அரபிக் கடலில் உருவானது ஹிகா புயல்.. 20 அடி உயரத்திற்கு அலை எழும்பும்.. மழைக்கு வாய்ப்பு
Recommended Video
சென்னை: அரபிக்கடலில் ஹிகா என்ற பெயரில் புயல் சின்னம் உருவாகி உள்ளது. இது ஓமன் நாட்டை நோக்கி நகரும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை, 'ஹிகா' புயல், உருவாகியுள்ளதாக, இந்தியா வானிலை துறை அறிவித்துள்ளது. குஜராத்திலிருந்து மேற்கு-தென்மேற்கு திசையில் சுமார் 500 கி.மீ தொலைவிலும், கராச்சியின் 430 கி.மீ தென்மேற்கு, மற்றும் ஓமனில் இருந்து 760 கி.மீ தொலைவிலும், இந்த புயல் சின்னம் தற்போது, உள்ளது.

இது படிப்படியாக மேற்கு நோக்கி நகர்ந்து, வரும் புதன்கிழமை காலை ஓமன் நாட்டின் கடற்கரையை சென்று அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புயலின் தாக்கத்தால் அரபிக் கடலை ஒட்டியுள்ள பகுதிகளில், மணிக்கு சுமார் 80 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும்.
8 முதல் 20 அடி உயரத்துக்கு கடலில் அலைகள் எழும்பக்கூடும். இதன் தாக்கம் குஜராத் கடற்கரை பகுதிகளில் எதிரொலிக்கும். எனவே, மீனவர்கள் அடுத்த 3 நாட்களுக்கு அப்பகுதிகளில் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்படுகிறார்கள்.
மேலும், வங்கக்கடலில் செவ்வாய்க்கிழமை புதிய காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாகும் வாய்ப்பு இருப்பதாகவும், இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதன்காரணமாக வடக்கு ஒடிஸா, மேற்கு வங்காளம், ராயலசீமா, தெலுங்கானா கடலோர ஆந்திரப் பகுதிகள், தெற்கு கர்நாடகப் பகுதிகளில் செவ்வாய் மற்றும் புதன் கிழமைகளில் மிதமானது முதல் பலத்த மழை பெய்யும் வாய்ப்புள்ளது.
அடுத்த சில நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரி, கடலோர ஆந்திரப் பகுதிகள் மற்றும் கர்நாடக பகுதி, மேற்கு மத்திய பிரதேசம், பீகார், மேற்கு வங்காளம், சிக்கிம், அருணாச்சல பிரதேசம், அசாம், கிழக்கு ராஜஸ்தான் உள்ளிட்ட பகுதிகளில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளது.
நாகலாந்து, மணிப்பூர், மிசோரம், திரிபுரா, மேற்கு வங்கம், சிக்கிம், ஒடிசா, ஜார்க்கண்ட் மற்றும் பீகார் ஆகிய மாநிலங்களில் பரவலாக இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு உள்ளது.
அரபிக்கடலில் செப்டம்பர் மாதத்தில் உருவாகக்கூடிய புயல் என்பது, தென்மேற்கு பருவமழை காலம் முடிவடைந்ததை, குறிக்கக்கூடிய ஒன்று என்கிறார்கள் வானிலை ஆய்வு மைய அதிகாரிகள்.












Click it and Unblock the Notifications