விடாது மழை.. 9 மாவட்டங்களில் மதியம் 1 மணிவரைக்கும் நீடிக்குமாம்..வானிலை ஆய்வு மையம் வார்னிங்
சென்னை: சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் நேற்றிரவு தொடங்கிய மழை நீடித்து வரும் நிலையில் பிற்பகல் 1 மணி வரைக்கும் மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் இன்றும் நாளையும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சென்னை மீனம்பாக்கத்தில் 16 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. தரமணி ஆலந்தூரில் தலா 14 செ.மீ., செம்பரம்பாக்கத்தில் 13 செ.மீ., சென்னை அண்ணா பல்கலைக்கழகம் பகுதியில் 10 செ.மீ., மேற்கு தாம்பரம், குன்றத்தூர், நுங்கம்பாக்கத்தில் தலா 9 செ.மீ., கொரட்டூர், சென்னை எம்.ஜி.ஆர். நகரில் தலா 8 செ.மீ., காஞ்சிபுரம் மாவட்டம் காட்டுக்குப்பம், பூவிருந்தவல்லி, தாம்பரத்தில் தலா 7 செ.மீ., அயனாவரம், சென்னை ஆட்சியர் அலுவலகம் பகுதியில் தலா 6 செ.மீ. மழை பதிவாகியுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகம், புதுச்சேரியில் 5 நாட்களுக்கு இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
இன்று தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய டெல்டா மாவட்டங்கள் மற்றும் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 2 நாட்களுக்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும்.

மன்னார்வளைகுடா, தென் தமிழக கடலோரப் பகுதிகள், அதை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் இன்று மணிக்கு 45-55 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 65 கி.மீ. வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசக்கூடும். அதேபோல, வடதமிழகம், தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகள், தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிகள், இலங்கை கடலோரப் பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மணிக்கு 40-45 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 55 கி.மீ. வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசக்கூடும். எனவே, இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கனமழை காரணமாக கிண்டி கத்திப்பாரா சுரங்கப் பாதையில் முழுமையாக தண்ணீர் தேங்கியது. இதனால் சுரங்கப்பாதையில் வாகனங்கள் செல்ல போலீசார் அனுமதிக்கவில்லை. இதனால் வடபழனி, அசோக் பில்லர், கோயம்பேடு செல்லும் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த பாலத்தில் சுமார் ஒரு அடி உயரத்தில் மழை நீர் தேங்கினால், உடனடியாக ஆட்டோமேட்டிக் மின் மோட்டார் தானாக இயங்கி மழைநீரை அகற்றுமாறு அமைக்கபட்டிருந்து. ஆனால் இந்த மோட்டார் செயல்படாததால் மழைநீர் பெருமளவில் தேங்கியுள்ளது.

இதேபோல் செம்பியம், கொளத்தூர், தலைமை செயலகம் அருகே, மைலாப்பூர், கிண்டி, தி நகர், நங்கநல்லூர் உள்ளிட்ட 8 இடங்களில் மழையின் காரணமாக மரங்கள் விழுந்துள்ளன. இந்த மரங்கள் உடனடியாக மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் தீயணைப்புத்துறையினர் மூலம் அகற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேபோல் சுரங்கப்பாதைகளில் தேங்கியுள்ள நீரை அகற்றும் பணியும் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது.
இதனிடையே சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் பிற்பகல் 1 மணி வரை கனமழை நீடிக்க வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications