மொத்தமா போச்சு..? ஜீரோ ஆகிட்டோம்? மைனா நந்தினி வெளியிட்ட வீடியோ: என்ன ஆனது?
சென்னை: தொழில்நுட்ப ரீதியாக ஏற்பட்ட பிரச்சினையால் தங்களின் வாழ்க்கையின் பொருளாதார நிலை ஜீரோ ஆகிவிட்டதாக விஜய் தொலைக்காட்சி பிரபலம் மைனா நந்தினியும் அவரது கணவரும் ஒரு காணொளிப் பதிவை வெளியிட்டுள்ளனர்.
விஜய் டிவி மூலம் பிரபலமானவர் மைனா நந்தினி. டிவி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாக வலம் வந்த அவர், அதைவிட்டுவிட்டு சில ஆண்டுகளாகவே தனியாக யூடியூபில் விலாக் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அதை லட்சக்கணக்கான பேர் பார்த்து வருகின்றனர். இது இல்லாமல் தனியே ஒரு யூடியூப் சேனலில் அவரது கணவர் யோகேஷ்வரமுடன் சேர்ந்து இவர் புள்ளத்தாச்சி என்ற ஒரு தொடரை வெளியிட்டும் வந்தார்.

இந்தத் தொடர் இதுவரை மொத்தம் 7 எபிசோட் முழுமையாக ஷூட் செய்யப்பட்டு அதில் 2 பாகங்கள் மட்டும் வெளியாகியிருந்த நிலையில், அந்தத் தொடருக்கு மூடு விழா நடத்தி இருக்கிறது இந்த ஜோடி. ஏன்? என்ன ஆனது? என்பது பற்றி மைனா தன் கணவருடன் ஒரு சோக வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார்.
அதில் பேசிய மைனா நந்தினி, "சமீபத்தில் இலங்கை சென்றுவந்தோம். அங்கே புள்ளத்தாச்சிக்காகப் படப்பிடிப்பும் நடத்தி இருந்தோம். அந்தக் காட்சிகளை ஹாட் டிஸ்கில் போட்டு எடுத்து வந்தோம். அதைச் சென்னை வந்ததும் எடிட் செய்வதற்காக தனித்தனியாகப் பிரித்து வைத்தோம். இறுதியாக ஹாட் டிஸ்கை கம்ப்யூட்டரில் போட்டுப் பார்த்தால் இணைப்பு கிடைக்கவில்லை. பல மணி நேரம் போராடினோம். அந்தப் படப்பிடிப்புக் காட்சிகளை மீட்க முடியவில்லை.
இதுவரை சம்பாதித்த பணம் மட்டும் இல்லாமல் மேற்கொண்டு கைகாசை போட்டு எடுத்த அத்தனைக் காட்சிகளும் போய்விட்டது. என்ன செய்வது என்றே தெரியவில்லை. என் மனம் உடைந்து போய்விட்டது" என்று மைனா நந்தினி வேதனையுடன் பேசி இருக்கிறார்.
அவரது கணவர் யோகேஷ்வரம், "நாங்கள் முன்கூடியே 2 ஹாட் டிஸ்கில் அதைப் போட்டு வைத்திருக்கவேண்டும். மொத்தம் 800ஜிபி ஃபுட்டேஜ். அதை இரண்டு ஹாட் டிஸ்கில் கொண்டுவருவது கடினம் எனக் கொஞ்சம் சோம்பேறித்தனம் காட்டிவிட்டோம். அதன் விளைவுதான் இது. அதை மீட்க சில லட்சங்கள் கேட்டனர். இப்போதைக்கு அந்தளவு முதலீடு இல்லை. எங்கள் வங்கிக் கணக்கு இப்போதைக்கு ஜீரோவில் உள்ளது. ஆக, செலவு செய்து மீட்பது கடினம்" என்று வருத்தப்பட்டுப் பேசி இருக்கிறார்.
தொடர்ந்து பேசிய அவர், "உங்களிடமா பணம் இல்லை. நிறைய விளம்பரம் வருகிறதே என்று கூட கேட்கலாம். ஆனால், இதுதான் நிஜம். இந்தப் புள்ளத்தாச்சி சீரியல் ஆரம்பித்தது முதல் பல அடிகள். எனக்கு உடல்நிலை சரியில்லை. அடுத்து எடிட்டருக்கும் உடல்நிலை சரியில்லை. இரவு பகலாகத் தூக்கம் இல்லாமல் வேலை பார்த்த கேமிரா மேன் கடுமையாக உழைத்திருந்தார். அத்தனை பேர் உழைப்பும் வீணாகிவிட்டது" என்று கூறியுள்ளார்.
அதாவது புள்ளத்தாச்சிக்காக இந்த ஜோடி ஷூட் செய்த 11 நாட்களுக்கான அனைத்து காட்சிகளும் ஹாட் டிஸ்க் பிரச்சினையால் வீணடிக்கப்பட்டுள்ளது. தவறுதலாகக் கீழே விழுந்த ஹாட் டிஸ்க் மீண்டும் வேலை செய்யவில்லை. இதனால்தான் மொத்த உழைப்பும் வீணாகியுள்ளது.
மீண்டும் படப்பிடிப்பு நடத்த வேண்டும் என்றால் அதே மேக் அப், அதே உடைகள், அதற்கானக் காட்சிகளைத் திரும்ப எடுக்க பல இடங்கள் பயணிக்க வேண்டும், ஊழியர்களுக்குச் சம்பளம், டப்பிங், பின்னணி இசை என கிடைக்கப் போகும் லாபத்தைவிடப் பல மடங்கு நஷ்டமே வரும். அதை உணர்ந்தே இந்த மூடு விழா முடிவுக்கு வந்துள்ளனர் இந்த இருவரும்.
ஆகவே சீரியல் இனி தொடராது. புள்ளத்தாச்சிக்குப் பதில் வேறு புதிய சீரியலை தொடங்க பணம் வேண்டும். இதில் ஏற்பட்ட நஷ்டம் இவர்களின் ஒட்டுமொத்த சீரியல் வாழ்க்கையை முடக்கிப் போட்டுள்ளது. இந்த ஜோடிக்கு ஏற்பட்டுள்ள இழப்புக்குப் பார்வையாளர்கள் பலர் ஆறுதலாகக் கருத்து தெரிவித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications