ஆளுநர் ரவி வெளியேறியதும்.. முதல்வர் அறையில் நடந்த 8 பேர் மீட்டிங்! எடுக்கப்பட்ட முக்கிய முடிவு! என்ன
சென்னை: தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி இன்று சட்டசபையில் இருந்து வெளியேறியதை கண்டிக்கும் விதமாக நாளை தமிழ்நாடு முழுக்க போராட்டம் நடத்த திமுக திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி... இன்று தொடங்கிய 2025 ஆம் ஆண்டின் முதல் சட்டமன்றக் கூட்டத்தொடரிலிருந்து வெளிநடப்பு செய்தார். ஆளுநர் உரையை வாசிக்காமல் வெளிநடப்பு செய்தார். தனது வேண்டுகோளின்படி, தொடக்கத்தில் தேசிய கீதம் பாடப்படவில்லை என்று குறிப்பிட்டு அவர் வெளிநடப்பு செய்துள்ளார். தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலும், நிறைவில் தேசியகீதமும் இசைப்பதுதானே தமிழ்நாட்டு சட்டமன்ற மரபு

ஆனால் இதை மாற்ற ஆளுநர் ரவி கோரிக்கை விடுத்து வருகிறார். சட்டப்பேரவையில் உரையின் தொடக்கத்தில் தேசிய கீதம் இசைக்கவில்லை என கடந்த ஆண்டு தனது உரையை வாசிக்காமல் இருந்த ஆளுநர் ரவி, இம்முறை அதே காரணத்தைக் கூறி அவையில் இருந்தே வெளியேறினார். ஆளுநர் ரவி இந்த கோரிக்கையை வைத்த போது அதை எதிர்த்து சில எம்எல்ஏக்கள் கூச்சலிட்டதாக கூறப்படுகிறது.
இதனால் ஏற்பட்ட சலசலப்பும் ஆளுநர் ரவி வெளியேற காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.
அதிர்ச்சி சம்பவம்:
தேசிய கீதம் இசைக்கப்படவில்லை என்பதால் தமிழக அரசின் உரையை வாசிக்க மறுத்து சட்டப்பேரவையை விட்டு கவர்னர் வெளியேறிய சம்பவம் இன்று பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.
சபை முடிந்ததும் முதல்வர் அறையில் துரைமுருகன், ஐ.பெரியசாமி, பொன்முடி, உதயநிதி, தங்கம் தென்னரசு, ஏ.வ.வேலு உள்ளிட்ட அமைச்சர்கள் பலரும் கூடினார்கள். கவர்னரின் புறக்கணிப்பு பற்றிதான் விவாதிக்கப்பட்டிருக்கிறது.
திமுக போராட்டம் பிளான்; மக்கள் மன்றத்தை, சட்டமன்ற மரபுகளை தொடர்ச்சியாக கவர்னர் புறக்கணிப் பதாகவும் இதனை வன்மையாக கண்டிக்கும் வகையில் சில எதிர்ப்புகளை நாம் காட்டியாக வேண்டும் என்று அமைச்சர்கள் வலியுறுத்தியிருக்கிறார்கள். அப்போது, ஜனநாயக ரீதியாகவே நம்முடைய எதிர்ப்பைக் காட்டலாம் ; அதனால் தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரில், நம்முடைய கூட்டணிக் கட்சிகளை இணைத்துக்கொண்டு திமுக சார்பில் கவர்னரை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தலாம்.
கவர்னரின் செயல்பாடுகள் மக்களிடம் தெரியும் வகையில் இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்கலாம் என்று துரைமுருகன் சொல்ல, அதை முதல்வர் உட்பட எல்லோரும் ஆமோதித்துள்ளனர். இதனை தொடர்ந்து, திமுக மா.செ.க்களுக்கு அறிவாலயத்தில் இருந்து உத்தரவிடப் பட்டது. கவர்னரை கண்டித்து நாளை தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்துகிறது திமுக.
ஆளுநர் மாளிகை விளக்கம்;
இது தொடர்பாக ஆளுநர் மாளிகை அளித்த விளக்கத்தில், தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று மீண்டும் பாரதத்தின் அரசியலமைப்பு மற்றும் தேசிய கீதம் அவமதிக்கப்பட்டன. தேசிய கீதத்தை மதித்தல் என்பது நமது அரசியலமைப்பில் வகுக்கப்பட்டுள்ள முதலாவது அடிப்படைக் கடமையாகும். அது அனைத்து சட்டப்பேரவைகளிலும் ஆளுநர் உரையின் தொடக்கத்திலும் முடிவிலும் பாடப்படுகிறது. இன்று ஆளுநர் அவர்கள் பேரவைக்கு வரும்போது தமிழ்த்தாய் வாழ்த்து மட்டும் பாடப்பட்டது.
ஆளுநர் அவர்கள் பேரவையிடம் அதன் அரசியலமைப்பு கடமையை மரியாதையுடன் நினைவூட்டியதுடன், தேசிய கீதத்தைப் பாடுவதற்காக அவைத் தலைவரான மாண்புமிகு முதலமைச்சர் அவர்களிடமும் மாண்புமிகு சட்டப்பேரவை சபாநாயகர் அவர்களிடமும் உருக்கமாக வேண்டுகோள் விடுத்தார். ஆனால், அவர்கள் திட்டவட்டமாக மறுத்துவிட்டனர். இது மிகவும் கவலைக்குரிய விஷயமாகும். அரசியல் சாசனம் மற்றும் தேசிய கீதத்தை அப்பட்டமாக அவமதிக்கும் செயல்களுக்கு உடந்தையாக இருந்து விடக்கூடாது என்பதால் ஆளுநர் அவர்கள் கடும் வேதனையுடன் சட்டப்பேரவையை விட்டு வெளியேறினார், என்று கூறப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications