கிடுகிடுவென உயரும் தங்கத்தின் விலை.. பின்னாடி இப்படி ஒரு காரணமா? ஆனாலும் இன்று பெரிய சந்தோஷம்
சென்னை: தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவிற்கு நேற்று உயர்ந்தது. ஒரு பவுன் தங்கம் 46200 ரூபாய் ஆக உயர்ந்தது. ஒரு கிராம் தங்கம் ரூ.5775 ஆகவும் இருந்தது. இன்று அதிரடியாக சரிந்து ஒரு கிராம் 5692 ரூபாய் ஆகவும், ஒரு பவுனுக்கு 664 ரூபாய் குறைந்து, 45536 ரூபாய் என்கிற அளவிலும் சென்னையில் விற்பனையாகிறது.
இது ஜிஎஸ்டி மற்றும் செய்கூலி சேதாரம் இல்லாத விலை. இவற்றை சேர்த்தால் கண்டிப்பாக ஒரு பவுன் இன்னும் சில ஆயிரங்கள் கூடுதலாகவே இருக்கும்.

சரி தங்கம் விலை ஏன் இந்த அளவிற்கு உயர்கிறது என்று தெரியுமா? உலகில் எல்லாவற்றுக்கும் மேலான மதிப்பு தங்கத்திற்கு உண்டு. உலகின் எல்லா நாட்டு பொருளாதாரத்திலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியது தங்கம்.
ஏழை, பணக்காரர் என எல்லாருமே தங்கத்தை அழகுக்காக மட்டுமின்றி ஆத்திர அவசரத்திற்கு கடன் பெறவும் வாங்குகிறார்கள். தங்கம் இந்தியாவில் கலாச்சாரத்தின் ஒரு அங்கமாக உள்ளது. மற்ற பொருட்களை இங்கு விற்பது கடினம். ஆனால் தங்கத்தை கொடுத்தால் அடுத்த நொடி காசு கிடைக்கும். அப்படிப்பட்ட தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்தது.
40 ஆயிரத்தை தொட்ட போது ஆச்சர்யப்பட்ட மக்கள், அந்த தங்கம் அடுத்த சில மாதங்களில் 46 ஆயிரத்தை தொடப்போகுது என்று தெரியாமல் இருந்தார்கள். ஆம் நேற்று தங்கம் விலை வரலாற்றில் முதல் முறையாக ஒரு பவுன் 46200ஐ தொட்டது. ஒரு கிராம் தங்கம் விலை 5 ஆயிரத்து 775க்கு நேற்று விற்பனையானது. இதற்கு ஜிஎஸ்டி , செய்கூலி சேதாரத்தை சேர்த்தால் இன்னும் சில ஆயிரம் கூடுதலாக கொடுக்க வேண்டிய நிலை இருந்தது.
இந்த விலை உயர்வின் மூலம் ஏழைகள் மற்றும் நடுத்தர மக்களுக்கு தங்கம் எட்டாக்கனியாக மாறி உள்ளது. இந்தியாவில் தங்கம் வெளிநாடுகளில் இருந்து தான் இறக்குமதி செய்யப்படுகிறது. தொடர்ந்து விலை ஏறிக்கொண்டு இருப்பதால், தங்கத்தை இறக்குமதி செய்வது அதிரடியாக குறைந்துவிட்டது. கடந்த 2022-ம் ஆண்டு 26 சதவீதம் குறைந்து, 706 டன் மட்டுமே இறக்குமதி செய்யப்பட்டிருக்கிறது.
இது ஒருபுறம் எனில், எங்கு எந்த நாட்டில் பொருளாதார பிரச்சனை என்றாலும், மக்கள் சட்டென தங்கத்தில் முதலீடு செய்கிறார்கள்.குறிப்பாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் நிலவும் மந்தமான பொருளாதார நிலையால் பங்குச்சந்தையில் உள்ள முதலீடுகளை எடுத்து தங்கத்திலேயே முதலீடு செய்கிறார்கள்.
டாலரின் மதிப்பு குறைந்தாலோ அல்லது அந்நாட்டு வங்கிகளில் சூழ்நிலை சரியில்லாத பட்சத்தில் தங்கத்தில் முதலீடு செய்வதே பாதுகாப்பானது என கருதி சேமிக்கிறார்கள். மேலும் வருமான வரி பிரச்சனையும் முக்கிய காரணமாக உள்ளது. இப்படி பல வகையிலும் தங்கத்தில் பணத்தை போட மக்கள் விரும்புவதால், அதற்கு பலத்த கிராக்கி ஏற்பட்டுள்ளது.
இதனிடையே ஆறுதல் தரும் விஷயமாக தங்கம் விலை இன்று அதிரடியாக குறைந்துள்ளது. இன்று அதிரடியாக சரிந்து ஒரு கிராம் 5692 ரூபாய் ஆகவும், ஒரு பவுனுக்கு 664 ரூபாய் குறைந்து, 45536 ரூபாய் என்கிற அளவிலும் சென்னையில் விற்பனையாகிறது.
எனினும் சர்வதேச அளவில் நிலவும் பல பிரச்சினைகளால் தங்கத்தின் விலை மேலும் உயரப்போகும் அபாயம் இருப்பதாக வல்லுனர்கள் தெரிவிக்கிறார்கள். இந்தியாவில் தங்கம் விலை அதிகரித்து கொண்டு இருப்பதற்கு இறக்குமதி வரி 12.5 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது முக்கிய காரணம் என்கிறார்கள். இறக்குமதி வரியை குறையை குறைக்க அரசு முன்வர வேண்டும் என்று வர்த்தகர்கள் கோரிக்கை வைக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications