லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநராக துரை குமார் IPS நியமனம்.. அபய் குமார் சிங் ஓய்வால் தமிழக அரசு உத்தரவு!
சென்னை: தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை பொறுப்பு இயக்குநராக ஐபிஎஸ் அதிகாரி துரை குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபி-யாக பணியாற்றிய அபய் குமார் சிங் ஓய்வு பெற்ற நிலையில், லஞ்ச ஒழிப்புத்துறை ஐஜி துரை குமார், லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் பொறுப்பை கூடுதல் பொறுப்பாக கவனிப்பார் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழக காவல்துறையில் லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபி-யாக பணியாற்றிய அபய் குமார் சிங் கடந்த ஜனவரி 30 ஆம் தேதி பணி ஓய்வு பெற்றார். அபய் குமார் சிங் பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர். 1992 ஆம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியாக தமிழக கேடரில் தேர்வானவர். தூத்துக்குடி சப்-டிவிசனில் ஏஎஸ்பி-யாக பணியை தொடங்கிய அபய் குமார் சிங், பின்னர் மணியாச்சி சப்-டிவிஷனில் பணியாற்றினார்.

காஞ்சிபுரம், கடலூர், நாகப்பட்டினம், விழுப்புரம், தூத்துக்குடி, மதுரை மாவட்ட எஸ்.பி.யாகவும், ராமநாதபுரம் சரக டிஐஜியாகவும் பணியாற்றினார். பின்னர், ஐஜி-யாக பதவி உயர்வு பெற்று திருநெல்வேலி காவல் ஆணையர், சென்னை கூடுதல் ஆணையர் (கிரைம்), தென்மண்டல ஐஜி, சென்னை போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையராக பதவி வகித்தார்.
அதைத் தொடர்ந்து கூடுதல் டிஜிபியாக பதவி உயர்வு பெற்று தலைமை விஜிலென்ஸ், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு, ஆயுதப்படை, சிபிசிஐடி பிரிவிலும் பணியாற்றினார். அதன்பின், டிஜிபியாக பதவி உயர்வு பெற்று லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநராக பணியாற்றினார். சிறப்பாக பணியாற்றியதற்காக 2008 மற்றும் 2020-ல் மாநில மற்றும் மத்திய அரசு பதக்கங்களையும் பெற்றுள்ளார்.
அபய் குமார் சிங், சில நாட்கள் சட்டம் ஒழுங்கு பொறுப்பு டிஜிபியாகவும் பணியாற்றினார். இந்நிலையில் அவர் ஜனவரி 30 ஆம் தேதியுடன் பணி ஓய்வு பெற்றுள்ளார். இவருக்கான பணி ஓய்வு உபச்சார விழா எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது.
இந்நிலையில், தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை பொறுப்பு இயக்குநராக ஐபிஎஸ் அதிகாரி துரை குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபி-யாக பணியாற்றிய அபய் குமார் சிங் ஓய்வு பெற்ற நிலையில், லஞ்ச ஒழிப்புத்துறை ஐஜி துரை குமார், லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் பொறுப்பை கூடுதல் பொறுப்பாக கவனிப்பார் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபி நியமிக்கப்படும் வரை துரை குமார் இந்த பொறுப்பில் இருப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏ.டி. துரை குமார் 2004-ம் ஆண்டு பேட்ச், தமிழ்நாடு கேடர் ஐபிஎஸ் அதிகாரி ஆவார். இவர் தமிழக காவல்துறையில் பல்வேறு முக்கிய பொறுப்புகளில், குறிப்பாக அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ-யில் பணியாற்றியுள்ளார். 2022-ல் திருநெல்வேலி காவல் ஆணையர் பொறுப்பில் இருந்து, தமிழக அமலாக்கத்துறை ஐஜியாக (IG Enforcement) மாற்றப்பட்டார்.












Click it and Unblock the Notifications