மத்திய அரசைக் கண்டித்து... இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆர்ப்பாட்டம்
சென்னை: சிறுபான்மையின மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் மத்திய அரசு ஈடுபடுவதாக கூறி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியினர் நாடு தழுவிய அளவில் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
1991 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட வழிப்பாட்டுத் தலங்களின் சட்டத்தை மாற்ற கூடிய முயற்சியை மத்திய அரசு கைவிட வேண்டும் என அவர்கள் முழக்கம் எழுப்பினர். கொரோனா வைரஸ் தொற்று தொடர்பாக தப்லீக் ஜமாஅத்தினர்களின் மீது வழக்கு தொடருவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என எச்சரிக்கை விடுத்தனர்.

மேலும், சிறுபான்மை மக்களுக்கு எதிராக மத்திய அரசின் நடவடிக்கைகள் அமைந்து வருவதாகவும், இந்தப் போக்கை உடனடியாக மாற்றிக்கொள்ள வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பால் வெளிநாடுகளில் தவித்து வரும் இந்தியர்களை மீட்டு வரும் பணிகளில் மத்திய, மாநில அரசுகள் பொறுப்பற்ற முறையில் செயல்பட்டு வருவதாகவும் குற்றச்சாட்டப்பட்டன.
தமிழகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் சமூக இடைவெளியுடன் ஆர்ப்பாட்டம் நடைபெற்ற நிலையில், சென்னையில் அக்கட்சியின் தேசிய தலைவர் காதர் மொகிதீன் கலந்துகொண்டார். தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டிணத்தில் ஐ.யூ.எம்.எல். முகம்மது அபூபக்கரும், இராமநாதபுரத்தில் நவாஸ்கனி எம்.பியும் கலந்துகொண்டனர்.












Click it and Unblock the Notifications