இது லிஸ்ட்லயே இல்லயே! எடப்பாடி அதிமுக பொதுச்செயலாளர் ஆவது “ஸ்டாலின் கையில்”
சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இடையே ஒற்றைத் தலைமைக்கான மோதல் பூதாகரமாகி இருக்கும் சூழலில் முக்கிய முடிவை எடுக்க வேண்டிய சாவி ஸ்டாலின் கைக்கு வந்திருக்கிறது.
அதிமுகவின் பொதுக்குழுவை நடத்தியே தீரவேண்டும் என்று எடப்பாடி தரப்பும், அதை தடுத்தே தீரவேண்டும் என்று பன்னீர் தரப்பும் மல்லுக்கட்டிக்கொண்டிருக்கின்றன.
பொதுக்குழு நடக்க இன்னும் ஒரே ஒரு நாள் இடைவெளி மட்டுமே இருக்கும் நிலையில், இந்த மல்லுகட்டுகள் தற்போது தீவிரமடைந்துள்ளன.

பாதுகாப்பு கேட்ட இபிஎஸ் தரப்பு
பொதுக்குழுவுக்கு பாதுகாப்பு கேட்டு எடப்பாடி தரப்பில் முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் தொடர்ந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், முறைப்படி டிஜிபியிடம் பாதுகாப்புக் கேட்டு அணுக வேண்டும் என்றும், இருதரப்பின் கருத்துக்களைக் கேட்டு தமிழ்நாடு காவல்துறை முடிவெடுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டது. சட்டம் ஒழுங்கு கெட்டுப்போகும் என்பதை சொல்லி பொதுக்குழுவுக்கு தடை விதிக்க ஓபிஎஸ் தரப்பு மேற்கொண்ட முயற்சிக்கு சாதகமான பதில் நீதிமன்றத்திடம் இருந்து கிடைக்கவில்லை.

சாவி ஸ்டாலின் கையில்
பொதுக்குழுவுக்கு தடை விதிக்கவும் உயர்நீதிமன்றம் மறுத்து விட்டது. டிஜிபியை அணுகுமாறு பொதுக்குழு பந்தை காவல்துறை பக்கம் நீதிமன்றம் தள்ளிவிட்டிருப்பதால், பொதுக்குழு நடக்குமா? நடக்காதா? என்ற விவாதம் மேல் மட்டத்தில் நடந்து வருகிறது. தற்போதைய சூழலில், பொதுக்குழுவின் துருப்பு சீட்டு தமிழ்நாட்டை ஆளும் திமுக அரசிடம் இருக்கிறது என்கிறார்கள் விபரமறிந்தவர்கள்.

பாதுகாப்பு கேட்கும் இபிஎஸ்
இதுகுறித்து நம்மிடம் பேசிய காவல்துறையினர், ''சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படலாம் என்பதால் பொதுக்குழுவுக்கான பாதுகாப்பு கேட்டு டிஜிபியை அணுகியுள்ளது எடப்பாடி தரப்பு. அதேபோல, ஓபிஎஸ் தரப்பின் கருத்தையையும் கேட்க வேண்டும் என நீதிமன்றம் சொல்லியிருப்பதால் ஓபிஎஸ் தரப்பின் கருத்தையும் கேட்க வேண்டியுள்ளது. அவர்கள் தரப்பில், சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்பதால் பொதுக்குழுவை அனுமதிக்கக் கூடாது என்றுதான் சொல்லுவார்கள்.

டிஜிபி முடிவு என்ன?
அப்போது, இரு தரப்பின் புகார் மனுக்களையும் பெற்றுக் கொள்கிற டிஜிபி, "இரு தரப்பும் உங்களுக்குள் பேசி ஒற்றுமையாக வந்தால் உரிய பாதுகாப்பை தர முடியும். ஒற்றுமை ஏற்படாத போது பொதுக்குழு கூடுவதற்கு இன்னும் ஒரே ஒரு நாள்தான் இருப்பதால், குறுகிய காலத்தில் போதிய பாதுகாப்பை தர காவல்துறையினரை ஒருங்கிணைப்பது கடினம். அதனால், பொதுக்குழுவை குறிப்பிட்ட காலத்துக்கு தள்ளி வையுங்கள். நடத்தித்தான் ஆக வேண்டுமென அடம் பிடித்தால், சட்டம் ஒழுங்குக்கு எந்த பிரச்சனையும் ஏற்படாது. அப்படி ஏற்பட்டால் அதற்கு நாங்கள் பொறுப்பேற்கிறோம் என எழுதிக் கொடுங்கள். குறுகிய காலத்தில் எங்களால் முடிந்த பாதுகாப்பை தர முயற்சிக்கிறோம் என்றுதான் பேசுவார்.
அதன் பிறகு, இந்த விவகாரத்தில் திமுக அரசின் நிலைப்பாடு என்னவென்பதை அறிந்து முடிவெடுப்பார் டிஜிபி. அதனால், அதிமுகவின் பொதுக்குழு நடப்பது திமுக அரசின் கைகளில் இருக்கிறது '' என்று தெளிவுபடுத்துகிறார்கள்.












Click it and Unblock the Notifications