இந்திய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் தமிழக தலைவர் எஸ்.எம்.பாக்கர் உடல்நலன் பாதிப்பால் காலமானார்!
சென்னை: இந்திய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் தமிழ்நாடு தலைவரான எஸ்.எம். பாக்கர் உடல் நலன் பாதிப்பால் காலமானார். எஸ்.எம். பார்க்கர் மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், இயக்கங்களின் தலைவர்கள் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக நிறுவனர்களில் ஒருவர் எஸ்.எம். பாக்கர். இந்திய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் தமிழ்நாடு தலைவராக செயல்பட்டு வந்தார். எஸ்.எம். பாக்கர் உடல்நலக் குறைவால் காலமானார்.

எஸ்.எம். பாக்கர் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் நிறுவனத் தலைவரும்,சமூகச்செயற்பாட்டாளரும், ஊடகவியலாளருமான அண்ணன் எஸ்.எம். பாக்கர் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன்.
தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகத்தினைத் தோற்றுவித்தவர்களில் ஒருவரான அண்ணன் பாக்கர் அவர்கள், இசுலாமியப் பெருமக்களின் நல்வாழ்வாழ்விற்கும், அடிப்படை உரிமைக்கும் ஆதரவாகவும், அவர்கள் மீதான அரச அடக்குமுறைகளுக்கு எதிராகவும் வாழ்நாள் முழுவதும் களத்தில் முன்நின்று போராடிய சமரசமற்ற போராளியாவார். இசுலாமியப் பெருமக்கள் சட்டத்தின் பெயரால் ஒடுக்கப்படும் போதெல்லாம் அவரது குரல் முதலாவதாக ஓங்கி ஒலிக்கும். நீண்டகால சிறைவாசிகளின் விடுதலைக்காக பாடுபட்ட அவரது அர்ப்பணிப்புமிக்கப் பெருவாழ்வு மனித உரிமை போற்றும் அனைவராலும் என்றென்றும் நினைவுக்கூரப்படும். தனிபட்ட முறையில் என்மீது பேரன்புகொண்ட அண்ணன் பாக்கர் அவர்களின் திடீர் மறைவு என் மனதினை மிகவும் துயருறச் செய்கிறது.
அண்ணன் பாக்கர் அவர்களை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், அரசியல் நண்பர்களுக்கும், மனித உரிமை. போராளிகளுக்கும், இசுலாமியப் பெருமக்களுக்கும், இந்திய தவ்ஹீத் ஜமாத் அமைப்பினருக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரில் பங்கெடுக்கிறேன். அண்ணன் பாக்கர் அவர்களுக்கு என்னுடைய கண்ணீர் வணக்கம் என கூறியுள்ளார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் ஆளூர் ஷாநவாஸ் எம்.எல்.ஏ, அடக்குமுறைகளை எதிர்கொண்டவர். ஆதிக்கத்தை எதிர்த்து நின்றவர். உரிமை மறுக்கப்பட்ட மக்களின் குரலாய் ஓங்கி ஒலித்தவர். அவரது கம்பீரக் குரல் இனி கேட்காது. மேடைகளில் கர்ஜிக்கும் அந்த பாக்கரை இனி பார்க்க முடியாது. பேரிழப்பு. ஆழ்ந்த இரங்கல் என தெரிவித்துள்ளார்.
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி: அகில இந்திய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் மாநிலத் தலைவர் எஸ்.எம். பாக்கர் அவர்கள் உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தியை அறிந்து மிகுந்த வருத்தமும், வேதனையும் அடைந்தேன். தமிழ்நாட்டில் இஸ்லாமியர்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்தவரான எஸ்.எம். பாக்கர் சிறந்த பேச்சாளர். அனைத்து சமூகங்களுடனும் இஸ்லாமியர்கள் நல்லுறவுடன் வாழ வேண்டும் என்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டவர். பழனிபாபாவுடன் நெருக்கமான உறவு கொண்டிருந்தவர். மருத்துவர் அய்யா அவர்கள் மீது மதிப்பும் பற்றும் கொண்டிருந்தவர். தைலாபுரம் தோட்டத்திற்கு பல முறை வந்து மருத்துவர் அய்யா அவர்களை சந்தித்து உரையாடியவர். பொதுசிவில் சட்ட எதிர்ப்பு மாநாட்டில் என்னுடன் கலந்து கொண்டவர். அவரது மறைவு தவ்ஹீத் ஜமாத் அமைப்புக்கு பேரிழப்பாகும்.
எஸ்.எம். பாக்கர் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள், தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.












Click it and Unblock the Notifications