தொடங்கியது சூரிய கிரகணம்! கர்ப்பிணி பெண்களுக்கு கிரகணத்தால்.. என்ன மாதிரியான பாதிப்பு ஏற்படும்
சென்னை: சூரிய கிரகணம் தொடர்பாக இணையத்தில் பல்வேறு தகவல்கள் உள்ள நிலையில், இது கர்ப்பிணிகளுக்கு ஆபத்தா என்பதைப் பார்க்கலாம்.
சூரியனுக்கும் பூமிக்கும் இடையே நிலவு வரும் போது சூரியனின் ஒரு பகுதியை நிலவு மறைக்கிறது. இதுவே கிரகணம் என்று அழைக்கப்படுகிறது.
அதாவது சூரியன், நிலவு, பூமி மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் வரும் போது தான் இந்த கிரகணங்கள் நிகழ்கின்றன.

கிரகணம்
நிலவின் நிழல் சூரியனை மறைத்தால் அதை நாம் சூரிய கிரகணம் என்று குறிப்பிடுகிறோம். அதேபோல பூமியின் நிழல் சந்திரனை மறைத்தால் அது சந்திர கிரகணம் என்று குறிப்பிடுகிறோம். பொதுவாக ஒரு ஆண்டிற்குச் சராசரியாக 4 கிரகணங்கள் வரை நிகழும். சூரியனை முழுமையாக நிலவு மறைத்தால் அது முழு சூரிய கிரகணம் என்று அழைக்கப்படும். அதேநேரம் ஒரு மட்டும் மறைத்தால் அது பகுதி சூரிய கிரகணம் என்று அழைக்கப்படும்.

சாப்பிடக் கூடாது
இன்றைய தினம் பகுதி சூரிய கிரகணம் நிகழ்ந்து உள்ளது. நமது கலாசார நம்பிக்கை படி, கிரகணங்கள் பொதுவாகக் கெட்ட சகுனங்களாகவே கருதப்படுகிறது. இந்த நேரத்தில் கோயில்கள் பூட்டப்பட்டு இருக்கும். இறைவழிபாடு எதுவும் நடக்காது. குறிப்பாக, இந்த நேரத்தில் சாப்பிடக் கூடாது, குளிக்கக் கூடாது என்றெல்லாம் பொதுவாகக் கூறுவார்கள். கிரகண நேரம் முடியும் வரை வீட்டிற்குள்ளேயே இருக்கும்படி பெரியவர்கள் கூறுவார்கள்.

உண்மையா
அதேபோல இதுபோன்ற கிரகண நிகழ்வுகள் கர்ப்பிணிப் பெண்களுக்கு, குறிப்பாக உள்ளே வளரும் சிசுவுக்கு சில எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் கூட பல காலமாகவே கூறப்படுவது வழக்கம். இருப்பினும், இதற்கு அறிவியல் பூர்வமாக எந்தவொரு ஆதாரமும் இல்லை. கிரகண காலத்தில் ஆபத்தான எவ்வித கதிர்களும் வெளியாகாது என்றே ஆய்வாளர்கள் விளக்கம் அளித்து உள்ளனர்.

கர்ப்பிணி பெண்கள்
எனவே, கிரகண நேரத்தில் மட்டும் கர்ப்பிணிப் பெண்களுக்கும் உள்ளே இருக்கும் கருவுக்கும் ஆபத்து என்று கூறுவதை நிரூபிக்கும் வகையில் எந்த அறிவியல் ஆதாரமும் இல்லை. கிரகண காலத்தில் கர்ப்பிணிப் பெண்ணின் மீது சூரியனின் கதிர்கள் விழுந்தால், அது குழந்தைக்குத் தீங்கு விளைவிக்கும் என்பது பழங்காலத்துக் கதை மட்டுமே.

ஆய்வாளர்கள்
அந்த காலத்தில் பிறக்கும் போது குழந்தைகளுக்குக் குறைபாடுகள் ஏற்பட என்ன காரணம் எனத் தெரியாது. இதனால் அப்போது அவர்கள் கிரகணங்களே இதற்குக் காரணம் எனச் சொன்னார்கள். அதுவே இந்த கதைகளுக்கு வழிவகுத்ததாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஆனால், இப்போது நமக்குக் குழந்தைகள் குறைபாடு உடன் பிறக்க என்ன காரணம் எனத் தெரியும். எனவே, கிரகண நேரங்களில் கர்ப்பிணிகளுக்கு ஆபத்து என்பதில் எவ்வித உண்மையும் இல்லை.

வெயில்
இந்த முறை கிரகணம் மாலை நேரத்தில் ஏற்பட்டு உள்ளது. ஆனால் பல நேரங்களில் இது வெயில் உச்சியில் இருக்கும் போது தான் ஏற்படும். அதுபோன்ற நேரங்களில் அதிக வெப்பம் காரணமாகவே கர்ப்பிணிகளுக்குப் பாதிப்பு ஏற்படும். அதாவது, கிரகண நேரம் இல்லாமல் பொதுவாகவே வெயில் மிக அதிகமாக இருக்கும் போது கர்ப்பிணிப் பெண்கள் வெளியே செல்லக் கூடாது என்பதே ஆய்வாளர்களின் கருத்தாகும்.












Click it and Unblock the Notifications