பரிதாபம்.. மேட்சுக்கு கூட வரவில்லையா? பாதியில் கிளம்பி சென்றது ஏன்?.. வார்னரின் கலங்க வைக்கும் பதில்
சென்னை: ஹைதராபாத் அணியின் முன்னாள் கேப்டன் வார்னர் நேற்று ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியின் போது மைதானத்தில் இல்லாதது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Recommended Video
ஐபிஎல் தொடரில் ஒவ்வொரு அணிக்கும் ஒவ்வொரு ஸ்பெஷல் வெளிநாட்டு வீரர் இருப்பார். எத்தனை ஏலம் வந்தாலும் அந்த வீரரை மட்டும் ஏலத்தில் விடவே மாட்டார்கள். அந்த அணியின் முக்கியமான வீரராக ஒரு வெளிநாட்டு வீரர் கண்டிப்பாக இருப்பார்.
பெங்களூர் அணிக்கு ஏபிடி வில்லியர்ஸ், மும்பை அணிக்கு பொல்லார்ட், கொல்கத்தா அணிக்கு சுனில், ரசல், சென்னைக்கு பிராவோ என்று ஒவ்வொரு அணிக்கும் ஒரு வெளிநாட்டு வீரர் நிரந்தர தேர்வாக இருப்பார். அப்படி ஹைதராபாத் அணியின் நிரந்தர வீரர்தான் வார்னர்.

மாற்றம்
ஒவ்வொரு சீசனிலும் ஹைதராபாத் அணிக்கு அதிக ரன்கள் அடித்தது வார்னர்தான். கடந்த 5 சீசன்களுக்கும் மேலாக வார்னர் 500+ ரன்களை அந்த அணிக்காக அடித்து இருக்கிறார். கடந்த சீசனில் ஹைதராபாத் சரியாக ஆடவில்லை. இந்த சீசன் தொடக்கத்திலும் ஹைதராபாத் அணி சரியாக ஆடவில்லை. வார்னரின் பேட்டிங் பாரமும் இந்த சீசனில் சரியாக இல்லை. இதனால் அணி தேர்வில் ஹைதராபாத் அடிக்கடி சொதப்பியது.

நிர்வாகம்
ஆடும் 11 பேர் கொண்ட வீரர்களை தேர்வு செய்வதில் வார்னருக்கும் அணி நிர்வாகத்திற்கும் இடையில் கடும் மோதல் ஏற்பட்டது. இதில் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக வார்னரை கேப்டன்சியில் இருந்து ஹைதராபாத் அணி நீக்கியது. அதோடு கேன் வில்லியம்சனை கேப்டனாக அணி நிர்வாகம் நியமித்தது. இந்த நிலையில்தான் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்ட பின் வார்னர் அடிக்கடி ஓரம் கட்டப்பட்டார்.

அணியில் இடம்பெறவில்லை
கடந்த போட்டியில் வார்னர் சரியாக ஆடவில்லை என்றதும் நேற்றைய போட்டியில் வார்னர் ஓரம் கட்டப்பட்டார். இவருக்கு பதிலாக ஜேசன் ராய் ஆட்டத்தில் சேர்க்கப்பட்டார். நேற்று டாஸ் போடும் முன் மைதானத்தில் காணப்பட்ட வார்னர், அதன்பின் போட்டி ஆரம்பிக்கும் முன் பாதியில் வெளியேறினார். நேற்று ஆட்டம் நடக்கும் போது வார்னர் களத்தில் காணப்படவில்லை. பெரும்பாலும் இவர் அவமதிக்கப்பட்ட காரணத்தால் வெளியேறி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இன்ஸ்ட்டா
இதையடுத்து இன்ஸ்ட்டாவில் பலரும் வார்னர் எங்கே என்று அவரின் ஐடியில் கமெண்ட் செய்து கேள்வி எழுப்பினார்கள். இதற்கு வார்னர்., நான் அங்கே இல்லை. நான் மைதானத்தில் இல்லை. எல்லோரும் அணிக்கு தொடர்ந்து ஆதரவு கொடுங்கள். நாம் கண்டிப்பாக வெற்றிபெறுவோம் என்று பதில் அளித்தார்.அணியில் இடம்பெறவில்லை என்றாலும், அணி வெற்றிபெறும் என்று இவர் கூறியது பலரையும் கவர்ந்தது. இன்னொரு கேள்விக்கு.. மீண்டும் என்னை பார்க்கும் வாய்ப்பு கிடைக்காது என்பது போல பதில் அளித்து இருந்தார்.

ஆட மாட்டாரா
வார்னரின் இந்த பதிலால் ஹைதராபாத் ரசிகர்கள் கலங்கிப் போய் உள்ளனர். இதனால் அடுத்தடுத்த போட்டிகளில் வார்னர் ஆடுவாரா என்பது கேள்வியாக உள்ளது. அதோடு அவர் மைதானத்திற்கு வருவாரா என்பதும் சந்தேகமாக உள்ளது. பெரும்பாலும் இந்த சீசன் வார்னருக்கு ஹைதராபாத் அணியில் கடைசி சீசனாக இருக்க வாய்ப்பு உள்ளது. அடுத்த மெகா ஏலத்தில் இவர் அணியில் இருந்து வெளியேற்றப்பட அதிக வாய்ப்புகள் உள்ளன. கேப்டன் இல்லாத பெங்களூர் போன்ற அணிகள் இவரை அணுக அதிக வாய்ப்புகள் உள்ளன.












Click it and Unblock the Notifications