எல்லை பாதுகாப்பு படை ஏடிஜிபியாக தமிழக கேடர் ஐபிஎஸ் அதிகாரி மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! யார் இவர்?
சென்னை: தமிழ்நாடு கேடர் ஐபிஎஸ் அதிகாரி மகேஷ்குமார் அகர்வால், எல்லைப் பாதுகாப்புப் படை கூடுதல் டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார். தமிழக காவல்துறை ஆயுதப்படை ஏடிஜிபியாக பணியாற்றி வந்த மகேஷ்குமார் அகர்வால், தற்போது, மத்திய பணிக்கு இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளார். இதற்கான உத்தரவை ஒன்றிய உள்துறை அமைச்சகம் பிறப்பித்துள்ளது.
போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு ஏடிஜிபியாக பணியாற்றிய மகேஷ்குமார் அகர்வால் ஐபிஎஸ், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவத்தில் காத்திருப்புப் பட்டியலுக்கு மாற்றப்பட்டு, ஆயுதப்படை ஏடிஜிபியானார். இந்நிலையில் அவருக்கு எல்லை பாதுகாப்புப் படை கூடுதல் இயக்குநர் பொறுப்பு அளிக்கப்பட்டு உள்ளது. மகேஷ்குமார் அகர்வால் இந்த பதவியில் 4 ஆண்டுகள் வரை இருப்பார்.

யார் இந்த மகேஷ்குமார் அகர்வால்?
பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த மகேஷ்குமார் அகர்வால் 1972 ஆம் ஆண்டு பிறந்தவர். தமது தந்தையைப் போலவே சட்டம் படித்துவிட்டு, காவல்துறை பணியில் நுழைந்தவர். 1994 ஆம் ஆண்டு தனது 22 வயதில் சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்று தமிழ்நாடு கேடர் ஐபிஎஸ் அதிகாரியாக பணியில் சேர்ந்தார்.
தமிழ்நாட்டில் தேனி எஸ்.பியாகவும், தூத்துக்குடி மாவட்ட எஸ்.பியாகவும் பணியாற்றினார். 2001 ஆம் ஆண்டு சென்னை பூக்கடை துணை கமிஷனர், போக்குவரத்து துணை கமிஷனர் பதவிகளை வகித்தார். அதைத் தொடர்ந்து, சிபிஐ அதிகாரியாக 10 ஆண்டுகள் பணியாற்றினார்.
ரயில் கொள்ளை சம்பவம்
பிறகு மீண்டும் சென்னைக்குத் திரும்பிய மகேஷ்குமார் அகர்வால், சிபிசிஐடி ஐஜியாக பணியைத் தொடர்ந்தார். பணமதிப்பிழக்கு நடவடிக்கையின்போது, சேலத்தில் இருந்து சென்னை வந்த ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவத்தில் மகேஷ்குமார் அகர்வால் தலைமையிலான சிபிசிஐடி தான் கொள்ளையர்களை கைது செய்தது.
பின்னர், மதுரை மாநகர காவல்துறை கமிஷனராகவும் சென்னை தெற்கு மண்டல கூடுதல் கமிஷனராகவும் பணியாற்றினார். 2020 ஆம் ஆண்டு, சென்னை போலீஸ் கமிஷனராக இருந்த ஏ.கே.விஸ்வநாதன் விடுப்பில் சென்றால், சென்னை போலீஸ் கமிஷனர் பொறுப்பில் பணியாற்றினார். இதைத் தொடர்ந்து டிஜிபி அலுவலகத்தில் செயலாக்கப்பிரிவு ஏடிஜிபியாக மாறினார்.
பணியிட மாற்றம்
கொரோனா தொற்று காலத்தில் கொரோனா தடுப்பு வடக்கு மண்டல அதிகாரியாக மகேஷ்குமார் அகர்வால் நியமிக்கப்பட்டிருந்தார். போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு ஏடிஜிபியாக பணியாற்றிய மகேஷ்குமார் அகர்வால், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவத்தில் காத்திருப்புப் பட்டியலுக்கு மாற்றப்பட்டு, ஆயுதப்படை ஏடிஜிபியானார்.
இந்நிலையில் மத்திய பணிக்கு மாற்றப்பட்டு, அவருக்கு எல்லை பாதுகாப்புப் படை கூடுதல் இயக்குநராக பொறுப்பு அளித்து உத்தரவிட்டு உள்ளது மத்திய உள்துறை அமைச்சகம். மகேஷ்குமார் அகர்வால் இந்த பதவியில் 4 ஆண்டுகள் வரை இருப்பார்.












Click it and Unblock the Notifications