அதிமுகவில் 8,000 பேருக்கு ஒரே நாளில் நேர்காணல்... ஜனநாயகம் படும்பாடு இருக்கே-கூட்டணி சகவாசம் அப்படி!
சென்னை: அகில உலக வரலாற்றிலேயே தேர்தலில் போட்டியிட விருப்ப மனு கொடுத்த 8,000 பேருக்கு ஒரே நாளில் நேர்காணல் நடத்தி மெகா கின்னஸ் சாதனை படைத்திருக்கிறது அதிமுக. ஜனநாயகத்தின் அத்தனை விழுமியங்களும் ஆடிக்காற்றில் அம்மி பறப்பது போல அதிமுகவிடம் பறந்து கொண்டிருக்கிறது.
Recommended Video

ஜனநாயக மாண்புகளை காப்பாற்றுவதற்காக சர்வாதிகாரத்தனமாக இல்லாமல் இருக்கத்தான் சட்டசபை தேர்தலில் போட்டியிட விரும்புவோரிடம் விருப்ப மனுக்கள் கட்டணத்துடன் பெறப்படுகின்றன. கட்டணமாவது கட்சி நிதிக்கு போய்விடும் பிரச்சனை இல்லை.

விருப்ப மனு நேர்காணல்
இப்படி விருப்ப மனு கொடுத்தவர்களிடம் நேர்காணல் நடத்துவதும் ஜனநாயகத்தின் இன்னொரு பிரதான அம்சம். தேர்தலில் போட்டியிட விருப்ப மனு கொடுத்தவர் கட்சிக்காக எத்தனை ஆண்டுகாலம் பாடுபட்டார்? என்ன பணிகள் செய்தார்? அவரது பின்னணி என்ன? கட்சி போராட்டங்களில் பங்கேற்றாரா? என்பதை எல்லாம் வேட்பாளர் நேர்காணல் குழு ஆய்வு செய்யும். அதற்குதான் இந்த நேர்காணல்.

சம்பிரதாய நேர்காணல்கள்
கட்சிகளைப் பொறுத்தவரையில் இந்த ஜனநாயக மரபுகள் சம்பிராதமாயாகத்தான் கடைபிடிக்கப்படுகின்றன. அதில் எந்த கட்சியும் விதிவிலக்கு அல்ல. இருந்த போதும் இந்த சம்பிரதாய நேர்காணல்கள் கூட சர்ச்சைக்குரியதாக இருக்கக் கூடாது என்பதே ஜனநாயக ஆர்வலர்களின் எண்ணம்.

8000 பேருக்கு நேர்காணல்
அதிமுக இப்போது செய்து கொண்டிருப்பது இந்த மரபுகளை சீர்குலைக்கும் செயல் என்பதுதான் இவர்களின் ஆதங்கம். ஒரே நாளில் 8000க்கும் அதிகமானோருக்கு நேர்காணல் என்பது அப்பட்டமான கண்துடைப்பு என்பது எல்லோருக்கும் தெரியும். ஒருநபருக்கு ஒரு நிமிடம் கூட ஒதுக்க முடியாமல் கூட்டமாக வைத்து நேர்காணல் என்பதெல்லாம் ஜனநாயகத்தில் பெருங்கூத்து என்றுதான் சொல்லலாம்.

பாஜக சகவாசம்
அதுசரி அதிமுக இப்போது கூட்டணி சேர்ந்திருப்பது எம்.எல்.ஏக்களை ராஜினாமா செய்ய வைத்து ஆட்சியை கவிழ்க்கும் கலையில் கைதேர்ந்த ஜனநாயக மாண்பு கொண்ட பாஜக அல்லவா. சேராத இடந்தன்னில் சேர்ந்தால் இப்படித்தான் அதிமுகவும் சிந்திக்கும்.. என்ன செய்ய? விதி வலியது.












Click it and Unblock the Notifications