கொடுத்தார்.
ஆனால் அண்ணா மறைவுக்குப்பின் முதல்வர் பதவிக்கு நெடுஞ்செழியனா? கருணாநிதியா என்ற சர்ச்சை வந்தபோது எம்ஜிஆர் கருணாநிதி பெயரை முதல்வர் பதவிக்கு முன்மொழிந்தார். அதனால்தான் கருணாநிதியே முதல்வர் ஆனார். இதுதான் உண்மை. ஆனால் எம்ஜிஆர் ஏதோ அமைச்சர் பதவி கேட்டது போலவும், கருணாநிதி தர மறுத்ததுபோலவும் ஒரு காட்சி பதிவாகியுள்ளது.
அது உண்மையல்ல, அதை நீக்க வேண்டும். எம்ஜிஆர் ஏன் திமுகவை விட்டு வெளியில் வந்தார். கணக்குக்கேட்டு வெளியில் வந்தார் அதை மறைத்து அமைச்சர் பதவி கேட்டு தராததுபோல் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது தவறான ஒன்று நீக்கவேண்டும். அதேப்போல் தனக்குப்பின் ஜெயலலிதா தான் என்று எம்ஜிஆர் எங்களுக்கு எல்லாம் காட்டிவிட்டுச் சென்றார். எம்ஜிஆர் எந்த காலத்திலும் ஜெயலலிதாவை சிறுமைப்படுத்தியதே இல்லை.
நடக்காத விஷயத்தை காட்சியாக வைப்பதா?
ஆனால் படத்தில் சூட்டிங் ஸ்பாட்டி எம்ஜிஆர் எல்லோருக்கும் வணக்கம் சொல்லிவிட்டு ஜெயலலிதாவுக்கும் சொல்லிவிட்டு, ஒரு நாய்க்கும் வணக்கம் சொல்வதுபோல் காட்சி அமைத்துள்ளார்கள்.அது நீக்கப்பட வேண்டும். ஏனென்றால் அப்படி நடக்கவே இல்லை. அது ஜெயலலிதாவை அவமானப்படுத்துவது போல் அமைந்துள்ளது.
அதேபோல் ஷூட்டிங் நடக்கும்போது எம்ஜிஆர் வருவார் அனைவரும் எழுந்து நிற்பார்கள் ஜெயலலிதா கால்மேல் கால் போட்டு அமர்ந்திருப்பது போன்று காட்சி அமைத்துள்ளார்கள் அதை நீக்கவேண்டும். அது பார்ப்பவர்கள் மனதில் தவறாக பதிவாகும். இவையெல்லாவற்றையும் நீக்கினால் படம் நன்றாக இருக்கும்".
இவ்வாறு ஜெயக்குமார் பேட்டியளித்தார்.












Click it and Unblock the Notifications