திமுக ஆதரவுடன் அதிமுக ஆட்சியா? இந்த 5 விஷயங்களை கவனிச்சீங்களா.. திரைமறைவில் நடக்கும் வேலை
சென்னை: விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியமைக்க தேவையான மொஜாரிட்டியை பெறாவிட்டால் திமுக - அதிமுக இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்க ஆளுநரிடம் அனுமதி கோருவது பற்றி பரிசீலனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றனர். இருவரும் தமிழக அரசியலில் எதிரெதிர் துருவங்களாக உள்ளதால் இது சாத்தியமா? என்று பலரும் கேள்வி எழுப்பி உள்ளனர். ஆனால் அது சாத்தியமாகுமோ என்பதற்கான அறிகுறிகள் பலமாக தென்பட தொடங்கி உள்ளன. அதுபற்றிய 5 விஷயங்களை இங்கு பார்க்கலாம்.
தமிழக சட்டசபை தேர்தலில் விஜய்யின் தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சியின் 5 எம்எல்ஏக்களின் ஆதரவு தவெகவிற்கு கிடைத்துள்ளது. இருப்பினும் மெஜாரிட்டிக்கு இன்னும் 5 எம்எல்ஏக்கள் இல்லை. இதனால் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் இன்னும் விஜய்யை அனுமதிக்கவில்லை.

இதனால் விஜய்யால் முதல்வராக முடியவில்லை. இந்நிலையில் தான், தவெக மெஜாரிட்டி பெறவில்லை என்றால் திமுக - அதிமுக இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்கலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. இது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இது சாத்தியமா? என்று கேள்விகள் எழுந்துள்ளன. இந்நிலையில் தான், அதற்கான 5 சமிக்ஞைகள் வெளியாகி உள்ளன.
முதல் விஷயம்
புதுச்சேரி அதிமுக செயலாளர் அன்பழகன் "காங்கிரஸின் முயற்சியை முறியடித்து பழனிசாமி தலைமையில் தமிழகத்தில் அதிமுக ஆட்சி அமையும்" என்று தெரிவித்தார். அதேபோல் அதிமுக எம்எல்ஏ லீமா ரோஸும், 'பழனிசாமி முதல்வராவார்' என்று கூறியுள்ளார்.
2வது விஷயம்
நேற்று காலையில், ''விஜய் ஆட்சியமைக்க இடையூறு செய்யமாட்டோம். 6 மாதங்கள் வரை அமைதி காப்போம்'' என்று கூறியிருந்தார். ஆனால் நேற்று திமுக எம்எல்ஏக்களுடனான ஆலோசனை கூட்டத்தில் ஸ்டாலின், ''கட்சியின் நலனுக்காக சில முக்கிய முடிவுகளை எடுக்க உள்ளேன். இதற்கு அனைவரும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்'' என்றார். அதன்பிறகு அதிமுக - திமுக கூட்டணி அமையுமா? என்ற கேள்வி கேட்டபோது அதற்கு ஸ்டாலின் எந்த பதிலும் கூறவில்லை. இதனால் கூட்டணி அமைகிறதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
3வது விஷயம்
அதேபோல், நேற்று திமுகவின் புதிய எம்எல்ஏக்கள் உடனான கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று வெளியே வந்தார். அப்போது அவரிடம், ''திமுக - அதிமுக கூட்டணி அமையுமா? பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறதா?'' என்ற கேள்விகள் எழுப்பப்பட்டது. அதற்கு உதயநிதி ஸ்டாலின் சிரித்தபடி பதிலளிக்காமல் சென்றார்.
4வது விஷயம்
திமுக, அதிமுகவுக்கு கூட்டணி அமைக்க விருப்பம் இல்லாவிட்டால் ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் நேரடியாக அவர்கள் கூட்டணி இல்லை என்று கூறியிருக்கலாம். ஆனால் அவர்கள் அப்படி செய்யவில்லை. அதுமட்டுமின்றி தவெக ஆதரவு கேட்டுள்ள திமுகவின் கூட்டணி கட்சிகளான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் விசிகவை தங்களின் கூட்டணியிலேய இருக்கும்படியும், தவெக விஷயத்தில் அவசரப்பட்டு முடிவு எடுத்து விட வேண்டாம் என்று ஸ்டாலின் கூறியுள்ளார். அதுமட்டுமின்றி நேற்று இந்த 3 கட்சிகளின் தலைவர்களுடன் ஸ்டாலின் அதிமுக கூட்டணி அமைப்பது பற்றி விவாதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இது 4வது விஷயமாகும்.
5வது விஷயம்
அதிமுக - திமுக கூட்டணி ஆட்சி என்ற தகவல் சமூக வலைதளங்களில் தொடர்ந்து பரவும்போதும் கூட பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். திமுக, அதிமுகவிற்கு எதிராக பலரும் பதிவுகள் செய்து வருகின்றனர். இது நியாயமில்லை என்று கூறி வருகின்றனர். இது நிச்சயம் திமுக, அதிமுகவினரின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க வாய்ப்புள்ளது. ஆனாலும் தற்போது வரை இருகட்சிகளின் தலைமைகளை நாங்கள் இருவரும் கூட்டணி வைப்பது இல்லை என்பதை வெளிப்படையாக கூற மறுத்து வருகின்றனர். இதனால் ஒரு வேளை திமுக - அதிமுக திரைமறைவில் கூட்டணிக்கான வேலையை தொடங்கி உள்ளதா? என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
இந்த 5 விஷயங்கள் என்பது விஜய்யின் தவெக மெஜாரிட்டியை நிரூபிக்க தவறும்போது அதிமுக - திமுக கூட்டணியை சாத்தியமாக்கி ஆளுநர் மாளிகை நோக்கி உரிமை கோருவதற்கான சமிக்ஞைகளை வழங்கி உள்ளது.












Click it and Unblock the Notifications