மனிதநேயத்தை பேணிக் காக்க தேச-நேச திருப்பயணம்.. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அறைகூவல்!
சென்னை: சகவாழ்வு, புரிந்துணர்வு, சகோதரத்துவம், மனிதநேயம் ஆகியவற்றை பேணிக் காக்கும் வகையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் தேச-நேச திருப்பயணம் மேற்கொள்வதாக அக்கட்சியின் தேசியத் தலைவர் காதர் மொகிதீன் தெரிவித்துள்ளார்.
எல்லா மதங்களுக்கிடையே அன்பையும், பாசத்தையும், நேசத்தையும் பரப்பவேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

முஸ்லிம் லீக்
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் தேச-நேச திருப்பயணம் என்ற பெயரில் அனைத்து மதத்தலைவர்களையும் ஒருங்கிணைத்து கருத்தரங்கங்களை நடத்தி வருகிறோம். கேரளாவில் தொடங்கி கர்நாடகத்துக்கு அடுத்து இப்போது தமிழகத்தில் நடத்த இருக்கிறோம். இந்த மத நல்லிணக்க கருத்தரங்கம் இந்தியா முழுவதும் நடத்த இருக்கிறோம். வருகிற 02-09-2022 வெள்ளிக்கிழமை மாலை 5.30 மணிமுதல் 8.30 மணிவரை சென்னை, இராயபுரத்தில் உள்ள மேற்கு மாதா சர்ச் சாலையில் அமைந்துள்ள ரம்ஜான் மஹாலில் நடைபெறுகிறது.

சிறப்பு விருந்தினர்கள்
இந்நிகழ்ச்சிக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவராகிய பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் ஆகிய நான் தலைமை வகிக்கிறேன். கேரளா சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவரும், தேசிய பொதுச்செயலாளருமான பி.கே. குஞ்ஞாலிக்குட்டி முன்னிலை வகிக்கிறார். கேரள மாநிலத் தலைவர் சாதிக் அலி சிகாப் தங்ஙள் துவக்க உரையாற்றுகிறார். சிறப்பு விருந்தினராக தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி, சிறுபான்மையினர் நலன், வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ். மஸ்தான் ஆகியோர் பங்கேற்கிறார்கள்.

அன்பு -பாசம்
தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையத் தலைவர் எஸ்.பீட்டர் அல்போன்ஸ், அய்யாவழி பால பிரஜாபதி அடிகளார், எஸ்றா சற்குணம், சுவாமி ஸ்ரீ ராகவேந்திர ஸ்ரீ ஹரி சுவாமி,உள்ளிட்ட பல்வேறு மதத்தலைவர்கள் பங்கேற்று சிறப்பிக்கிறார்கள். இந்த கருத்தரங்கின் நோக்கம் இந்தியர்கள் அனைத்து மதங்களைச் சேர்ந்தவர்கள். தங்களின் மதங்களை சரியாகப் புரிந்து நடப்பதோடு எல்லா மதங்களுக்கிடையே அன்பையும், பாசத்தையும், நேசத்தையும் பரப்பவேண்டும்.

வேற்றுமையில் ஒற்றுமை
இந்தியாவில் ஆன்மீக பாரம்பரியத்தை நிலைநாட்ட வேண்டும் என்றும் வேற்றுமையில் ஒற்றுமை, சகவாழ்வு, புரிந்துணர்வு, சகோதரத்துவம், மனிதநேயம் ஆகியவற்றை பேணிக் காக்கவே இந்த தேச-நேச திருப்பயணத்தின் நோக்கமாகும் என்று தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு பேராசிரியர் கே.எம். காதர் மொகீதீன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications