செக் புக்கில் கருப்பு மையால் எழுதினால் செல்லாதா.. ரூல்ஸ் சொல்வது என்ன? ரிசர்வ் வங்கி விளக்கம்
சென்னை: காசோலை தொடர்பாக புதிய உத்தரவு ஒன்றை ரிசர்வ் வங்கி பிறப்பித்துள்ளதாகவும், காசோலைகளில் கருப்பு மையால் எழுதினால் இனி செல்லாது எனவும் பாதுகாப்பு காரணங்களுக்காகவும் மோசடிகளை தவிர்க்கவும் இந்த புதிய உத்தரவு பிறபிக்கப்பட்டு இருப்பதாகவும் ஒரு தகவல் சமூக வலைத்தளங்களில் பரவி வந்தது. இந்த நிலையில் இது தொடர்பாக ரிசர்வ் வங்கியின் ரூல்ஸ் என்ன என்பது பற்றி மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.
வங்கி பரிவர்த்தனைகள் தற்போது பெரும்பாலும் டிஜிட்டல் முறைக்கு மாறிவிட்டாலும் செக் எனப்படும் காசோலை மூலமாக நடைபெறும் வங்கி பரிவர்த்தனையும் கணிசமாக உள்ளது. பெரிய அளவிலான தொகை மற்றும் நிறுவனங்கள், தனி நபர்கள் தங்கள் வங்கி கணக்கில் இருந்து மற்றொருவருக்கு பணத்தை செலுத்தும் படி கோரும் ஆவணமாக காசோலை உள்ளது.

இந்த காசோலைகளில் பணத்தை பெறும் நபரின் பெயர் மற்றும் காசோலை வழங்கும் நபரின் கையெழுத்து, தொகை ஆகிய விவரங்கள் இடம் பெற்று இருக்கும். இந்த காசோலை தொடர்பாக புதிய உத்தரவு ஒன்றை ரிசர்வ் வங்கி பிறப்பித்துள்ளதாக கடந்த சில தினங்களாக சமூக வலைத்தளங்களில் செய்தி ஒன்று பரவி வருகிறது.
அதாவது, காசோலைகளில் கருப்பு மையால் எழுதினால் இனி செல்லாது எனவும் பாதுகாப்பு காரணங்களுக்காகவும் மோசடிகளை தவிர்க்கவும் இந்த புதிய உத்தரவு பிறபிக்கப்பட்டு இருப்பதாகவும் கூறப்பட்டு இருந்தது. அதாவது, புளு மற்றும் பச்சை மையால் எழுதப்பட்ட செக்குகள் மட்டுமே இனி செல்லுபடியாகும். கருப்பு மையால் எழுதப்படும் காசோலைகளை எளிதில் திருத்தம் செய்ய முடியும் என்பதால் இதனால் முறைகேடு நடைபெற வாய்ப்புள்ளதன் காரணமாகவும் மோசடிகளை தடுக்கும் விதமாக இனி நீலம் மற்றும் பச்சை மையால் எழுதினால் மட்டுமே காசோலைகள் செல்லுபடியாகும் என்றும் இந்த விதி தனி நபர், அரசு, வர்த்தக நிறுவனங்கள் என அனைத்திற்கும் பொருந்தும் என்றும் கூறப்பட்டு இருந்தது.
அதுமட்டும் இன்றி கருப்பு நிற மையால் எழுதப்பட்ட காசோலைகள் டெபாசிட் செய்யப்பட்டால் அதை நிராகரிக்க வேண்டும் என்று வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல் இடம் பெற்று இருந்தது. இது தொடர்பான தகவல் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. காசோலை பயன்படுத்துபவர்கள் மத்தியில் ரிசர்வ் வங்கி பெயரில் பரவிய இந்த தகவல் குழப்பத்தை ஏற்படுத்தியது.
இந்த நிலையில்தான், இது தொடர்பாக மத்திய அரசு சார்பில் விளக்கம் ஒன்று வெளியாகியுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:- காசோலை எனப்படும் செக்-களில் எழுதும் போது குறிப்பிட்ட நிறத்திலான மையைத்தான் பயன்படுத்த வேண்டும் என எந்த பரிந்துரையும் ரிசர்வ் வங்கி வெளியிடவில்லை. எனவே சமூக வலைத்தளங்ளில் பரவும் தகவலில் உண்மையில்லை" என்று கூறப்பட்டுள்ளது.
செக் எனப்படும் காசோலைகளில் நிரப்பப்படும் தகவல் தெளிவாக அறிந்து கொள்ளக் கூடிய வகையிலான மையை பயன்படுத்தி எழுத வேண்டும். காசோலையில் உள்ள தகவல்களை எழுதி திருத்தம் செய்ய முடியாதபடி எழுதினால் போதும். அதாவது பென்சில் போன்றவைகளால் எழுதுவதை தவிர்க்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அதே நேரத்தில் குறிப்பிட்ட கலரை பயன்படுத்தி தான் எழுத வேண்டும் என்ற எந்த விதியும் இல்லை எனவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications