கடும் இருமல்.. பரவி வரும் இன்ஃப்ளூயன்ஸா-A வைரஸ்.. என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது.. ICMR அறிவுரை!
நாடு முழுவதும் தீவிரமாகப் பரவி வரும் காய்ச்சல் குறித்து ஐசிஎம்ஆர் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
சென்னை : சமீபமாக நாடு முழுவதும் இன்ஃப்ளூயன்ஸா-ஏ வகை வைரஸ் தொற்று காய்ச்சல் அதிகமாக பரவி வருவதாக ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது. இந்த தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நுரையீரல் பாதிப்பு அதிகம் ஏற்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. இன்ஃப்ளூயன்ஸா ஏ வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் என்ன செய்யவேண்டும் என்றும் ஐசிஎம்ஆர் வழிகாட்டல் நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு உட்பட நாடு முழுவதும் கடந்த சில வாரங்களாக கடுமையான உடல் வலி, தொண்டை வலி, இருமல் சளியுடன் கூடிய காய்ச்சல் தீவிரமாகப் பரவி வருகிறது.
இது தொடர்பாக ஐ.சி.எம்.ஆர் ஆய்வு பரிசோதனை நடத்திய நிலையில் தற்போது அதிகமாகப் பரவி வருவது இன்ஃப்ளூயன்ஸா ஏ எச்3என்2 வகை வைரஸ் என்பது தெரியவந்துள்ளது.

இன்ஃப்ளூயன்ஸா ஏ
இதுகுறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளில், நாடு முழுவதும் உள்ள ஐசிஎம்ஆரின் 30 ஆய்வகங்களில் நோயாளிகளின் சளி மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன. இதில் இந்தியாவில் பரவுவது இன்ஃப்ளூயன்ஸா ஏ எச்3என்2 வகையை சேர்ந்த வைரஸ் என்பது தெரியவந்துள்ளது. கடந்த டிசம்பர் 15 முதல் இதுவரை மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் இந்த வகை வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

பாதிப்பு
உலக நாடுகளின் பருவநிலைக்கு ஏற்ப ஆண்டுதோறும் இன்ஃப்ளூயன்ஸா வகை வைரஸ் பரவுகிறது. இன்ஃப்ளூயன்ஸா ஏ எச்3என்2 வகை வைரஸால் பாதிக்கப்படுவோருக்கு நுரையீரல் தொற்று ஏற்படுகிறது. 86 சதவீதம் பேர் இருமல், 27 சதவீதம் பேர் மூச்சுத் திணறலால் பாதிக்கப்படுகின்றனர். நோயாளிகளில் 10 சதவீதம் பேருக்கு ஆக்சிஜன் சிகிச்சை தேவைப்படுகிறது. 7 சதவீதம் பேர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படுகின்றனர்.

ஐசிஎம்ஆர் வழிகாட்டல்
1. இன்ஃப்ளூயன்ஸா ஏ வைரஸ் தொற்றில் இருந்து தப்பிக்க அடிக்கடி சோப்பு போட்டு கைகளை கழுவ வேண்டும்.
2. முகக்கவசம் அணிய வேண்டும்.
3. கழுவாத கைகளால் கண்களையோ, மூக்கையோ தொடக்கூடாது. 4. அதிகமான தண்ணீர் குடிக்க வேண்டும்.
5. காய்ச்சல், உடல் வலி அதிகமாக இருந்தால் மருத்துவரின் அறிவுரைப்படி பாராசிட்டமால் மாத்திரையை உட்கொள்ள வேண்டும்.
6. பொது இடங்களில் எச்சில் துப்பக்கூடாது. கைகுலுக்கியோ, கட்டித் தழுவியோ வாழ்த்து கூறக்கூடாது.
7. கூட்டமான இடங்களுக்கு செல்லக் கூடாது.
8. தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும்.
9. மருத்துவரின் அறிவுரை இன்றி மருந்துகளை உட்கொள்ளக்கூடாது.

7 நாட்கள் வரை
இந்திய மருத்துவர்கள் அசோசியேசன் (ஐஎம்ஏ) வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவில் இன்ஃப்ளூ யன்ஸா ஏ எச்3என்2 வைரஸால் பாதிக்கப்படுவோருக்கு இருமல், தொண்டை வலி, உடல் வலி, வயிற்றுப்போக்கு உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்படுகின்றன. காய்ச்சல் பாதிப்பு 7 நாட்கள் வரை நீடிக்கிறது. 50 வயதுக்கு மேற்பட்டோர், 15 வயதுக்கு உட்பட்ட சிறார்கள் இந்த வகை வைரஸால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். காற்று மாசுவும் இந்த வைரஸ் பரவலுக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.

ஐ.எம்.ஏ எச்சரிக்கை
பாக்டீரியா வகை காய்ச்சலா, வைரஸ் வகை காய்ச்சலா என்பதை ஆய்வின் மூலம் கண்டறிந்து மருத்துவர்களின் ஆலோசனைப்படி மருந்துகளை உட்கொள்ள வேண்டும். லேசான காய்ச்சலுக்கு அடிக்கடி 'ஆன்டி பயாடிக்' மருந்துகளை உட்கொள்வதால் கிருமிகளுக்கு 'ஆன்டி பயாடிக்' மருந்துகளை எதிர்க்கும் ஆற்றல் உருவாகிவிடும். வைரஸ் பரவுவதை தடுக்க அடிக்கடி கைகளை கழுவுவது உள்ளிட்ட சுகாதார நடைமுறைகளை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும் என ஐஎம்ஏ அறிவுறுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications