சென்னையில் 3 தொகுதிகளிலும் மநீம செம.. பல தொகுதிகளில் அபாரம்.. மாற்று சக்தியாக மாறும் கமல்ஹாசன்
Recommended Video
சென்னை: விஜயகாந்த் தீவிர அரசியலில் இருந்து ஓய்வு பெற்றுள்ள நிலையில், அந்த இடத்தை பிடிக்கும் மகத்தான சக்தியாக கமல்ஹாசன் உருவெடுத்துள்ளார்.
2006ம் ஆண்டு தேமுதிக தொடங்கப்பட்டதும், முதல் முறையாக தனித்து நின்று, அந்த சட்டசபை தேர்தலில், 8.4 விழுக்காடு வாக்குகளை பெற்றது. விஜயகாந்த் மட்டும் விருதாச்சலத்தில் வெற்றி பெற்றார்.
ஆனால் இந்த வாக்கு வங்கி பெரும் ஆச்சரியம் தந்தது உண்மை. இதற்கு அடுத்த லோக்சபா தேர்தலில் தனித்து போட்டியிட்டு 10.3 சதவீதம் ஓட்டுக்களை பெற்றது. எங்கும் வெற்றிதான் பெற முடியவில்லை.

தேமுதிக
வாக்கு சதவீதத்தை வெற்றியாக மாற்றும் நோக்கில் 2011ல் அதிமுகவோடு தேமுதிக கூட்டணி வைத்தது. அதில் 41 தொகுதிகளில் போட்டியிட்டு, 29 தொகுதிகளில் வென்றது. வாக்கு சதவீதம் 7.9 ஆகும். குறைந்த தொகுதிகளில் போட்டியிட்டதால் வாக்கு சதவீதம் குறைவாக இருந்தபோதிலும், அதன் வெற்றி விழுக்காடு சூப்பர் என சொல்லும் அளவுக்கு இருந்தது. ரிஷிவந்தியம் தொகுதியில் வென்ற விஜயகாந்த், எதிர்க்கட்சி தலைவரானார்.

சாதித்த விஜய காந்த்
அதிமுகவோடு கூட்டணி வைத்து பிறகு ஜெயலலிதாவுடன் விஜயகாந்த் சட்டசபையில் மோதலில் ஈடுபட்டு கூட்டணி பிரிந்த பிறகு, தேமுதிகவுக்கு இறங்குமுகம்தான். கடந்த சட்டசபை தேர்தலில் மக்கள் நல கூட்டணியில் போட்டியிட்ட தேமுதிக ஒரு இடத்திலும் வெற்றி பெற முடியாமல் 2.4 சதவீதம் வாக்குகளைத்தான் பெற்றது. ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்களை தில்லோடு எதிர்த்த விஜயகாந்த்தை மக்கள் உச்சத்தில் வைத்து கொண்டாடியதன் விளைவுதான் அவருக்கு கிடைத்த எதிர்க்கட்சி தலைவர் பதவி. அதுவும் கட்சி ஆரம்பித்த ஐந்தே வருடங்களில் இதை சாதித்தார்.

மாற்று சக்தியாக கமல்ஹாசன்
தற்போது விஜயகாந்த் உடல்நலக்குறைவால் தீவிர அரசியலில் ஈடுபடவில்லை. அவரது மனைவி பிரேமலதா பிரச்சாரங்களை மக்கள் ரசிக்கவில்லை. எனவே படுபாதாளத்திற்கு தேமுதிக சென்று கொண்டுள்ளது. ஆனால், கட்சி துவங்கி ஒரே வருடம் ஆகியுள்ள குட்டிக் குழந்தை மக்கள் நீதி மய்யம், இம்முறை லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் மாற்று சக்தியாக உருவெடுத்துள்ளது. உண்மையான அதிமுக நாங்கள்தான் என்று மார்தட்டிய அமமுக, மக்கள் நீதி மய்யத்தைவிட வயதில் மூத்த நாம் தமிழர் ஆகியோரைவிடவும், பல தொகுதிகளில் கமல்கட்சி அதிக வாக்குகளை பெற்றுள்ளது.

நகர்ப்புறங்கள்
குறிப்பாக சென்னை போன்ற நகர்ப்புற மக்களிடம் கமல்ஹாசன் அரசியல் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பிக்பாஸ் போன்ற ஷோக்கள் பெண்கள் மத்தியில் முன்பைவிடவும் இப்போது அதிக ரீச்சை கொடுத்துள்ளது. சென்னையின் 3 தொகுதிகளிலும், மக்கள் நீதி மய்யம் 3வது இடத்தை பிடித்து அசத்தியுள்ளது. பழம் தின்று கொட்டை போட்டு, களத்தில் நிறைய நிர்வாகிகளை கொண்ட, திமுக, அதிமுகவுக்கு அடுத்த மநீம 3வது இடம் என்பது அசாத்தியமான உண்மை.

சென்னையில் அசத்தல்
மதியம் நிலவரப்படி, வட, தென், மத்திய சென்னை, கோவை, பொள்ளாச்சி, திருப்பூர், ஈரோடு, சேலம், பாண்டிச்சேரி உள்ளிட்ட தொகுதிகளில் கணிசமான வாக்குகளுடன் மக்கள் நீதி மய்யம் தொடர்ந்து மூன்றாமிடம் வகித்து வந்தது. மக்கள் நீதி மய்யம் எத்தனை சதவீதம் வாக்குகளை பெறுகிறது என்பது வாக்கு எண்ணிக்கை இறுதியில் தெரிந்துவிடும். ஆனால், முன்னணி நிலவரத்தை வைத்து பார்த்தால், கணிசமான வாக்கு வங்கியை ம.நீ.ம உருவாக்கும் என்பது உறுதியாகியுள்ளது.

மக்கள் ஆசிர்வாதம்
விஜயகாந்த்துக்கு மாற்று சக்தி என்ற அந்தஸ்தை மக்கள் கொடுத்துள்ளனர். அதன்பிறகு, கமல்ஹாசனுக்கு அந்த இடத்தை தந்துள்ளனர். இது தினகரன் போன்றோருக்கெல்லாம் கிட்டாதது. தனித்து போட்டி என்ற முடிவில் கமல்ஹாசன் உறுதியாக இருந்தால், வருங்காலங்களில், இவர் மீதான நம்பகத்தன்மை அதிகரித்து கட்சி வளர்ச்சிக்கு அது உரமாகும். சினிமா புகழ் என்பது இதற்கு வலு சேர்க்கும்.












Click it and Unblock the Notifications