இனி ஜியோதான்.. ஏர்டெலை கழட்டிவிட்ட மத்திய அரசு நிறுவனம்! தமிழ் நீக்கத்துக்கே இதான் காரணமா
சென்னை: இண்டேன் கேஸுக்கு தொலைபேசி வழியில் புக்கிங் செய்ய இதுவரை ஏர்டெர்ல் நெட்வொர்க்கை பயன்படுத்தி வந்த இந்தியன் ஆயில் நிறுவனம் தற்போது ஜியோ நிறுவன நெட்வொர்க்கை மாற்றி இருக்கிறது.
இன்டேன் தானியங்கி சமையல் எரிவாயு பதிவு சேவையில் கடந்த சில நாட்களாக தமிழ் நிறுத்தப்பட்டு, இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே சேவை வழங்கப்பட்டு இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதன் காரணமாக ஆங்கிலம், இந்தி தெரியமல் தமிழ் மட்டுமே தெரிந்த மக்கள் கடும் சிரமங்களுக்கு ஆளாகின. இது தொடர்பாக மார்க்சிஸ்ட் எம்பி சு வெங்கடேசன் எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருந்தார்.

இந்த நிலையில் இந்தியன் ஆயில் தலைமை பொது மேலாளர் வெற்றி செல்வகுமார் இது தொடர்பாக விளக்கம் கொடுத்து உள்ளார். அதில், "இந்தியாவின் முன்னணி எரிசக்தி நிறுவனங்களில் ஒன்றான இந்தியன் ஆயில் நிறுவனமான நாங்கள் நவம்பர் 1, 2023 முதல் ஏர்டெல்லிருந்து ஜியோவிற்கு மாறியதால் எங்கள் IVRS (இன்டர்ஆக்டிவ் வாய்ஸ் ரெஸ்பான்ஸ் சிஸ்டம்) - 7718955555 சிஸ்டத்தில் மாநில மொழி தேர்வு வசதியில் சிறு தடங்கல் ஏற்பட்டது என்பதை எங்களது மதிப்புமிக்க வாடிக்கையாளர்களுக்கு தெரிவித்துக்கொள்கிறோம்.
தற்காலிகமாக நிகழ்ந்த இந்த மாற்றத்தின்போது எங்களது சிஸ்டத்தில் உங்களுக்கு விருப்பமான மொழி விபரங்கள் பதிவேற்றம் செய்யப்படும் வரை ஆங்கிலம் மற்றும் இந்தி மொழி தேர்வுகளை மட்டுமே நீங்கள் பெற முடிந்தது. இது உங்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தியிருக்கும் என்பதை அறிகிறோம். நீங்கள் இதனை பொறுமையாக புரிந்துகொண்டு உள்ளதற்கு எங்களது நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இந்த பிரச்சினைக்கு வெற்றிகரமாக தீர்வு காணப்பட்டுவிட்டது என்பதை உங்களுக்கு மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்வதுடன், எங்களது IVRS சிஸ்டம் இப்போது தானாகவே மாநில மொழிகள் மற்றும் விருப்பமான மொழித்தேர்வு அமைப்புகளுடன் கூடிய வசதியை வாடிக்கையாளர்கள் தடையின்றி பெறலாம் என்பதையும் உறுதி செய்கிறோம்.
LPG சிலிண்டர் மின்பதிவு வசதியை தமிழ் மொழியிலும் பெறலாம் என்ற தகவலுடன், பலதரப்பட்ட மொழிகளைப் பேசும் வாடிக்கையாளர்களுக்கும் உதவும் வகையில் பல மாநில மொழித்தேர்வுகளுடன் இந்த வசதி வழங்கப்பட்டுள்ளது என்பதையும் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். இந்தியன் ஆயிலில் உங்களுக்கு அனைத்து இயலக்கூடிய வழிகளிலும் சேவையளிப்பதில் முனைந்து செயல்படுகிறோம் என்பதுடன் எங்கள் சேவைகள் உங்களுக்கு வசதியாகவும் சௌகரியமாகவும் இருப்பதையும் உறுதி செய்கிறோம்.

இந்த சேவை மாற்றத்தின் செயலாக்கத்தினால் உங்களுக்கு ஏதேனும் அசௌகரியம் ஏற்பட்டிருந்தால் அதற்கு மிகவும் வருத்தம் தெரிவித்துக்கொள்வதுடன் எங்கள் சேவைகளின் மீது நீங்கள் வைத்துள்ள இடைவிடாத நம்பிக்கைக்கு எங்களது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். இந்தியன் ஆயில் முன்னேறத்திற்கு சக்தியளிக்கிறோம். வாழ்விற்கு புத்துயிரூட்டுகிறோம்." என்று குறிப்பிட்டு இருக்கிறார். இந்த அறிக்கையின் மூலமாக ஏர்டெல் நெட்வொர்க்கில் இருந்து ஜியோவுக்கு இந்தியன் ஆயில் மாறி இருப்பது தெரிய வந்துள்ளது.












Click it and Unblock the Notifications