அலெர்ட்டா இருங்க.. உயர் அதிகாரிகளுடன் இறையன்பு முக்கிய ஆலோசனை.. மழை வெளுத்துக்கட்டப் போகுதாமே!
சென்னை : தென்மேற்கு பருவமழை முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்து தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலர் இறையன்பு தலைமையில் சென்னையில் ஆலோசனை நடைபெறுகிறது. முதல்வர் ஸ்டாலின் டெல்டா மாவட்டங்களில் பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் இந்த முக்கிய ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது.
கேரளாவில் தென்மேற்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டிய தமிழக மாவட்டங்களிலும் தாக்கம் இருக்கும் என வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, தென்மேற்குப் பருமழை முன்னேற்பாடுகள் குறித்து தலைமைச் செயலகத்தில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது.

தலைமைச் செயலகத்தில் நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அதிகாரிகள், தென்மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரன் மற்றும் உள்துறை உள்ளிட்ட முக்கிய துறைகளின் அதிகாரிகள், காவல்துறை உயரதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.
தென்மேற்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில் மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் பருவமழையின் போது ஏற்படக்கூடிய பாதிப்புகளை தடுக்க மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை பணிகள் குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது.
மேலும் மீட்பு பணிகளுக்கு தேவையான சாதனங்கள், மாற்று இயந்திரம், வாகனங்கள், மோட்டார் படகுகள், உயர் மின் விளக்குகள், மோட்டார் பம்ப் செட், டீசல், மின்னியற்றி, மணல்மூட்டைகள் ஆகியவற்றை தேவைக்காக தயார் நிலையில் இருக்க வேண்டும் எனவும் இந்த கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications