ஆ. ராசா திமுகவை மிரட்டுகிறாரா.. மேடையில் ஸ்டாலினை வைத்து கொண்டே.. வரிந்து கட்டி வந்த பாஜக "நாராயணன்"
ஆ ராசா தனித்தமிழ்நாடு குறித்து பேசியதற்கு பாஜக திருப்பதி நாராயணன் கொந்தளித்துள்ளார்
சென்னை: ஆ.ராசா திமுகவை மிரட்டுகிறார் என்று, பாஜகவின் நாராயண் திருப்பதி பகிரங்கமாக குற்றஞ்சாட்டி உள்ளார்.. இதனால், திமுக, பாஜக உட்பட அரசியல் கட்சிகள் உறைந்து போயுள்ளன.
நேற்றைய தினம் திமுக மூத்த தலைவரும், எம்பியுமான ஆ ராசா பேசிய பேச்சு, தமிழகம் மட்டுமல்லாமல், தேசிய அளவிலும் அதிர்வலையை உருவாக்கி உள்ளது.
காரணம், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கும், பிரதமர் மோடிக்கும் நேரடியாகவே கோரிக்கை விடுத்து, ஆ ராசா பேசியிருந்தார்... நாமக்கல்லில் நடந்த திமுக நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாட்டில் "மத்தியில் கூட்டாட்சி; மாநிலத்தில் சுயாட்சி"என்ற தலைப்பில் பேசியிருந்தார் ஆ.ராசா.. அவர் பேசியதாவது:
வாரிசு அரசியல் ஒழியும்! அழிவின் விளிம்பில் உள்ள கட்சிகளிடம் பிற கட்சிகள் பாடம் கற்கணும்: மோடி பேச்சு
திமிரில் பேசவில்லை
"எல்லா மாநிலங்களையும் சம அளவில் பார்க்கிறோம் என்றும் பிரதமர் மோடி சொல்கிறார். ஆனால் தேசிய ஒருமைப்பாடு ஏற்பட அனைவரும் இந்தியை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று பேசுகிறார்.. நாங்கள் ஆளுங்கட்சியில் இருக்கிறோம் என்னும் திமிரில் பேசவில்லை. தனி தமிழ்நாடு கோரிக்கையை கைவிட்டு , திராவிட முன்னேற்ற கழகம் மாநில சுயாட்சிக்கு வந்துவிட்டது. ஆனால் எங்கள் தத்துவத்தின் பிதாமகனாக இருந்த பெரியார் சாகும் வரை தனி தமிழ்நாடு கேட்டு போராடினார்
பேட்ஜ்கள்
பிரிவினை வேண்டும், தனித்தமிழ்நாடு வேண்டும். இளைஞர்களே முன் வாருங்கள். பேட்ஜ் அணிந்து கொள்ளுங்கள். சுதந்திர தமிழ்நாடு தான் நம்முடைய கடைசி தீர்வு' என்று பெரியார் சொன்னார்... பெரியாரை முழுமையாக ஏற்றுக் கொண்ட நாங்கள் அதில் இருந்து விலகி, ஜனநாயகத்திற்காக இந்திய நாட்டின் ஒருமைப்பாட்டிற்காக, எங்கள் தந்தையையும் ஒதுக்கிவிட்டு, 'இந்தியா வாழ்க' என்று சொன்னோம். இன்னமும் சொல்லிக்கொண்டிருக்கிறோம்.
கெஞ்சி கேட்டுக்கறேன்
அதனால், பாஜக அமித் ஷாவுக்கு சொல்கிறேன், இந்திய பிரதமர் மோடிக்கும் சொல்கிறேன்... உங்களை பணிந்து கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன்... இந்த மேடையில் எங்கள் தலைவரை வைத்துக் கொண்டே சொல்கிறேன்... அண்ணா வழியில் பயணம் செய்கிறார் முதலமைச்சர்... எங்களை பெரியார் வழிக்கு தள்ளி விடாதீர்கள். தனிநாடு கேட்க எங்களை விட்டுவிடாதீர்கள்... மாநில சுயாட்சி தாருங்கள். அதுவரை நாங்கள் ஓயமாட்டோம்" என்றார் ஆவேசமாக.
நாராயணன் திருப்பதி
ஆ.ராசாவின் பேச்சுக்கு பாஜக கொந்தளித்துள்ளது.. இதற்கு எதிர்வினையாற்றியுள்ள பாஜகவின் நாராயணன் திருப்பதி, "அண்ணா வழியில் பயணம் செய்கிறார் முதலமைச்சர், எங்களை பெரியார் வழிக்கு தள்ளிவிடாதீர்கள். தனிநாடு கேட்க எங்களை விட்டு விடாதீர்கள்,மாநில சுயாட்சி தாருங்கள்.அதுவரை நாங்கள் ஓயமாட்டோம் என்று முதலமைச்சரை மேடையில் வைத்து கொண்டு வேண்டுமென்றே இந்த பேச்சைப் பேசியிருக்கிறார் ஆ.ராசா.. ஈ. வெ.ரா வழி வேறு, அண்ணா வழி வேறு என்று தெளிவாக கூறியிருக்கிறார் ஆ.ராசா. அதாவது, திக பிளவுபட்டது போல் திமுகவும் பிளவுபடும் என்கிறார். இது திமுகவிற்கான மிரட்டல்" என்று குறிப்பிட்டுள்ளார்.
Recommended Video
ராசா வீடியோ
மற்றொரு பக்கம், ஆ.ராசா பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.. மிகப்பெரிய விவாதமாகவும் தமிழக அரசியல் களத்தில் எழுந்துள்ளது.. சிலர் ராசாவின் பேச்சுக்கு கண்டனங்களையும், பலர் வரவேற்பையும் தெரிவித்து வருகின்றனர்.. மேலும் சிலரோ, "தமிழ்நாட்டில் என்னதான் நடக்குது? முதலமைச்சர் ஸ்டாலின் பிரிவினைவாதத்தை ஆதரிக்கிறாரா? ஆ.ராசாவின் பேச்சுக்கு இதுவரை மவுனம் காப்பது ஏன்?" என்றும் பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகின்றனர்... மேலும் சிலர், "திமுக - திக கட்சிகளுக்குள் சிண்டுமுடிகிறது பாஜக என்றும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.