IT Raids: தமிழகத்தில் நடக்கிறது இந்த ஆண்டின் மிகப்பெரிய வருமான வரி சோதனை.. யாரை குறிவைத்து தெரியுமா?
Recommended Video
சென்னை: தமிழகத்தில் சரவணா ஸ்டோர்ஸ் உள்ளிட்ட 74 வணிக நிறுவனங்கள் மற்றும் அதைச் சார்ந்த இடங்களில் இன்று நடைபெற்று வரும் வருமானவரித்துறை சோதனையின் பின்னணியில், அரசியல் காரணம் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சரவணா ஸ்டோர்ஸ், லோட்டஸ் குரூப், பெரம்பூர் ரேவதி குழுமம், ஜிஎஸ் ஸ்கொயர் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு சொந்தமான இடங்கள் மற்றும் அதன் உரிமையாளர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் இன்று காலை முதல் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனைகளை நடத்தி வருகின்றனர்.
சென்னையில் 72 இடங்களிலும் கோவையில் 2 இடங்களிலும் என மொத்தம் 74 இடங்களில் ஒரே நேரத்தில் இன்று காலை முதல் சோதனை நடந்து வருகிறது.
முதல் முறையாக அட்டாக்.. ஸ்டாலினை மறைமுகமாக தாக்கி பேசிய மோடி
லோக்சபா தேர்தல் ஆண்டு
தமிழகத்தில் இந்த வருடத்தில் நடத்தப்பட்டுள்ள மிகப்பெரிய வருமானவரித்துறை சோதனை இதுவாகும். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு தமிழகத்தில் வருமானவரித் துறை தொடர்பான சோதனைகள் அடிக்கடி நடக்க ஆரம்பித்தன. அது லோக்சபா தேர்தல் ஆண்டான 2019லும் தொடர்கிறது.
மோடி பேச்சு
மதுரையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழாவில், பிரதமர் நரேந்திரமோடி மறைமுகமாக திமுக தலைவர் ஸ்டாலினை தாக்கிப் பேசி இருந்தார். 10% இட ஒதுக்கீடு தொடர்பாக தமிழகத்தில் எதிர்மறைக் கருத்துகள் பரப்பப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார். உயர் ஜாதியினருக்கு 10% இட ஒதுக்கீடு வழங்குவதற்கு எதிராக திமுக சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில், மோடியின் இந்த பேச்சு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது. மேலும் ஊழலுக்கு எதிரான தனது நடவடிக்கைகளால் சென்னையில் இருந்து டெல்லி வரை நடுக்கம் ஏற்பட்டுள்ளது என்று மோடி தெரிவித்தார்.
லோக்சபா தேர்தல்
இந்த நிலையில்தான் பிரதமர் மோடியின் வருகைக்கு அடுத்த இரண்டாவது நாளில் தமிழகத்தில் மிகப்பெரிய வருமானவரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. வரும் லோக்சபா தேர்தலில் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுக்கு எந்தெந்த தொழிலதிபர்களும், தொழில் நிறுவனங்களும் நிதி உதவி செய்யக்கூடும் என்ற உளவுத்துறையின் அறிக்கை அடிப்படையில் வருமானவரித்துறை ரெய்டு நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
பின்னணி
தேர்தலில் திமுக கூட்டணிக்கு கிடைக்கும், தேர்தல் நிதி உதவியை ஆங்காங்கு தடுத்து நிறுத்த வேண்டும் என்பது இதன் முக்கியமான நோக்கம் ஆகும் என்கிறார்கள் டெல்லி வட்டார தகவல்கள்.