விஜயகாந்த் One Side Love… ராதிகா விலகியது ஏன்? .. ரகசியம் உடைத்த மதுரக்கார நண்பன்
சென்னை: விஜயகாந்த் மரணத்தை ஒட்டி பல யூடியூப் சேனல்கள் அதிகம் பேசியது ராதிகாவுடன் விஜயகாந்த்திற்கு இருந்த காதல் விசயத்தைப் பற்றித் தான். அந்தளவுக்குப் பரவலாக அந்தக் காதல் கதை உலகம் அறிந்த செய்தியாக இருந்திருக்கிறது.
ஆனால், அது பற்றி விஜயகாந்த்தோ அல்லது அவரது உறவினர்களோ பேசியதில்லை. அது ஒரு சிதம்பர ரகசியமாகவே இருந்து வந்தது. இப்போது விஜயகாந்த் நண்பர் திருப்பதி அந்த ரகசியத்தை உடைத்துப் பேசி இருக்கிறார்.

மதுரையில் விஜயகாந்த், இப்ராஹிம் ராவுத்தர், முன்னாள் எம்.எல்.ஏ சுந்தராஜ் என இருபது நண்பர்கள் அடங்கிய நட்பு வட்டத்திலிருந்தவர் திருப்பதி. அவர் விஜயகாந்த் காதல், ராதிகாவை ஏன் திருமணம் செய்யவில்லை என்பது பற்றி எல்லாம் பேசி இருக்கிறார்.
"நாங்கள் 20 பேர் நண்பர்கள். நாங்கள் அனைவரும் மேலமாசி மூல வீதியில் சந்திப்போம். அங்கேதான் எங்கள் அலுவலகம் இருந்தது. அங்கே உட்கார்ந்து தான் அரட்டை அடிப்போம்.
இரவு நேரங்களில் சினிமாவுக்குப் போவோம். விஜயகாந்த் அப்பா ஒரு கவுன்சிலர். அவருக்கு ரைஸ் மில் இருந்தது பலருக்கும் தெரிந்த விசயம். ஆகவே விஜயகாந்த் வசதியாக இருந்தார்.

நண்பர்கள் அனைவருக்கும் அவர்தான் செலவு செய்வார். சினிமாவுக்குப் போனாலும் டீ குடிக்கப் போனாலும் தினம் 15 பேருக்குச் செலவு செய்வார். சினிமாவுக்கு வாய்ப்புத் தேடிப் போன காலத்தில்தான் அவர் கொஞ்சம் கஷ்டப்பட்டார். ஊரில் இருக்கும்போது செழிப்பாகவே இருந்தார்.
அந்தக் காலத்திலேயே விஜயகாந்த்தை நாங்கள் 'பாஸ்' என்றுதான் கூப்பிடுவோம்.

சேனா ஃபிலிம்ஸ் என்று ஒரு சினிமா கம்பெனி இருந்தது. அந்த கம்பெனி முதலாளிதான் 'அன்னக்கிளி', 'ஆசை அறுபது நாள்' போன்ற படங்களை விநியோகம் செய்தவர். அவருடன் எங்களுக்கு நட்பு இருந்தது. அவர் 'ஆசை அறுபது நாள்' வெற்றி விழா கொண்டாடினார். அந்த விழாவுக்கு ரஜினிகாந்த்தை மதுரைக்கு அழைத்திருந்தார்.
அப்போது அவர் எங்களின் உதவியை நாடினார். 'ரஜினியை அழைத்திருக்கிறேன். விழாவுக்கு அதிக கூட்டம் வரும். ஆகவே பாதுகாப்புப் பணிகளில் எனக்கு நீங்கள் உதவி செய்யுங்கள்' என்று கேட்டார். நாங்கள் எல்லோரும் போய் ரஜினிக்கு பாடிகாட் ஆக இருந்து பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டோம்.

அந்த விழாவுக்கு வந்த ரஜினி, அன்றைக்கே விஜயகாந்த்தைப் பார்த்ததும் 'இந்தப் பையன் என்னைப் போலவே இருக்கானே' என்று சொன்னார். அதைக்கேட்ட சேனா முதலாளி சரியாக ஒருவாரம் கழித்து விஜயகாந்த்தை மெட்ராஸுக்குப் போவோம் வா என்று அழைத்தார்.
நான் உன்னை நடிகனாக்கிவிடுகிறேன் என்று அழைத்துச் சென்று 'இனிக்கும் இளமை' என்ற படத்தின் இயக்குநர் எம்.ஏ.காஜாவிடம் எடுத்துச் சொல்லி அறிமுகப்படுத்தினார். அதுதான் விஜய காந்த்துக்கு முதல் படம்" என்று பல கதைகள் பேசும் திருப்பதி தனது வீட்டு கிரஹ பிரவேசம் நிகழ்ச்சியை விஜயகாந்த்துக்குச் சொல்லவில்லை. அவர் நடிகர். ஆகவே அவர் வந்தால் கூட்டம் கூடிவிடும் என்று சொல்லாமல் தவிர்த்துள்ளார்.

ஆனால் நண்பனுக்கு அந்தத் தகவல் போய்விட்டது. அழைக்காமலே மறுநாள் கிரஹ பிரவேசத்திற்கு முதல் ஆளாக வந்திருக்கிறார் விஜயகாந்த்.
பெரிய நடிகராக வளர்ந்த பிறகும் ஒவ்வொரு தீபாவளிக்கு மதுரைக்கு வந்து விடுவாராம் விஜயகாந்த். ஊர் வந்த அவர், ஒவ்வொரு நண்பர் வீட்டுக்கும் போய் அவர்கள் வீட்டுத் தீபாவளி பலகாரங்களை வாங்கி ருசிப்பாராம். இப்படிக் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு வரை மதுரைக்கு வந்துள்ளார். உடல்நிலை மோசமான பின்பே அவர் தன் நண்பர்களைப் பார்ப்பது நின்றுள்ளது.
விஜயகாந்த் தன் நண்பர் வட்டாரத்தில் உள்ள பலருக்குப் பல உதவிகளைச் செய்துள்ளார். ஒருவருக்குச் சைக்கிள் கடை வைத்துத் தந்துள்ளார். பால் பாண்டி என்பவருக்குக் கொட்டகை போடும் வேலை பார்த்து வந்துள்ளார். அந்தத் தொழிலைச் சொந்தமாக நடத்தப் பல உபகரணங்களை வாங்கி கொடுத்துள்ளார்.

"விஜயகாந்த்துக்கு ஒன் சைட் லவ் இருந்தது. அந்தப் பெண் யார் என்று எங்களிடம் சொன்னதில்லை. நாங்களே கண்டு பிடித்து ஒருமுறை கேட்டோம். 'என்ன அடிக்கடி பைக் எடுத்துக்கொண்டு தனியா போற? என்ன விசயம்?' என விசாரித்தோம். 'ஒரு லவ் மேட்டர்' என்று மட்டும் சொன்னார். அதன்பிறகு அதை பெரியதாக விவாதிக்கவில்லை. கடைசி வரை அவர் காதலித்த பெண் யார் என்றே எங்களுக்குத் தெரியாது" என்கிறார் திருப்பதி.
ராதிகா, விஜயகாந்த் காதல் விவகாரம் பற்றி எல்லாம் திருப்பதிக்குத் தெரிந்துள்ளது. அது பற்றிய தகவல்களையும் அவர் சொல்கிறார். "ராதிகாவை காதலித்தது உண்மைதான். திருமணம் செய்ய இருந்ததும் உண்மைதான்.

ஆனால், அப்போது அவர் வளர்ந்து வரும் நடிகராக இருந்தார். திருமணம் நடந்தால் வளர்ச்சி பாதிக்கப்படும் என்பதற்காகத் திருமணத்தைத் தள்ளிப் போட வேண்டும் என்று இப்ராஹிம் ராவுத்தர் சொன்னார். ராதிகாவை வேண்டாம் என்று அவர் சொல்லவில்லை.
நாங்கள் கூட ராதிகாவை மணப்பார் என்று எதிர்பார்த்தோம். அதன்பிறகு அது தள்ளிப்போனது. கடைசியில் பிரேமலதாவைப் பெண் பார்த்து முடித்தார்கள். திருமணம் செய்து கொண்டார்.
நாங்கள்தான் திருமணத்தை முன்னின்று நடத்தினோம். மதுரையில்தான் நடத்தினோம். கூட்டம் என்றால் அவ்வளவு கூட்டம். எல்லா நடிகர் நடிகைகளும் வந்திருந்தார்கள். கலைஞர்தான் தலைமைத் தாங்கி நடத்திவைத்தார்.
பெரிய கூட்டம் வந்ததால், நண்பர்கள் நாங்கள் யாரும் குடும்பத்தை அழைத்துப் போகவில்லை. அதன்பின்னர் எங்களை ஏன் குடும்பத்துடன் வரவில்லை என விசாரித்தார். விசயத்தைச் சொன்னது நண்பர்களுக்காகத் தனியாக ஒரு மண்டபம் புக் செய்து ஒரு நிகழ்ச்சி நடத்தினார். அவ்வளவு தங்கம் சார் அவர்" என்கிறார்












Click it and Unblock the Notifications