மெரினாவை தொடர்ந்து தாம்பரம் விமானப்படை தளத்தில் சாகச நிகழ்வு.. தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்த தளபதி!
சென்னை: இந்திய விமானப்படையின் 92து ஆண்டு விழாவை கொண்டாடும் விதமாக சென்னை தாம்பரம் விமானப்படை தளத்தில் விமானங்களின் சாகச நிகழ்வு மற்றும் விமானப்படை வீரர்களின் அணிவகுப்பு நிகழ்வு நடைபெற்று வருகிறது.
இந்திய விமானப்படையின் 92வது ஆண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் விமானப் படை சாகச நிகழ்ச்சி நேற்று முன்தினம் (அக்டோபர் 6) நடைபெற்றது. சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியைப் பார்வையிட லட்சக்கணக்கான மக்கள் ஒரே நேரத்தில் சென்னை மெரினா கடற்கரையில் திரண்டனர்.

இதனால் மெரினா கடற்கரை சுற்றுவட்டாரத்தில் மிகக் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதற்கிடையே, விமான சாகச நிகழ்வைப் பார்க்க நீண்ட நேரம் வெயிலில் நின்றதாலும், நீர்ச்சத்து இழப்பு ஏற்பட்டதாலும் நூற்றுக்கணக்கானோர் மயக்கமடைந்தனர். அவர்களில் 5 பேர் உயிரிழந்தனர். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், இந்திய விமானப்படையின் 92து ஆண்டு விழாவை கொண்டாடும் விதமாக சென்னை தாம்பரம் விமானப்படை தளத்தில் விமானங்களின் சாகச நிகழ்வு மற்றும் விமானப்படை வீரர்களின் அணிவகுப்பு நிகழ்வு இன்று நடைபெற்று வருகிறது.
தாம்பரம் விமானப்படை தளத்தில் விமானப்படை வீரர்கள், பல்வேறு சாகச நிகழ்வுகளை அரங்கேற்றியுள்ளனர். சென்னை மெரினாவில் நடைபெற்றது போலவே பல்வேறு விமானங்கள், ஹெலிகாப்டர்கள் வானில் சாகசங்கள் செய்தன. மேலும், விமானப்படை வீரர்கள் மிடுக்கான அணிவகுப்பு நடத்தினர்.
மெரினா கடற்கரையில் நடந்த விமான சாகச நிகழ்வுக்கு சிறப்பான ஒத்துழைப்பு அளித்த தமிழ்நாடு அரசு, சென்னை நிர்வாகத்திற்கு நன்றி என 92வது விமானப்படை தினத்தை முன்னிட்டு தாம்பரம் விமானப்படை தளத்தில் நடந்த நிகழ்ச்சியில் விமானப்படை தளபதி அமர் ப்ரீத் சிங் பேசியுள்ளார்.












Click it and Unblock the Notifications