சினிமா பிரபலங்களுக்கு ‘கொக்கைன்' சப்ளை? சென்னையில் சிக்கிய நைஜீரியர்கள்.. விசாரணையில் ஷாக்!
சென்னை: சென்னையில் கொக்கைன் போதைப்பொருள் விற்ற நைஜீரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் தமிழ் படங்களில் துணை நடிகர்களாக நடித்துள்ளதால், அவர்கள் சினிமா பிரபலங்களுக்கு போதைப் பொருள் விற்றார்களா என தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
சென்னையில் கொக்கைன் போதைப் பொருள் விற்பனை செய்யப்படுவதாக அண்ணாநகர் துணை ஆணையர் ரோகித் நாதன் தலைமையிலான தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதைத்தொடர்ந்து, தனிப்படை போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். இதையடுத்து, தாம்பரத்தை அடுத்து மணிமங்கலம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் சோதனை நடத்தி ஒரு கிலோ கொக்கைன் போதை பொருளை பறிமுதல் செய்தனர்.

மேலும், போதைப்பொருளை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்த நைஜீரிய நாட்டை சேர்ந்த வாலிபர் ஒருவரை கைது செய்து விசாரணை நடத்தினர். மேலும், அவரிடம் நடத்திய விசாரணையின் மூலம் பள்ளிக்கரணையில் கொக்கைன் போதைப் பொருள் பதுக்கி வைத்திருந்த மற்றொரு நைஜீரிய வாலிபரை கைது செய்த தனிப்படை போலீசார், அவரிடம் இருந்து கால் கிலோ கொக்கைன் போதைப்பொருளை பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து, நைஜீரிய வாலிபர்கள் இருவர் மற்றும் ஒரு பெண்ணையும் அமைந்தகரை காவல் நிலையம் அழைத்து வந்து போலீசார் நடத்திய விசாரணையில், நைஜீரியா நாட்டை சேர்ந்த அஜாகு சினேடு ஓனாச்சி (47), அமே சியோன் இனலெக்வு (40) மற்றும் எஸ்மெல்சியா மிகாஷ் (49) ஆகிய மூவரும் பெங்களூரில் இருந்து கொக்கைன் போதைப் பொருளை சென்னைக்கு கடத்தி வந்து, பல்வேறு இடங்களில் சில்லறையாக விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.
மேலும், கைதான நைஜீரியர்கள் தமிழ் சினிமாவில் துணை நடிகர்களாக நடித்துள்ளதாகவும் விசாரணையில் தெரியவந்தது. சித்தார்த் நடிப்பில் வெளியான 'அருவம்' படத்திலும் இவர்கள் நடித்துள்ளது தெரியவந்துள்ளது. இதையடுத்து அமைந்தகரை போலீசார் பறிமுதல் செய்த பல கோடி ரூபாய் மதிப்புள்ள 1.250 கிலோ கொக்கைன் போதைப்பொருளையும் மற்றும் கைது செய்யப்பட்ட நைஜீரியர்கள் இருவரையும் மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
கொக்கைன் விற்பனை செய்து கைதான நைஜீரியர்கள், தமிழ் சினிமாவில் துணை நடிகர்களாக இருப்பதால், இவர்கள், சினிமா நடிகர், நடிகைகளுக்கும் போதைப் பொருள் விற்றிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. எனவே, பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்களை ஆய்வு செய்து இவர்களுடன் தொடர்பு உள்ளவர்களை விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications