சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அதிமுகவுக்கு தேவையில்லாத எக்ஸ்ட்ரா லக்கேஜாக மாறுகிறதா பாஜக?

Google Oneindia Tamil News

சென்னை: மக்களவை தேர்தல் நெருங்க நெருங்க கட்சிகள் கூட்டணி குழம்பு வைப்பதில் அதி தீவிரமாக உள்ளன.

தமிழகத்தில் கிட்டத்தட்ட திமுக கூட்டணி முடிவாகிவிட்ட நிலையில் அதிமுக வலுவான கூட்டணியை அமைக்கும் என்று அதிமுக தரப்பும், குறைந்தது 30 இடங்களில் வெல்லும் அளவுக்கு பாஜக மெகா கூட்டணியை அமைக்கும் என்று மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணனும் தமிழிசையும் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில்தான் தொடர்ந்து பாஜகவை எதிர்த்து வரும் அதிமுக கொள்கை பரப்பு செயலாளரும் துணை சபாநாயகருமான தம்பிதுரை பாஜகவை தூக்கி சுமக்க நாங்கள் என்ன பாவம் செய்தவர்களா என்ற கேள்வியை கேட்டு அதிர வைத்துள்ளார். இந்த கேள்வி பாஜக ஒரு பாவ மூட்டை அதை தூக்கி சுமக்க நாங்கள் என்ன பாவம் செய்தவர்களா என்ற அர்த்தத்தில் தொனிப்பதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

இதுதான் ஜெ. நடைமுறை

இதுதான் ஜெ. நடைமுறை

வழக்கமாக அதிமுக கூட்டணி அமைக்கப் போகின்றது என்றால் அதற்கு முன்னதாக பொதுக்குழு கூடி கூட்டணியை முடிவு செய்யும் அதிகாரத்தை கட்சியின் தலைமைக்கு வழங்குவது வழக்கம். ஜெயலலிதா உயிரோடு இருக்கும்போது இந்த நடைமுறைதான் வழக்கத்தில் இருந்த பழக்கம். இப்போது ஒரு ஆண்டு தாண்டியும் இதுவரை அதிமுக பொதுக்குழு கூட்டப்படவில்லை. அதோடு தற்போது இருக்கின்ற பொதுக்குழு உறுப்பினர்களோடு மேலும் மாவட்டத்திற்கு இருவர் என பொதுக்குழுவில் சேர்க்கப்பட்டு வருவதாக அதிமுக உள்விவகாரங்களை அறிந்தவர்கள் தெரிவிக்கிறார்கள். இவர்கள் ஏன் தற்போது சேர்க்கப்பட்டு வருகிறார்கள் என்ற கேள்விக்கான விடையை கட்டுரையின் இறுதியில் பார்க்கலாம்.

பழைய நிலை இப்போது இல்லை

பழைய நிலை இப்போது இல்லை

இப்படிப்பட்ட நிலையில்தான் கடந்த 6 மாதங்களாகவே நாடாளுமன்றத்தில் மக்களவையிலும், மாநிலங்களவையிலும் அதிமுக உறுப்பினர்கள் பாஜக எதிர்ப்பு நிலையையே கொண்டுள்ளனர். ஆனால் அதற்கு நேர் எதிராக தமிழகத்தில் உள்ள அமைச்சர்கள் முதல் சட்டமன்ற உறுப்பினர்கள் வரை பாஜக ஆதரவு நிலையை எடுக்கின்றனர். இப்படி இரட்டை நிலைப்பாட்டில் உள்ள அதிமுக பாஜகவோடு கூட்டணி என்ற முடிவை எடுத்தால் அது அதிமுகவுக்கு எக்ஸ்ட்ரா லக்கேஜ் என்றே இருக்கும் என்ற உணர்வை வெளிப்படுத்துகிறார்கள் அதிமுக தொண்டர்களும் தம்பிதுரை போன்ற மூத்த தலைவர்களும்.

மோடி வருவதற்கு முன்பு

மோடி வருவதற்கு முன்பு

வரும் 27ம் தேதி பிரதமர் மோடி தமிழகத்திற்கு வருவதற்கு முன்பு கூட்டணி கணக்குகளை ஓரளவுக்கு முடிவு செய்துவிட்டால் தங்களுக்கு கெத்தாக இருக்கும் என்று தமிழக பாஜகவினர் நினைக்கின்றனர். அதற்கு முன்பாக மத்திய அமைச்சர் பியுஸ் கோயல் சென்னைக்கு வருகிறார் என்ற தகவலும் இருந்த சூழலில் இப்போது அவரது வருகை ரத்து செய்யப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகள் மோடி அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர முயன்றபோது காவிரி விவகாரத்தில் நீதி வேண்டும் என்று அதிமுகவினர் அவையை முடக்கினர். அப்போதிருந்தே அதிமுக எம்பிக்களின் குரல் குறிப்பாக தம்பிதுரையின் குரல் பாஜகவுக்கு எதிராக ஓங்கி ஒலிக்கத் தொடங்கியிருந்தது. அதற்கு அவருக்கு தனிப்பட்ட சில வருத்தங்கள் அதாவது தனக்கு மத்திய அமைச்சர் பதவி தரப்படும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில் தரப்படவில்லை என்பதால் அவருக்கு பாஜக மீது கோபம் என்றெல்லாம் கூட காரணங்கள் கூறப்பட்டது. இருந்தாலும் அவர் பாஜகவை எதிர்த்து அவர் குரல் கொடுத்தப் போதெல்லாம் அது அவரது தனிப்பட்ட குரல் என்றோ அல்லது அவர் மீது கட்சி ரீதியாக எந்தவித நடவடிக்கைகளோ அதிமுக தலைமையிலிருந்து எடுக்கப்படவில்லை.

ஏன் நீக்கப்பட்டார் கேசிபி

ஏன் நீக்கப்பட்டார் கேசிபி

இந்த இடத்தில் முன்னாள் எம் பி கே சி பழனிசாமி பாஜகவுக்கு எதிராக பேசினார் என்பதற்காகவே அவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இது ஒருபக்கம் என்றால் மேக்கேதாட்டு விவகாரத்தில் பாஜக அரசு தமிழகத்திற்கு துரோகம் இளைத்து விட்டது என்று கூறினார் துணை முதலமைச்சரும் அதிமுகவின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான ஓ பி எஸ். ஆக அதிமுகவிலிருந்து பாஜகவுக்கு எதிரான குரல்கள் கேட்க தொடங்கிவிட்டன என்பது நிதர்சனம்.

இப்போதைய சூழலில் அதிமுக, பாஜகவை தங்கள் அணியில் இணைத்துக் கொண்டால் தமிழகத்தின் ஒட்டு மொத்த வெறுப்பையும் தங்களுக்கு உரியதாக்கியிருக்கும் பாஜக மீதான வெறுப்பு அதிமுக மீதும் பாயக்கூடும். அதோடு அதிமுகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள பல தொகுதிகளை பாஜக தங்களுக்கு வேண்டும் என்று கேட்பதோடு நடைபெறவிருக்கும் சட்டமன்ற இடைதேர்தலிலும் சில தொகுதிகளை கேட்க வாய்ப்புள்ளது அது பாஜக போட்டியிடுவதற்காகவும் இருக்கலாம் அல்லது தங்களது கூட்டணியில் வரும் பாமகவுக்காகவும் இருக்கலாம். ஏனெனில் வெறும் அதிமுகவை மட்டும் நம்பி பாஜக களத்தில் இறங்காது ஆகவே பாமகவையும் தங்களது அணியில் இணைத்துக் கொள்வதற்கான முயற்சிகள் வெகு ஜோராக நடந்து கொண்டிருக்கின்றன. ஆகவே பாமகவுக்கு ஆதரவாகவும் பாஜக லாபி செய்யும்.

அதிமுக ரசிக்கப் போவதில்லை

அதிமுக ரசிக்கப் போவதில்லை

இந்த முயற்சிகளை நிச்சயமாக அதிமுக ரசிக்கப் போவதில்லை. ஆகவேதான் தம்பிதுரை முதல் நாடாளுமன்ற உறுப்பினர் அன்வர் ராஜா வரை பாஜகவை விமர்சித்து வருகின்றனர். இப்படி அதிமுக பாஜகவை தங்களுக்கு எக்ஸ்ட்ரா லக்கேஜ் என்று கருதும் நிலையில்தான் பொன்னாரும், தமிழிசையும், குருமூர்த்தியும் அதிமுக தலைமையை நெருங்கி வருகின்றனர். இதன் ஒரு வெளிப்பாடாகத்தான் பாஜகவை தூக்கி சுமக்க நாங்கள் என்ன பாவம் செய்தோம் என்று தம்பிதுரை கேட்ட பிறகும் இது குறித்த கேள்விக்கு சிறு கண்டனத்தை கூட பாஜக தரப்பில் தெரிவிக்காமல் ஒரு படி மேலே சென்று பொன்னார் தனக்கும் தம்பி துரைக்கும் சண்டை மூட்டி விடப் பார்க்கிறீர்களா என்று செய்தியாளர்களிடம் கேட்கிறார்.

அதிமுகவுக்கு நெருக்கடி

அதிமுகவுக்கு நெருக்கடி

அதிமுக தலைமை இப்படி எண்ணிக் கொண்டிருக்க பாஜகவின் டெல்லி தலைமை கூட்டணி தொடர்பாக அதிமுகவுக்கு நெருக்கடி கொடுத்து வருவதாகவே தகவல்கள் வருகின்றன. இந்த நெருக்கடி காரணமாக தேர்தலுக்கு பிந்தைய சூழலில் ஆதரவு அளிக்கலாம் என்று எண்ணியிருந்த அதிமுக தலைமை கூட வேறு வழியில்லாமல் இப்போது பாஜகவோடு கூட்டணி வைக்கலாம் என்று யோசிக்கின்றது என்றே தெரிகிறது. அதற்காக அமமுகவையும் அதிமுகவையும் கூட இணைக்கும் பணிகள் பாஜகவால் செய்யப்பட்டு வருவதாகவும் தகவல்கள் கூறுகின்றன. ஆக அதிமுக என்னதான் பாஜகவை எக்ஸ்ட்ரா லக்கேஜ் என்று எண்ணினாலும் தேர்தல் நெருக்கத்தில் கூட்டணி உறுதியாகிவிடும் என்பதே எதார்த்தம்.

இதுதான் நடக்கப் போகுது

இதுதான் நடக்கப் போகுது

கட்டுரையின் முன் பகுதியில் தற்போது அதிமுக பொதுக்குழுவில் மாவட்டத்திற்கு இருவர் என்ற வகையில் சேர்க்கப்பட்டு வருவதாக கூறியதன் பின்னணியும் இதுதான். வழக்கமாக அதிமுக பொதுக்குழுவே கூட்டணி குறித்த முடிவை எடுக்கும் அதிகாரத்தை வழங்கும் என்ற பட்சத்தில் இபோதிருக்கும் பொதுக்குழு உறுப்பினர்கள் பலரும் பாஜகவுக்கு எதிரான மனநிலையில் உள்ளதால் பாஜகவோடு கூட்டணி என்ற நிலைப்பாட்டை எடுக்க பொதுக்குழுவில் போதிய ஆதரவு இல்லை என்ற நிலை வந்து விடக்கூடாது என்பதற்காகவே இப்போதே மாவட்டத்திற்கு இருவர் என்ற ரீதியில் சேர்க்கைப் படலம் தொடர்கிறதாம்.

English summary
This is an article about ADMK -BJP alliance
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X