வேகமாக பரவும் "டெங்கு காய்ச்சல்.." மாவட்ட நிர்வாகங்களுக்கு மருத்துவத்துறை செயலாளர் அதிரடி உத்தரவு
சென்னை: தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவல் அதிகரித்து வரும் நிலையில், 5 நாட்களுக்கு மேல் கடும் காய்ச்சல் இருப்போருக்கு எலிசா பரிசோதனை கட்டாயம் மேற்கொள்ள வேண்டும் என்றும் கொசு ஒழிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் மாவட்ட நிர்வாகங்களுக்கு மருத்துவத்துறை செயலாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கொசுக்கள் மூலமாக பரவும் வைரஸ் தொற்று நோய் டெங்கு காய்ச்சல். தற்போது தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் தீவிரமாகப் பரவி வருகிறது. சில நேரங்களில் டெங்கு காய்ச்சல் உயிரிழப்பையும் ஏற்படுத்திவிடும் என்பதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். சமீபத்தில் சென்னை மதுரவாயலை சேர்ந்த 4 வயது சிறுவன் டெங்கு காய்ச்சல் காரணமாக உயிரிழந்துவிட்டான்.

இதன் காரணமாக டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தவும், நோயின் அறிகுறி இருப்பவர்களை கண்டறிந்து, அவர்களுக்கு உரிய சிகிச்சைகளை அளித்து, நோய் நீங்குவதற்கான மருத்துவத்தினை செய்ய வேண்டும் என்றும், டெங்கு காய்ச்சலால் உயிரிழப்பு என்ற நிலை உருவாவதை தடுக்கவும் வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் அறிவுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், அனைத்து மாவட்ட நிர்வாகங்களுக்கும் மருத்துவத்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- கொசு ஒழிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும். 5 நாட்களுக்கு மேல் கடும் காய்ச்சல் இருப்போருக்கு என்எஸ்1 என்ற எலிசா பரிசோதனை கட்டாயம் மேற்கொள்ள வேண்டும்.
அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் காய்ச்சல் வார்டுகளை அதிகரிக்க வேண்டும். மேலும் அனைத்து மருத்துவனைகளிலும் போதிய ரத்த இருப்பு உள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும். கொசு மருத்து தெளித்தல் புகை அடித்தல் உள்ளிட்ட பணிகளை மலேரியா தடுப்பு பணியாளர்கள் செய்ய வேண்டும். அரசின் வழிகாட்டுதல்களை மக்கள் பின்பற்றுகிறார்களா என்பதை வீடு வீடாக சென்ற ஆய்வு செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக கடலூர் வண்டிப்பாளையம், மஞ்சக்குப்பம், முட்டம், பண்ருட்டியைச் சேர்ந்த 4 பெண்கள் உட்பட ஆறு பேர் கடந்த சில நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்துள்ளனர். இந்த நிலையில், அவர்களுக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் 6 பேரும் டெங்கு காய்ச்சலுக்கான தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இதேபோல் கடலூரை ஒட்டியுள்ள புதுச்சேரியில், தனியார் மருத்துவமனையில் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்ட கல்லூரி மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவருக்கும் டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications