வரி ஏய்ப்பு புகார்.. விடாத வருமான வரித்துறை.. 3வது நாளாக எம்.ஜி.எம் குழும நிறுவனங்களில் சோதனை
சென்னை: தமிழ்நாடு முழுவதும் எம்.ஜி.எம். குழுமத்துக்கு சொந்தமான இடங்களில் மீண்டும் வருமானவரி சோதனை நடைபெற்று வருகிறது.
எம்.ஜி.எம். நிறுவனம் தீம்பார்க், மதுபான உற்பத்தி நிறுவனங்களை நடத்தி வருகிறது. தமிழ்நாடு, கர்நாடக உள்ளிட்ட மாநிலங்களில் இவர்கள் சார்பாக ஹோட்டல் உள்ளிட்ட பல்வேறு பிஸ்னஸ்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

அதேபோல் இந்த நிறுவனம் சார்பாக நட்சத்திர ஹோட்டல்களும் பல்வேறு மாவட்டங்களில் நடத்தப்பட்டு வருகின்றன. சமீபத்தில் நட்சத்திர ஹோட்டல்களை இந்த நிறுவனம் வாங்கியதில் வரி ஏய்ப்பு செய்யப்பட்டதாக வருமான வரித்துறைக்கு புகார் சென்றுள்ளது.
சில ஆவணங்களுடன் இது தொடர்பாக புகார் சென்றதாக கூறப்படுகிறது. இந்த புகாரை தொடர்ந்து நேற்று முதல்நாள் எம்.ஜி.எம். குழுமத்துக்கு சொந்தமான இடங்களில் வருமானவரி சோதனை நடைபெற்றது. இரண்டு நாட்களாக நடத்தப்பட்ட சோதனையில் பல்வேறு ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்பட்டது.
இந்த நிலையில் இன்றும் தமிழ்நாடு முழுவதும் எம்.ஜி.எம். குழுமத்துக்கு சொந்தமான இடங்களில் மீண்டும் வருமானவரி சோதனை நடைபெற்று வருகிறது. இன்றும் 3வது நாளாக வருமானவரித்துறை சோதனை நடைபெறுகிறது.
சென்னை, விழுப்புரம் உள்ளிட்ட இடங்களில் சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. முதல்நாள் சென்னை, விழுப்புரம், கோவை , பெங்களூர், புதுச்சேரி உள்ளிட்ட இடங்களில் சோதனை நடைபெற்றது. ஒவ்வொரு இடங்களிலும் சோதனையில் 14-20 அதிகாரிகள் ஈடுபட்டனர். கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள எம்ஜிஎம் ஓட்டல், ரிசார்ட் மற்றும் தீம்பார்க் ஆகிய இடங்களில் அதிக நேரம் சோதனை நடந்தது.
நட்சத்திர ஹோட்டல்களில் நீண்ட நேரம் அதிகாரிகள் கோப்புகளை சோதனை செய்தனர். இந்த நிலையில் அந்த சோதனையில் கிடைத்த ஆவணங்களை வைத்து இன்று மூன்றாவது நாளாக மீண்டும் அதிகாரிகள் சோதனை செய்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications