ஜல்லிக்கட்டு வீரர்களுக்கு இன்சூரன்ஸ்.. மருத்துவ பரிசோதனை.. அவனியாபுரத்தில் அசத்தல்
சென்னை: புகழ் பெற்ற அவனியாபுரம் ஐல்லிக்கட்டு போட்டியில் பங்கு பெறும் மாடுபிடி வீரர்களுக்கான "இன்சூரன்ஸ்" திட்டத்தின் கீழ் மாநகராட்சி சுகாதார துறையினர் மருத்துவ சோதனையுடன், காப்பீடு வசதிகள் செய்யப்பட்டது.
மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் மாடுபிடி வீரர்களுக்கான காப்பீடு பதிவு பணி துவங்கியது. 'பிரதம மந்திரி சுரக்ஷா யோஜனா' திட்டத்தின் கீழ் ரூ.12க்கு 1 லட்சம் , ரூ.300க்கு 2 லட்சத்திற்கு காப்பீடு ஆண்டிற்கு 1 முறை கட்டும் திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படுகிறது.
இதில் மாடுபிடி வீரர்கள் வங்கி கணக்குகளில் இருந்து பணத்தை எடுக்கும் வசதியும், ஆதார் கார்டு மூலம் இணைக்கப்பட்டு விபத்தில் மாடுபிடி வீரர் பாதிக்கப்பட்டால் அவரது வங்கி கணக்கில் பணம் செலுத்த இணைக்கும் வசதியும் செய்யப்பட்டுள்ளது.
இது முன் மாதிரி திட்டமாக இருந்தாலும், இங்கு வரும் மாடு வீரர்களுக்கு முறையான தகவல் வழங்கப்படவில்லை.
காப்பீடு செய்ய வரும் மாடு பிடி வீரர்களுக்கு ஆதார் கார்டு, வங்கி கணக்கு எண் போன்றவை கொண்டு வர தகவல் இல்லாததால் பலர் பல மணி நேரம் காத்திருக்கும் சூழ்நிலை உருவானது.
இதனால் மாடுபிடி வீரர்கள் டோக்கன் வாங்க, இன்சூரன்ஸ் , மற்றும் நாளை நடைபெறும் உடல்தகுதி சோதனை என மூன்று நாட்கள் அலைய வேண்டிய நிலை உள்ளதாக தெரிவித்தனர். காப்பீடு வசதியுடன் மாடுபிடி வீரர்களுக்கு இதய துடிப்பு, உயரம், எடை பரிசோதனையை மருத்துவர்கள் குழுவினர் செய்தனர்.