மட்டன் பிரியாணி கேட்டா எச்ச பிரியாணி டெலிவரி செய்றாங்க.. ஸ்விக்கி மீது சென்னை தொழிலதிபர் புகார்
சென்னை: தாம்பரம் அருகே ஸ்விக்கி மூலமாக ஒரு பிரியாணி கடையில் மட்டன் பிரியாணி ஆர்டர் செய்தவருக்கு ஸ்விக்கி ஊழியர் சாப்பிட்டு மிச்ச மீதியை தனக்கு டெலிவரி செய்ததாக தொழிலதிபர் ஒருவர் புகாரில் தெரிவித்துள்ளார்.
பெருங்களத்தூர் காமதேனு நகர் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ். இவர் ஞாயிற்றுக்கிழமை மதிய உணவுக்காக ஸ்விக்கியில் மட்டன் பிரியாணியை ஆர்டர் செய்தார். தாம்பரத்தை அடுத்த சேலையூர் ராஜகீழப்பாக்கம் பகுதியில் உள்ள ஒரு பிரியாணி கடையில் ஸ்விக்கி மூலம் ஆர்டர் செய்தார்.

இந்த ஆர்டரை அவர் 3.30 மணிக்கு கொடுத்துள்ளார். ஆனால் பிரியாணி ஒரு மணி நேரத்திற்கு மேல் தாமதமாகத்தான் வந்துள்ளது. பசியால் தவித்த சுரேஷ். பிரியாணி பிரிக்க முற்பட்டார். அப்போது அந்த பாக்கிங்கில் டேப் ஒட்டப்படாதது குறித்து அதிர்ச்சி அடைந்தார்.
இதனால் சந்தேகத்துடனேயே அந்த பிரியாணி திறந்து பார்த்தால், அதில் பிரியாணியின் அளவு பாதியை விட குறைவாகவே இருந்தது. இதனால் கரண்டியை விட்டு கிளறினார். அப்போது மட்டன் ஆர்டர் செய்த அவருக்கு மட்டனின் எலும்பு கூட மிஞ்சவில்லை. உடனே சம்பந்தப்பட்ட பிரியாணி கடையை தொடர்பு கொண்டு கேட்டார்.
அப்போது கடைக்காரர்களோ நாங்கள் மட்டன் பிரியாணியை முழுவதுமாகத்தான் ஸ்விக்கி ஊழியரிடம் கொடுத்தோம் என கூறியதுடன் அவர்கள் எப்படி பேக்கிங் செய்வார்கள் என்பதை வீடியோவாக எடுத்து சுரேஷுக்கு அனுப்பியுள்ளனர். இதனால் நடுவழியில் ஸ்விக்கி ஊழியர் சாப்பிட்டிருக்கலாம் என சந்தேகம் அடைந்தார் சுரேஷ்.
இதைத் தொடர்ந்து உணவு டெலிவரி செய்த ஸ்விக்கி ஊழியரான முத்துக்குமாரை செல்போனில் தொடர்பு கொண்ட சுரேஷ், பிரியாணி குறைந்திருப்பது குறித்து கேட்டதற்கு ஆமாம் நான்தான் சாப்பிட்டேன். இப்ப அதுக்கு என்ன, உங்களால் செய்ய முடிந்ததை செய்து கொள்ளுங்கள். பிரியாணியில் பீஸ் இல்லாவிட்டால் என் மேனேஜருக்கு போன் செய்யுங்கள், அவரு கொண்டு வருவாரு என மிரட்டும் தொனியில் பேசிவிட்டு போன் இணைப்பை முத்துக்குமார் கட் செய்துவிட்டதாக சுரேஷ் தெரிவித்தார்.
இதுகுறித்து மீண்டும் சம்பந்தப்பட்ட பிரியாணி கடைக்கே போன் செய்த போது இது போல் தினம் 3 அல்லது 4 புகார்கள் வருகின்றன. நீங்கள் ஸ்விக்கி அலுவலகத்திற்கு புகார் கொடுங்கள் என தெரிவித்தனராம். இதனால் ஸ்விக்கி ஆப்பில் ரேட்டிங் புகார் அளித்த சாட் செய்த போது ஒருவர் கூட இவருக்கு பதில் அளிக்கவில்லை என்றார். காசு கொடுத்து பிரியாணி ஆர்டர் செய்த தனக்கு எச்சில் பிரியாணி சாப்பிட வேண்டும் என தலையெழுத்தா என கேட்டிருந்தார். மேலும் இந்த சம்பவம் குறித்து பீர்க்கன்கரணை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.












Click it and Unblock the Notifications