வேளச்சேரி ரயில் நிலையத்தில் பேட்மிண்டன் அரங்கம்.. சென்னை மக்களுக்கு குட் நியூஸ் சொன்ன தெற்கு ரயில்வே
சென்னை: புறநகர் ரயில்கள் செல்லும் சென்னை வேளச்சேரி ரயில் நிலையத்தில் பேட்மிண்டன், ஜிம்னாஸ்டிக் உள்ளிட்ட உள் அரங்கு விளையாட்டு மைதானம் அமைக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதற்கான டெண்டர் கோரப்பட்டுள்ளதாக கூறபட்டுள்ள நிலையில், மக்கள் ஆரோக்கிய வாழ்க்கை முறைக்காகவும், வருவாய் ஈட்டும் முயற்சியாகவும் இந்த நடவடிக்கை பார்க்கப்படுகிறது.
சென்னை கடற்கரையில் இருந்து வேளச்சேரி வரை பறக்கும் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இதன் அடுத்த கட்டமாக வேளச்சேரி - பரங்கிமலை இடையிலான பறக்கும் ரயில் பாதை அமைக்கும் பணி 2008ல் தொடங்கப்பட்டது. ரூ.495 கோடி மதிப்பில் தொடங்கப்பட்ட இந்த விரிவாக்க திட்டம், நிலம் கையப்படுத்த முடியாததால் முடங்கியது.

வேளச்சேரி பறக்கும் ரயில்
2021ல் திமுக ஆட்சிக்கு பின்னரே மீண்டும் இந்த திட்டம் தொடங்கப்பட்டது. கடந்த சில ஆண்டுகளாக நடந்து வந்த இந்த பணிகள், தற்போது முடிவடையும் தருவாயில் உள்ளது. இன்னும் ஒரு சில பணிகள் மட்டுமே இருக்கின்றன. இந்த நிலையில் வேளச்சேரி - பரங்கிமலை இடையிலான பறக்கும் ரயில் சேவை நவம்பர் மாதம் தொடங்கப்படும் என்று தெரிய வந்தது.
தெற்கு ரயில்வே அறிவிப்பு
இதனை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளதாக கூறப்பட்டது. 17 ஆண்டுகளுக்கு பின் இந்த திட்டம் முடிவடைய உள்ளது சென்னை மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில் தெற்கு ரயில்வே தரப்பில் வேளச்சேரி ரயில் நிலையத்தில் உள்விளையாட்டு அரங்கம் அமைக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பேட்மிண்டன் அரங்கம்
புறநகர் ரயில்கள் செல்லும் சென்னை வேளச்சேரி ரயில் நிலையத்தில் பேட்மிண்டன், ஜிம்னாஸ்டிக் உள்ளிட்ட விளையாட்டுகளுக்கான உள் அரங்கு விளையாட்டு மைதானம் அமைக்கப்பட உள்ள்அது. இதற்கான டெண்டர் கோரப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்திருக்கிறது. வருவாய் ஈட்டும் முயற்சியாகவும், மக்களின் ஆரோக்கிய வாழ்க்கை முறையை ஊக்குவிக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருக்கிறது.
இளைஞர்கள் வரவேற்பு
தெற்கு ரயில்வேயின் இந்த அறிவிப்பு இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால் சென்னையின் பல்வேறு பகுதிகளிலும் கிரிக்கெட், பேட்மிண்டன் உள்ளிட்ட உள்விளையாட்டு அரங்குகளுக்கு மிகப்பெரிய வரவேற்பு இருந்து வருகிறது. அதேபோல் உடற்பயிற்சி மைதானங்களிலும் இளைஞர்கள் குவிந்து வருகின்றனர்.
இரட்டிப்பு மகிழ்ச்சி
இதனால் ரயில்வே சார்பாக அமைக்கப்படும் போது, அதற்கான கட்டணமும் குறைவாக இருக்கும், சேவையும் தரமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வேளச்சேரி - பரங்கிமலை இடையிலான பறக்கும் ரயில் சேவை இன்னும் சில மாதங்களில் தொடங்கவுள்ள நிலையில், தெற்கு ரயில்வேயின் இந்த அறிவிப்பு இரட்டிப்பு மகிழ்ச்சியாக அமைந்திருக்கிறது.












Click it and Unblock the Notifications