மோடி தன்னிச்சையாக முடிவெடுத்தால் கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் தோல்வி.. ராகுல் காந்தி எச்சரிக்கை
சென்னை: அனைத்து மாநில முதல்வர்களுடன் இணைந்து பிரதமர் செயல்படாமல் போனால், கொரோனா வைரஸ் பாதிப்புக்கு எதிரான போராட்டத்தில் நாம் தோற்றுபோகும் வாய்ப்பு இருக்கிறது என்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
டெல்லியில் இருந்தபடி இன்று வீடியோ மூலமாக செய்தியாளர்களுடன் கலந்துரையாடினார் ராகுல் காந்தி. அப்போது அவர் கூறியதன், தொகுப்பு இதோ:
பிரதமர் நரேந்திர மோடியின் பணியாற்றும் பாணி என்பது பிற நேரங்களில் வேண்டுமானால் பலன் அளிக்கலாம். ஆனால், இதுவரை இல்லாத அளவுக்கான ஒரு பிரச்சனையை இந்த நாடு எதிர் கொண்டு இருக்கக் கூடிய நிலையில், மோடியின் வழக்கமான பாணியில் எந்த பலனும் இருக்காது.

வலிமையான முதல்வர்கள், கலெக்டர்கள்
ஒரு வலிமையான பிரதமர் மட்டும் இப்போதைக்கு தேவை கிடையாது. நமக்கு தேவை, நிறைய.. நிறைய, வலிமையான தலைவர்கள். வலிமையான முதல்வர்கள், வலிமையான கலெக்டர்கள் தேவை. பஞ்சாயத்து அளவில், மாவட்ட அளவில், மாநில அளவிலான தேசபக்தி கொண்ட தலைவர்கள்தான் இப்போதைக்கு உடனடி தேவை. இந்த போராட்டத்தை உள்ளூர் அளவில் எதிர்கொள்ள வேண்டிய தேவை இருக்கிறது. இது தேசிய அளவில் இருந்து கொண்டு தீர்க்கக் கூடிய விஷயம் கிடையாது.

மண்டல அறிவிப்புகள்
உதாரணத்திற்கு, சிவப்பு, ஆரஞ்சு, பச்சை மண்டலங்கள் பற்றி தேசிய அளவில் அறிவிக்கப்பட்டது. மாவட்ட கலெக்டர்கள் அளவில் எடுக்கக் கூடிய ஒரு முடிவு இதுவாகும். உள்ளூர் நிலவரத்தை அறிந்து வைத்திருப்பது அவர்கள்தான்.

பாஸ் மாதிரி இன்றி சக ஊழியர் போல ஆலோசியுங்கள்
முதல்வர்களுடன் பிரதமர் மோடி அடிக்கடி ஆலோசிக்க வேண்டும். ஒரு பாஸ் மாதிரி கிடையாது. சக ஊழியரை போல இந்த பேச்சுவார்த்தை இருக்க வேண்டும். அரசிடம் என்ன திட்டம் இருக்கிறது என்பது பற்றி வெளிப்படையான கொள்கை இருக்க வேண்டும். பொதுமக்களுக்கு உரிய உதவிகளை செய்யாமல் நாட்கள் லாக்டவுனை நீடிக்க முடியாது.

மக்களுக்கு பயம்
ஊரடங்கு உத்தரவை என்பது மக்களுக்கு மனதளவிலும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய ஒரு விஷயம். ஆன் செய்வது, ஆப் செய்வது என்பதற்கு இது ஸ்விட்ச் கிடையாது. நோய் பற்றி மக்கள் இப்போது மிகுந்த அச்சத்தில் உள்ளனர். எனவே மக்களுக்கு, மன உளைச்சல் ஏற்படுகிறது. விதிமுறைகளை தளர்த்த வேண்டும். ஆனால் மக்கள் மனதில் இருக்கக்கூடிய பயத்தை முதலில் அகற்ற வேண்டும்.












Click it and Unblock the Notifications