மோடி வந்துட்டு போனதும்.. பதற்றத்தில் அண்ணாமலை! "சுவாரசிய" விஷயம் நடக்க போகுது? திமுக எம்பி சஸ்பென்ஸ்
சென்னை: பிரதமர் மோடி தமிழ்நாடு வந்து சென்றதில் இருந்து பாஜகவினர் பதற்றமாக இருப்பதாக திமுக எம்பி செந்தில் குமார் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டிற்கு பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி நேற்று சென்னை வந்தார். ரயில் நிலையங்களை சீர்படுத்துவது தொடங்கி பல்வேறு திட்டங்களை நேற்று நேரு அரங்கில் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
பேரறிவாளன் உட்பட 7 பேரும் குற்றவாளிகள்தான்.. நிரபராதிகள் மாதிரி ஸ்டாலின் கொண்டாடுகிறார்: அண்ணாமலை
இந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேசிய கருத்துக்கள் பெரிய அளவில் கவனம் பெற்றன. மாநில உரிமைகள், மொழி உரிமைகள் பற்றி முதல்வர் ஸ்டாலின் நேற்று பேசினார்.
பாஜக ஏற்பாடு
இந்த நிலையில் பிரதமர் மோடியின் வருகைக்காக தமிழ்நாடு பாஜக இந்த முறை மாபெரும் ஏற்பாடுகளை செய்து இருந்தது. பல மாவட்டங்களில் இருந்து தொண்டர்களை சென்னை நோக்கி வரவழைத்து இருந்தது. பல மாவட்டங்களில் இருந்து சென்னை வந்தவர்கள் மோடிக்கு பிரம்மாண்ட வரவேற்பு கொடுத்தனர். ஆடல், பாடல், கலைநிகழ்ச்சிகள் என்று நேற்று ஐஎன்எஸ் அடையாறு முதல் நேரு ஸ்டேடியம் வரை மிக சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது.
சிறந்த ஏற்பாடு
பாஜகவினரே வியக்கும் வகையில் இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. ஆனால் பிரதமர் மோடி சென்ற பின் அண்ணாமலை கடுமையான விமர்சனங்கள் சிலவற்றை ஆளும் திமுகவிற்கு எதிராக வைத்தார். முக்கியமாக பிரதமர் மோடியை மேடையில் வைத்துக்கொண்டு முதல்வர் ஸ்டாலின் பேசிய விஷயங்களை அண்ணாமலை கடுமையாக விமர்சனம் செய்தார்.
அண்ணாமலை விமர்சனம்
முதல்வர் ஸ்டாலினை பற்றி அண்ணாமலை விமர்சனத்தில், இந்தியாவின் ஒரு சாதாரண குடிமகனாகவும், பெருமை வாய்ந்த தமிழனாக முதல்வரின் பேச்சு என்னை வெட்கம் அடைய வைக்கிறது. தமிழ்நாடு முதல்வர் அரசியல் செய்துள்ளார். , தமிழக முதலமைச்சரின் மோசமான நடத்தையால் நான் வெட்கப்படுகிறேன். இது நாகரீகம் அற்ற செயல். எங்கள் முதல்வர் கருணை காட்டுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இல்லை.
அண்ணாமலை கடும் விமர்சனம்
அவர் பேச்சுக்கு நாங்கள் பதிலடி கொடுப்போம். அவர் சொன்ன ஒவ்வொரு கருத்துக்கும் நாங்கள் முறையாக பதிலடி அளிப்போம். முதல்வர் இப்படி நடந்து கொள்வார் என்று எதிர்பார்க்கவில்லை. பிரதமரை மேடையில் அமரவைத்து இப்படி பேசியது தவறு என்று அண்ணாமலை குறிப்பிட்டு இருக்கிறார். அதேபோல் முதல்வர் ஸ்டாலினுக்கு பாஜகவின் மத்திய இணையமைச்சர் எல் முருகன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
எல் முருகன்
தமிழகத்துக்கு பல வளர்ச்சி திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்துள்ளார். விழாவில் தமிழ் கலாசாரம், மொழி பற்றி பெருமையாக பிரதமர் மோடி பேசினார். ஆனால் ஸ்டாலின் முதல்வர் பதவிக்கு தகாத முறையில் நடந்துள்ளது வெட்கக்கேடானது . முதல்வர் ஸ்டாலின் இதை அரசியல் நிகழ்வு போல கருதி உள்ளார். அவரின் பேச்சில் இடம்பெற்ற கருத்துக்கள் அவரின் தவறை மூடி மறைக்கும் செயல் என்று எல் முருகன் குறிப்பிட்டுள்ளார்.
திமுக எம்பி
இந்த நிலையில்தான் அண்ணாமலை கருத்து தற்போது திமுக எம்பி செந்தில் குமார் பதிலடி கொடுத்துள்ளார். அதில், பிரதமர் சென்னை வந்து சென்ற பின் தமிழக பாஜகவின் கதறல் ரொம்ப அதிகமாவே இருக்கு. திரு. அண்ணாமலை பதற்றமாகவே காணப்படுகிறார். சில சுவாரசியமான விஷயங்கள் நடக்க போகிறது என்று குறிப்பிட்டு இருக்கிறார். அண்ணாமலை நேற்று இரவோடு இரவாக கோபமாக பேட்டி அளித்த நிலையில்தான் செந்தில் குமார் எம்பி இப்படி கருத்து தெரிவித்துள்ளார்.