பத்தாம் வகுப்புத் தேர்வை ரத்து செய்ய வேண்டும்: இந்திய தவ்ஹீத் ஜமாஅத்
சென்னை: தமிழக அரசு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை தள்ளி வைக்க வேண்டும் அல்லது ரத்து செய்ய வேண்டும் என்று இந்திய தவ்ஹீத் ஜமாஅத்-ன் துணைப் பொதுச்செயலாளர் முஹம்மது ஷிப்லி வலியுறுத்தியுள்ளார்.
Recommended Video
இது தொடர்பாக இந்திய தவ்ஹீத் ஜமாஅத்-ன் துணைப் பொதுச்செயலாளர் முஹம்மது ஷிப்லி வெளியிட்ட அறிக்கை: தமிழக அரசு ஜூன் 1 தேதி 10 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடைபெறும் என்று அறிவித்துள்ளது.இந்த அறிவிப்புக்கு பல தரப்பில் இருந்தும் பலத்த எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது.
கொரோனா தொற்று நோய் குறித்த அச்சம் தீராத பட்சத்தில் 10 லட்சம் மாணவர்கள் பங்கேற்கும் தேர்வை பாதுகாப்பாக நடத்துவது சிரமம். கொரோனா பரவல் அச்சம் காரணமாக உலகம் மிகப் பெரிய பாதிப்புகளையும்,உயிரிழப்புகளையும் சந்தித்துக் கொண்டு வருகிறது.

நீட்டிக்கப்படும் லாக்டவுன்
இந்த காரணத்துக்காகவே இந்தியாவில் மக்கள் வீட்டை விட்டு வெளியில் வரக் கூடாது,வெளியூர்கள் செல்லக் கூடாது என்று மத்திய அரசு 144 தடை உத்தரவும் போட்டுள்ளது.இந்த தனிமைப்படுத்தலை மத்திய அரசு மே 17 ம் தேதிக்கும் பிறகும் எவ்வாறு நீடிக்கலாம் என்று ஆலோசித்து வருகிறது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

வடக்கில் இருந்து கொரோனா
சென்னைப் போன்ற நகரங்களில் கொரோனா தொற்றுப் பரவல் வேகமாக பரவி வருகிறது. டெல்லியில் இருந்து சென்னைக்கு ரயில் விட வேண்டாம் என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி, பிரதமர் நரேந்திரமோடிக்கு கோரிக்கை வைத்து இருக்கிறார்.வடக்கில் இருந்து கொரோனா பரவி விடும் என்கிற அச்சம் தான் காரணம்.

விபரீத விளைவுகள் வரும்
மக்களிடத்திலும் இந்த அச்சம் குறையவில்லை.மாநிலம் இயல்பு நிலைக்கு முழுவதுமாக திரும்பவில்லை. 40 நாட்கள் கழிந்த நிலையிலும்,கொரோனா பரவல் தீவிரமடைந்திருக்கிறது. அதனை அரசே ஒப்புக் கொள்ளும் போது,10 லட்சம் மாணவர்களை தேர்வு எழுதும் காரணத்துக்காக வீட்டை விட்டு வெளியில் போக அனுமதிப்பது விபரீத விளைவுகள் ஏற்பட காரணமாகி விடும்.

தேர்வை ரத்து செய்யலாம்
10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வை இன்னும் சில மாதங்களுக்கு தள்ளி வைக்க வேண்டும்.இல்லை என்றால்,தேர்வை இவ்வாண்டுக்கு ரத்து செய்திட வேண்டும்.மாணவ,மாணவிகளின் ஆரோக்கியமும்,உயிர் பாதுகாப்பும் மேலானது.எனவே,தமிழக அரசு கொரோனா பரவல் வீழ்ச்சியடையும் முன்னதாக 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வை நடத்துவது குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும். இந்திய தவ்ஹீத் ஜமாஅத்-ன் துணைப் பொதுச்செயலாளர் முஹம்மது ஷிப்லி கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications