13 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம், பதவி உயர்வு.. தமிழக அரசு பிறப்பித்த அதிரடி உத்தரவு!
சென்னை: தமிழ்நாட்டில் 13 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்தும், பதவி உயர்வு வழங்கியும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சென்னை ஐ.ஜி ஏ.கயல்விழி சீருடைப் பணியாளர் தேர்வாணைய உறுப்பினர் செயலராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். கும்பகோணம் ஏஎஸ்பி அங்கித் சிங், எஸ்பியாக பதவி உயர்வு தரப்பட்டு சேலம் வடக்கு துணை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு அரசு காவல்துறையில் அவ்வப்போது முக்கிய மாற்றங்களைச் செய்து வருகிறது. அந்தவகையில் இன்று, தமிழ்நாடு முழுவதும் 2 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. 11 ஐபிஎஸ் அதிகாரிகள் டிரான்ஸ்பர் செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து தமிழக உள்துறை செயலாளர் தீரஜ்குமார் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

பெண்களுக்கு எதிரான குற்றத் தடுப்புப் பிரிவு ஐஜி ஏ.கயல்விழி சீருடைப் பணியாளர் தேர்வாணைய உறுப்பினர் செயலராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். வேலூர் எஸ்பி மயில்வாகனன் சென்னை தெற்கு சரக லஞ்சஒழிப்புத்துறை எஸ்பியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். கும்பகோணம் ஏஎஸ்பி அங்கித் சிங், எஸ்பியாக பதவி உயர்வு தரப்பட்டு சேலம் வடக்கு துணை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
பொள்ளாச்சி உதவி காவல் கண்காணிப்பாளராக இருந்த சிருஷ்டி சிங் காவல் கண்காணிப்பாளராக பதவி உயர்வு பெற்று, திருச்சி மாநகர தெற்கு துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். சீருடைப் பணியாளர் தேர்வு வாரிய ஐஜி/ உறுப்பினர் செயலர் ராஜேஸ்வரி, பெண்களுக்கு எதிரான குற்றத் தடுப்புப் பிரிவு (சென்னை) ஐஜியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

திருச்சி தெற்கு துணை ஆணையர் ஈஸ்வரன் ஆவடி மாநகர போக்குவரத்து பிரிவு துணை ஆணையராகவும், சென்னை ரயில்வே காவல் கண்காணிப்பாளர் ஈஸ்வரன், அண்ணா நகர் துணை ஆணையராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். கோயம்பேடு துணை ஆணையர் சுஜித் குமார், சென்னை மாநகரம் போக்குவரத்து (மேற்கு) துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை மாநகரம் போக்குவரத்து (மேற்கு) துணை ஆணையர் சுகாசினி, தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரிய காவல் கண்காணிப்பாளராகவும், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரிய காவல் கண்காணிப்பாளர் நாகஜோதி சென்னை காவல் பயிற்சி கல்லூரி முதல்வராகவும், சேலம் மாநகர காவல் துணை ஆணையர் சிவராமன், வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை அண்ணா நகர் துணை ஆணையர் உதயகுமார் கோயம்பேடு துணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார். காத்திருப்போர் பட்டியல் இருந்த ரம்யா பாரதி, சென்னை குற்றப்பிரிவு ஐஜியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications