இந்தியாவின் தலையெழுத்தை மாற்றப்போகும் சென்னை.. பலே வெள்ளையத்தேவா, பலே..!!
சென்னை: இந்திய அணுசக்தி துறையில் மிக முக்கியமான முன்னேற்றமாக, சென்னையில் உள்ள கல்பாக்கம் அணுசத்தி நிலையத்தில் உருவாக்கப்பட்ட 'ப்ரோடோடைப் ஃபாஸ்ட் ப்ரீடர் ரியாக்டர் (PFBR)' வெற்றிகரமாக செயல்பட்டு முக்கிய கட்டமான 'கிரிட்டிகல்' நிலையை எட்டியுள்ளது. இந்த சாதனைக்காக இந்திய விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்களை பிரதமர் நரேந்திர மோடி பாராட்டியுள்ளார்.
இந்த PFBR என்பது சாதாரண அணு உலை அல்ல. இதில் பயன்படுத்தும் எரிபொருளை விட அதிக அளவில் புதிய எரிபொருளை உருவாக்கும் திறன் கொண்ட ரியாக்டர். அதாவது, இது 'செல்ப் சஸ்டைனிங்' எனப்படும் வகையில், தானாகவே எரிபொருள் உற்பத்தி செய்யும் அமைப்பாக செயல்படும். இதனால், எதிர்காலத்தில் அணுசக்தி உற்பத்தி செலவை குறைக்கவும், நீண்டகால எரிபொருள் தேவையை பூர்த்தி செய்யவும் உதவும்.

சென்னை அருகே கல்பாக்கத்தில் அமைந்துள்ள இந்த 500 மெகாவாட் திறன் கொண்ட PFBR, முழுக்க முழுக்க இந்தியாவில் உருவாக்கப்பட்டது. இதை BHAVINI என்ற மத்திய அரசு நிறுவனம் இயக்குகிறது. இது இந்தியாவின் மூன்று கட்ட அணுசக்தி திட்டத்தில் இரண்டாவது கட்டத்தை தொடங்கும் முக்கிய படியாக கருதப்படுகிறது.
இந்த அணு உலையில், யுரேனியம் மற்றும் ப்ளூட்டோனியம் கலந்த 'MOX' (மிக்சட் ஆக்சைட்) எரிபொருளாக பயன்படுத்துகிறது. மேலும், இதன் குளிரூட்டியாக (கூலென்ட்) தண்ணீர் பதிலாக 'திரவ சோடியம்' பயன்படுத்தப்படுகிறது. இது அதிக வெப்பநிலையிலும் பாதுகாப்பாக செயல்பட உதவுகிறது.
அடுத்த முக்கியமான விஷயம் என்னவென்றால் தற்போது இந்தியாவில் பயன்பாட்டில் உள்ள பிற பிரஷரைஸ்டு ஹெவி வாட்டர் ரியாக்டர் (PHWR) உலைகளில் இருந்து வரும் பயன்படுத்தப்பட்ட எரிபொருளையும் (spent fuel) மீண்டும் பயன்படுத்தும் திறன் இந்த புதிய PFBR-க்கு உள்ளது.
மோடி வாழ்த்து
இந்த சாதனையை பிரதமர் மோடி 'இந்தியாவின் அணுசக்தி பயணத்தில் ஒரு முக்கிய திருப்புமுனை' என்று தனது டிவிட்டர் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக, இந்த PFBR செயல்பாட்டில் வந்ததும், இந்தியாவின் மூன்று கட்ட அணுசக்தி திட்டத்தின் இரண்டாவது கட்டம் அதிகாரப்பூர்வமாக தொடங்குகிறது என அறிவித்தார். மேலும் இதை இந்தியாவின் சிவில் நியூக்ளியர் ஜர்னி-யின் துவக்கம் என கூறுகிறார்.
மேலும், இந்த முன்னேற்றத்தின் மூலம் இந்தியாவில் அதிகமாக உள்ள தோரியம் (Thorium) வளங்களை பயன்படுத்தும் மூன்றாவது கட்டத்திற்கான அடித்தளத்தை இப்புதிய ப்ரோடோடைப் ஃபாஸ்ட் ப்ரீடர் ரியாக்டர் (PFBR) அமைக்கிறது. இந்தியா உலகில் மிகப்பெரிய தோரியம் வளம் கொண்ட நாடுகளில் ஒன்றாக இருப்பதால், இந்த திட்டம் நாட்டின் நீண்டகால எனர்ஜி பாதுகாப்புக்கு முக்கியமானதாகும்.
மொத்தத்தில், சென்னை கல்பாக்க அணுசக்தி நிலையத்தின் PFBR வெற்றி என்பது இந்தியாவின் எனர்ஜி பாதுகாப்புக்கு முக்கியமானதாகும். மேலும் இந்த PFBR வெற்றி என்பது நாட்டின் அறிவியல் திறன், பொறியியல் மேம்பாட்டுக்கு ஒரு பெரிய அடையாளமாக பார்க்கப்படுகிறது. இது நாட்டின் எரிசக்தி தேவைகளை பூர்த்தி செய்வதோடு, உலக அளவில் இந்தியாவின் அணுசக்தி திறனை வெளிப்படுத்தும் ஒரு பெருமைமிக்க நிகழ்வாகவும் கருதப்படுகிறது.












Click it and Unblock the Notifications