சிஎஸ்கே உள்ளே.. சிக்கல் நிறைய இருக்கே.. இதையெல்லாம் அனுபவிக்கலாமா, வேண்டாமா.. ஆண்டவா!
சென்னை: காத்திருந்து காத்திருந்து, கண்கள் பூத்த பிறகு ஓர் அசத்தல் வெற்றியை பதிவு செய்துள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ்.
மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நேற்று நடப்பு ஐபிஎல் தொடரில் தனது இரண்டாவது போட்டியில், பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக களம் கண்டது சென்னை சூப்பர் கிங்ஸ்.
தீபக் சஹர் பந்துவீச்சில் பஞ்சாப் முதுகெலும்பு பவர்பிளே ஓவர்களில் முறித்து நொடித்து தள்ளப்பட்டது. இதன் காரணமாக, 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 106 ரன்கள் மட்டுமே எடுத்தது பஞ்சாப்.

ஸ்விங் பந்து வீச்சு
தீபக் சஹர் 4 ஓவர்கள் வீசி, வெறும் 13 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அவரது ஐபிஎல் வரலாற்றில் இதுதான் பெஸ்ட் பந்துவீச்சு ஆகும். இதில் ஒரு மெய்டன் ஓவரும் அடங்கும். பந்து கன்னா பின்னாவென்று ஸ்விங்கானதால் பேட்ஸ்மேன்கள் கடும் சிரமப்பட்டனர் என்று சொல்லமுடியும்.

பவுலர்கள் அசத்தல்
பஞ்சாப் அணியில் அதிகபட்சமாக 47 ரன்கள் எடுத்தவர் ஷாருக்கான். இவர் தமிழகத்தை சேர்ந்தவர் என்பது இதில் மற்றொரு கவனிக்கத்தக்க அம்சமாகும். சிஎஸ்கே பந்து வீச்சில் சாம் கர்ரன், மூன்று ஓவர்கள் வீசி 12 ரன்கள் மட்டுமே கொடுத்து ஒரு விக்கெட் வீழ்த்தினார். ரவீந்திர ஜடேஜா. 4 ஓவர்கள் பந்துவீசி 19 ரன்கள் மட்டுமே கொடுத்தார். இதன் காரணமாக பஞ்சாப் அணியை இவ்வளவு குறைந்த ஸ்கோரில் சுருட்ட முடிந்தது.
Recommended Video

டெஸ்ட் மேட்ச்
இதற்காக முற்றிலும் மகிழ்ச்சி அடைந்து விட முடியுமா என்றால் அங்குதான் சிக்கல். சிஎஸ்கே பேட்டிங் செய்தவிதத்தை பார்த்தால், முழுமையாக இந்த விஷயத்தில் சந்தோஷப்பட முடியவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஓபனிங் பேட்ஸ்மேன் ருதுராஜ் கெய்க்வாட் 16 பந்துகளில் வெறும் 5 ரன்கள் மட்டுமே எடுத்தார். அந்த 5 ரன்களிலும் 90% பேட்டின் உள்பகுதியில் பட்டு அவர் நினைத்தது ஒன்று நடந்தது ஒன்று என்ற வகையில் சேர்ந்த ரன்தான். அதாவது பந்தை அவர் அடிக்கவில்லை, பந்து தான் அவரது பேட்டில் அடித்து சென்றது. அதில் கிடைத்ததுதான் 5 ரன்கள்.

பேட்டிங் மொக்கை
டு பிளசிஸ் ஆரம்பத்தில் சற்று தடுமாறினாலும் தனது அனுபவத்தின் துணை கொண்டு அதிலிருந்து மீண்டு விட்டார். மொயின் அலி பேட்டிங்கில் அச்சத்தை வெளிக்காட்டவில்லை. ஆனால் நம்பி எதிர்பார்க்கப்பட்ட சுரேஷ் ரெய்னா 8 ரன்கள், அம்பத்தி ராயுடு ஒரே பந்தில் பூஜ்ஜியம் ரன் எடுத்து அவுட் ஆனார். 15.4 ஓவர்களில் 107 ரன்கள் எடுத்தது சிஎஸ்கே. அதற்குள்ளாக 4 விக்கெட்டுக்களையும் இழந்துள்ளது. ஒருவேளை பஞ்சாப் அணி 150 நாட்களுக்கு மேல் எடுத்திருந்தால் இதை விரட்டி பிடிப்பது சிஎஸ்கே அணிக்கு கஷ்டமாக இருந்திருக்கும் என நிலையில்தான் பேட்டிங் ஆடிய விதம் இருந்தது.

ஸ்லோ பவுலிங்
மும்பை ஆடுகளம் வரவர மாறிக்கொண்டே செல்கிறது. பந்து ஸ்லோவாக வருவதால், பேட் செய்ய முடியாமல் திணறுகிறார்கள். மொகாலி அருமையான வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான மைதானங்களில் பழகிய பஞ்சாப் அணிக்கு இது கஷ்டமாக இருக்கலாம். ஆனால் ஏற்கனவே ஸ்லோ விக்கெட் என்று அழைக்கப்படும் சென்னை போன்ற ஸ்டேடியத்தில் விளையாடிய சிஎஸ்கே, தடுமாறுவதும் சிறு ஸ்கோரை விரட்ட பார்ப்போருக்கு, ரத்த அழுத்தத்தை ஏற்றுவதும் யோசிக்க கூடிய விஷயமாக இருக்கிறது.

தீபக் சகர்
பவர் பிளே கிங் என்று அழைக்கப்படுபவர் தீபக் சஹர் அவர் கடந்த ஆண்டு சிஎஸ்கே அணிக்கு விளையாடவில்லை. இதுதான் பந்துவீச்சில் மிகப்பெரிய பலவீனமாக இருந்தது. ஆனால் மீண்டும் திரும்பிய தீபக் சஹர் தனது அசத்தல் பந்துவீச்சை காட்டியுள்ளார். எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கப்போகிறது இவர் பந்து வீச்சு.

பொறுத்திருந்து விசில் அடிப்போம்
இது நல்ல விஷயம்தான். ஆனால் அம்பத்தி ராயுடு உள்ளிட்ட மிடில் ஆர்டர் இன்னமும் சிறப்பாக செயல்பட வேண்டியது யோசிக்க அம்சமாக இருக்கிறது. எனவே தான் இதை அனுபவிக்கலாமா, வேண்டாமா என்ற மனநிலையில் ரசிகர்கள் இருக்கிறார்கள். இன்னும் இரண்டு மேட்ச்கள் போகட்டும். அதன் பிறகும் சிஎஸ்கே எப்படி செயல்படுகிறது என்பதை வைத்து நாம் விசில் போடலாம்.












Click it and Unblock the Notifications